அண்ணாவுங் கழுக்குன்று மாயமலை யவைவாழ்வார் விண்ணோரு மண்ணோரும் வியந்தேத்த வருள்செய்வார் கண்ணாவா ருலகுக்குக் கருத்தானார் புரமெரித்த பெண்ணாணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
|
1
|
கருமானி னுரியுடையர் கரிகாட ரிமவானார் மருமானா ரிவரென்று மடவாளோ டுடனாவர் பொருமான விடையூர்வ துடையார்வெண் பொடிப்பூசும் பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே.
|
2
|
குணக்குந்தென் றிசைக்கண்ணுங் குடபாலும் வடபாலும் கணக்கென்ன வருள்செய்வார் கழிந்தோர்க்கு மொழிந்தோர்க்கும் வணக்கம்செய் மனத்தராய் வணங்காதார் தமக்கென்றும் பிணக்கஞ்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
|
3
|
இறைக்கொண்ட வளையாளோ டிருகூறா யொருகூறு மறைக்கண்டத் திறைநாவர் மதிலெய்த சிலைவலவர் கறைக்கொண்ட மிடறுடையர் கனல்கிளருஞ் சடைமுடிமேல் பிறைக்கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
|
4
|
விழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள் பலபேசிக் குழையாதார் குழைவார்போற் குணநல்ல பலகூறி அழையாவு மரற்றாவு மடிவீழ்வார் தமக்கென்றும் பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
|
5
|
Go to top |
விரித்தார்நான் மறைப்பொருளை யுமையஞ்ச விறல்வேழம் உரித்தாரா முரிபோர்த்து மதின்மூன்று மொருகணையால் எரித்தாரா மிமைப்பளவி லிமையோர்க டொழுதிறைஞ்சப் பெருத்தாரெம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
|
6
|
மறப்பிலா வடிமைக்கண் மனம்வைப்பார் தமக்கெல்லாம் சிறப்பிலார் மதிலெய்த சிலைவல்லா ரொருகணையால் இறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றும் கேடிலார் பிறப்பிலாப் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
|
7
|
எரியார்வேற் கடற்றானை யிலங்கைக்கோன் றனைவீழ முரியார்ந்த தடந்தோள்க ளடர்த்துகந்த முதலாளர் வரியார்வெஞ் சிலைபிடித்து மடவாளை யொருபாகம் பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
|
8
|
சேணியலு நெடுமாலுந் திசைமுகனுஞ் செருவெய்திக் காணியல்பை யறிவிலராய்க் கனல்வண்ண ரடியிணைக்கீழ் நாணியவர் தொழுதேத்த நாணாமே யருள்செய்து பேணியவெம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
|
9
|
புற்றேறி யுணங்குவார் புகையார்ந்த துகில்போர்ப்பார் சொற்றேற வேண்டாநீர் தொழுமின்கள் சுடர்வண்ணம் மற்றேரும் பரிமாவு மதகளிறு மிவையொழியப் பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
|
10
|
Go to top |
பைம்பொன்சீர் மணிவாரிப் பலவுஞ்சேர் கனியுந்தி அம்பொன்செய் மடவரலா ரணிமல்கு பெருவேளூர் நம்பன்றன் கழல்பரவி நவில்கின்ற மறைஞான சம்பந்தன் தமிழ்வல்லார்க் கருவினைநோய் சாராவே.
|
11
|