நீல மார்தரு கண்டனே நெற்றியோர் கண்ணனே யொற்றைவிடைச் சூல மார் தரு கையனே துன்றுபைம் பொழில்கள் சூழ்ந்தழகாய கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள் சால நீடல மதனிடைப் புகழ்மிகத் தாங்குவர் பாங்காவே.
|
1
|
பங்க யம்மலர்ச் சீறடிப் பஞ்சுறு மெல்விர லரவல்குல் மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென மிழற்றிய மொழியார்மென் கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள் சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு அருள்பெறல் எளிதாமே.
|
2
|
நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும் அடியவர் தமக்கெல்லாம் செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர் செல்வமல் கியநல்ல கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற் கொழுந்தே யென்றெழுவார்கள் அம்பொ னார்தரு முலகினில் அமரரோ டமர்ந்தினி திருப்பாரே.
|
3
|
பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா மாங்கனி பயில்வாய கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள் அன்னஞ்சேர்ந் தழகாய குலவும் நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற் கொழுந்தேயென்றெழுவார்கள் நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை நீடிய புகழாரே.
|
4
|
உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும் அன்பராம் அடியார்கள் பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு பத்திசெய் தெத்திசையும் குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள் அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய் அவனருள் பெறலாமே.
|
5
|
Go to top |
துன்று வார்சடைத் தூமதி மத்தமுந் துன்னெருக் கார்வன்னி பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம் புலியுரி யுடையாடை கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற் கொழுந்தே யென்றெழுவாரை என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை ஏதம்வந் தடையாவே.
|
6
|
மாட மாளிகை கோபுரங் கூடங்கண் மணியரங் கணிசாலை பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம் பரிசொடு பயில்வாய கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள் கேட தொன்றில ராகிநல் லுலகினிற் கெழுவுவர் புகழாலே.
|
7
|
ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை யெடுத்தலும் உமையஞ்சிச் சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு நாளவற் கருள்செய்த குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தினைத் தொழுவார்கள் தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந் தவமுடை யவர்தாமே.
|
8
|
பாடி யாடும்மெய்ப் பத்தர்கட் கருள்செயும் முத்தினைப் பவளத்தைத் தேடி மாலயன் காணவொண் ணாதவத் திருவினைத் தெரிவைமார் கூடி ஆடவர் கைதொழு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள் நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில் நிகழ்தரு புகழாரே.
|
9
|
கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற் கொழுந்தினைச் செழுந்திரளைப் பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா மெய்யன்நல் லருளென்றும் காண லொன்றிலாக் காரமண் தேரர்குண் டாக்கர்சொற் கருதாதே பேணல் செய்தர னைத்தொழும் அடியவர் பெருமையைப் பெறுவாரே.
|
10
|
Go to top |
பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப் பாவையோ டுருவாரும் கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற் கொழுந்தினைச் செழும்பவளம் வந்து லாவிய காழியுள் ஞானசம் பந்தன்வாய்ந் துரைசெய்த சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே.
|
11
|