எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; தரித்தவன், கங்கையைத் தாழ்சடைமேல்; விரித்தவன் வேதங்கள்; வேறுவேறு தெரித்தவன், உறைவு இடம் திரு வல்லமே.
|
1
|
தாயவன் உலகுக்கு, தன் ஒப்பு இலாத் தூயவன், தூ மதி சூடி, எல்லாம் ஆயவன், அமரர்க்கும் முனிவர்கட்கும் சேயவன், உறைவு இடம் திரு வல்லமே.
|
2
|
பார்த்தவன், காமனைப் பண்பு அழிய; போர்த்தவன், போதகத்தின் உரிவை; ஆர்த்தவன் நான்முகன் தலையை, அன்று சேர்த்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.
|
3
|
கொய்த அம் மலர் அடி கூடுவார் தம்- மை, தவழ் திருமகள் வணங்க வைத்து, பெய்தவன், பெரு மழை; உலகம் உய்யச் செய்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.
|
4
|
சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன்; நேரிழையோடும் கூடி, தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே சேர்ந்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.
|
5
|
| Go to top |
பதைத்து எழு காலனைப் பாதம் ஒன்றால் உதைத்து, எழு மா முனிக்கு உண்மை நின்று, விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று சிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே.
|
6
|
இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று, ஆங்கு அகழ்ந்த வல் அரக்கனை அடர்த்த பாதம் நிகழ்ந்தவர், நேடுவார், நேடச் செய்தே திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே.
|
7
|
பெரியவன்; சிறியவர் சிந்தைசெய்ய அரியவன்; அருமறை அங்கம் ஆனான்; கரியவன், நான்முகன், காண ஒண்ணாத் தெரியவன்; உறைவு இடம் திரு வல்லமே.
|
8
|
அன்றிய அமணர்கள், சாக்கியர்கள், குன்றிய அற உரை கூறா வண்ணம் வென்றவன், புலன் ஐந்தும்; விளங்க எங்கும் சென்றவன்; உறைவு இடம் திரு வல்லமே.
|
9
|
கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று, நல்-தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார் பற்றுவர், ஈசன் பொன்பாதங்களே.
|
10
|
| Go to top |