வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும் நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை உரைத்தக்கால் உவமனே யொக்கும் பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் பித்தரே யொத்தோர் நச்சில ராகில் இவரலா தில்லையோ பிரானார்.
|
1
|
அன்னையே என்னேன் அத்தனே என்னேன் அடிகளே யமையுமென் றிருந்தேன் என்னையும் ஒருவன் உளனென்று கருதி இறைஇறை திருவருள் காட்டார் அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி லாச்சிரா மத்துறை அடிகள் பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில் இவரலா தில்லையோ பிரானார்.
|
2
|
உற்றபோ தல்லால் உறுதியை உணரேன் உள்ளமே அமையுமென் றிருந்தேன் செற்றவர் புரமூன் றெரியெழச் செற்ற செஞ்சடை நஞ்சடை கண்டர் அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் தடிகள்தாம் யாதுசொன் னாலும் பெற்றபோ துகந்து பெறாவிடி லிகழில் இவரலா தில்லையோ பிரானார்.
|
3
|
நாச்சில பேசி நமர்பிற ரென்று நன்றுதீ தென்கிலர் மற்றோர் பூச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப் புள்ளினஞ் சிலம்புமாம் பொய்கைப் பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம் பலரையும் ஆட்கொள்வர் பரிந்தோர் பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில் இவரலா தில்லையோ பிரானார்.
|
4
|
வரிந்தவெஞ் சிலையால் அந்தரத் தெயிலை வாட்டிய வகையின ரேனும் புரிந்தஅந் நாளே புகழ்தக்க அடிமை போகும்நாள் வீழும்நா ளாகிப் பரிந்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் தடிகள்தாம் யாதுசொன் னாலும் பிரிந்திறைப் போதிற் பேர்வதே யாகில் இவரலா தில்லையோ பிரானார்.
|
5
|
Go to top |
செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன் தீவினை செற்றிடும் என்று அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன் ஆவதும் அறிவர்எம் மடிகள் படைத்தலைச் சூலம் பற்றிய கையர் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் பிடித்தவெண் ணீறே பூசுவ தானால் இவரலா தில்லையோ பிரானார்.
|
6
|
கையது கபாலங் காடுறை வாழ்க்கை கட்டங்க மேந்திய கையர் மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல் வெண்டிங்கள் சூடிய விகிர்தர் பையர வல்குற் பாவைய ராடும் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் மெய்யரே யொத்தோர் பொய்செய்வ தாகில் இவரலா தில்லையோ பிரானார்.
|
7
|
நிணம்படு முடலை நிலைமையென் றோரேன் நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன் கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலும் கருத்தினாற் கைதொழு தெழுவேன் பணம்படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் பிணம்படு காட்டில் ஆடுவ தாகில் இவரலா தில்லையோ பிரானார்.
|
8
|
குழைத்துவந் தோடிக் கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்தொறுஞ் செய்வான் இழைத்தநாள் கடவார் அன்பில ரேனும் எம்பெரு மானென்றெப் போதும் அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் தடிகள்தாம் யாதுசொன் னாலும் பிழைத்தது பொறுத்தொன் றீகில ராகில் இவரலா தில்லையோ பிரானார்.
|
9
|
துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணீறுந் தோற்றமுஞ் சிந்தித்துக் காணில் மணிப்படு கண்டனை வாயினாற் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன் பணிப்படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில் இவரலா தில்லையோ பிரானார்.
|
10
|
Go to top |
ஒருமையே யல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க் கடியனு மானேன் உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் ஒண்மலர்ச் சேவடி காட்டாய் அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி லாச்சிரா மத்தெந்தம் மடிகள் பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில் இவரலா தில்லையோ பிரானார்.
|
11
|
ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல எம்பெரு மான்என்றெப் போதும் பாயின புகழான் பாச்சிலாச் சிராமத் தடிகளை அடிதொழப் பன்னாள் வாயினாற் கூறி மனத்தினால் நினைவான் வளவயல் நாவல்ஆ ரூரன் பேசின பேச்சைப் பொறுத்தில ராகில் இவரலா தில்லையோ பிரானார்.
|
12
|