விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடலரவம் மங்குலொடு நீள்கொடிகண் மாடமலி நீடுபொழின் மாகறலுளான் கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான் செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.
|
1
|
கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவி னெய்தியழகார் மலையினிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான் இலையின்மலி வேல்நுனைய சூலம்வல னேந்தியெரி புன்சடையினுள் அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.
|
2
|
காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர் மாலைவழி பாடுசெய்து மாதவர்க ளேத்திமகிழ் மாகறலுளான் தோலையுடை பேணியதன் மேலொர்சுடர் நாகமசை யாவழகிதாப் பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.
|
3
|
இங்குகதிர் முத்தினொடு பொன்மணிக ளுந்தியெழின் மெய்யுளுடனே மங்கையரு மைந்தர்களு மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான் கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே நுங்கள்வினை தீரமிக வேத்திவழி பாடுநுகரா வெழுமினே.
|
4
|
துஞ்சுநறு நீலமிரு ணீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய் மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கணட மாடமலி மாகறலுளான் வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானொர்மழு வாளன் வளரும் நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.
|
5
|
Go to top |
மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய் இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான் மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் வானுலக மேறலெளிதே.
|
6
|
வெய்யவினை நெறிகள்செல வந்தணையு மேல்வினைகள் வீட்டலுறுவீர் மைகொள்விரி கானன்மது வார்கழனி மாகறலு ளானெழிலதார் கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார் ஐயனடி சேர்பவரை யஞ்சியடை யாவினைக ளகலுமிகவே.
|
7
|
தூசுதுகி னீள்கொடிகண் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே மாசுபடு செய்கைமிக மாதவர்க ளோதிமலி மாகறலுளான் பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார் பூசுபொடி யீசனென வேத்தவினை நிற்றலில போகுமுடனே.
|
8
|
தூயவிரி தாமரைக ணெய்தல்கழு நீர்குவளை தோன்றமதுவுண் பாயவரி வண்டுபல பண்முரலு மோசைபயின் மாகறலுளான் சாயவிர லூன்றியவி ராவணன தன்மைகெட நின்றபெருமான் ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை யாயினவு மகல்வதெளிதே.
|
9
|
காலினல பைங்கழல்க ணீண்முடியின் மேலுணர்வு காமுறவினார் மாலுமல ரானுமறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான் நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய் ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.
|
10
|
Go to top |
கடைகொணெடு மாடமிக வோங்குகமழ் வீதிமலி காழியவர்கோன் அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தனுரையால் மடைகொள்புன லோடுவயல் கூடுபொழின் மாகறலுளா னடியையே உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைக ளொல்குமுடனே.
|
11
|