ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய் மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த் தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.
|
1
|
பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றும் சுற்றா யலைகடன் மூடினுங் கண்டேன் புகனமக்கு உற்றா னுமையவட் கன்பன் றிருப்பா திரிப்புலியூர் முற்றா முளைமதிக் கண்ணியி னான்றன மொய்கழலே.
|
2
|
விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தா னினிநமக்கிங் கடையா வவல மருவினை சாரா நமனையஞ்சோம் புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர் உடையா னடிய ரடியடி யோங்கட் கரியதுண்டே.
|
3
|
மாயமெல் லாமுற்ற விட்டிரு ணீங்க மலைமகட்கே நேயநிலாவ விருந்தா னவன்றன் றிருவடிக்கே தேயமெல் லாநின் றிறைஞ்சுந் திருப்பாதிரிப்புலியூர் மேயநல் லான்மலர்ப் பாதமென் சிந்தையு ணின்றனவே.
|
4
|
வைத்த பொருணமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச் சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால் மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர் அத்த னருள்பெற லாமோ வறிவிலாப் பேதைநெஞ்சே.
|
5
|
Go to top |
கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால் திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.
|
6
|
எண்ணா தமர ரிரக்கப் பரவையு ணஞ்சையுண்டாய் திண்ணா ரசுரர் திரிபுரந் தீயெழச் செற்றவனே பண்ணார்ந் தமைந்த பொருள்கள் பயில்பா திரிப்புலியூர்க் கண்ணார் நுதலாய் கழனங் கருத்தி லுடையனவே.
|
7
|
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச் செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.
|
8
|
மண்பாத லம்புக்கு மால்கடன் மூடிமற் றேழுலகும் விண்பா றிசைகெட் டிருசுடர் வீழினு மஞ்சனெஞ்சே திண்பா னமக்கொன்று கண்டோந் திருப்பா திரிப்புலியூர்க் கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.
|
9
|
திருந்தா வமணர் தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்தி தருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த பொருந்தா வரக்க னுடனெரித் தாய்பா திரிப்புலியூர் இருந்தா யடியே னினிப்பிற வாமல்வந் தேன்றுகொள்ளே.
|
10
|
Go to top |