சென்னி வெண்குடை நீடந பாயன்
திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு
வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப்
பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து
புணரி தன்னையும் புனிதமாக் குவதோர்
நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய
நலஞ்சி றந்தது வளம்புகார் நகரம்.
|
1
|
அக்கு லப்பதிக் குடிமுதல் வணிகர்
அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்
செக்கர் வெண்பிறைச் சடையவ ரடிமைத்
திறத்தின் மிக்கவர் மறைச்சிலம் படியார்
மிக்க சீரடி யார்கள்யா ரெனினும்
வேண்டும் யாவையும் இல்லையென் னாதே
இக்க டற்படி நிகழமுன் கொடுக்கும்
இயல்பின் நின்றவர் உலகியற் பகையார்.
|
2
|
ஆறு சூடிய ஐயர்மெய் யடிமை
அளவி லாததோர் உளம்நிறை யருளால்
நீறு சேர்திரு மேனியர் மனத்து
நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறி லாதநன் னெறியினில் விளங்கும்
மனைய றம்புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெ லாம்அவ ரேவின செய்யும்
பெருமை யேயெனப் பேணிவாழ் நாளில்.
|
3
|
ஆயும் நுண்பொரு ளாகியும் வெளியே
அம்ப லத்துள்நின் றாடுவா ரும்பர்
நாய கிக்குமஃ தறியவோ பிரியா
நங்கை தானறி யாமையோ அறியோம்
தூய நீறுபொன் மேனியில் விளங்கத்
தூர்த்த வேடமுந் தோன்றவே தியராய்
மாய வண்ணமே கொண்டுதம் தொண்டர்
மறாத வண்ணமுங் காட்டுவான் வந்தார்.
|
4
|
வந்து தண்புகார் வணிகர்தம் மறுகின்
மருங்கி யற்பகை யார்மனை புகுத
எந்தை யெம்பிரான் அடியவர் அணைந்தார்
என்று நின்றதோர் இன்பஆ தரவால்
சிந்தை யன்பொடு சென்றெதிர் வணங்கிச்
சிறப்பின் மிக்கவர்ச் சனைகள்முன் செய்து
முந்தை யெம்பெருந் தவத்தினால் என்கோ
முனிவர் இங்கெழுந் தருளிய தென்றார்.
|
5
|
| Go to top |
என்று கூறிய இயற்பகை யார்முன்
எய்தி நின்றவக் கைதவ மறையோர்
கொன்றை வார்சடை யாரடி யார்கள்
குறித்து வேண்டின குணமெனக் கொண்டே
ஒன்று நீரெதிர் மறாதுவந் தளிக்கும்
உண்மை கேட்டுநும் பாலொன்று வேண்டி
இன்று நானிங்கு வந்தனன் அதனுக்கு
இசைய லாமெனில் இயம்பலா மென்றார்.
|
6
|
என்ன அவ்வுரை கேட்டியற் பகையார்
யாதும் ஒன்றுஎன் பக்கலுண் டாகில்
அன்ன தெம்பிரான் அடியவர் உடைமை
ஐய மில்லைநீ ரருள்செய்யு மென்ன
மன்னு காதலுன் மனைவியை வேண்டி
வந்த திங்கென அந்தண ரெதிரே
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து
தூய தொண்டனார் தொழுதுரை செய்வார்.
|
7
|
இதுவெ னக்குமுன் புள்ளதே வேண்டி
எம்பி ரான்செய்த பேறெனக் கென்னாக்
கதுமெனச் சென்று தம்மனை வாழ்க்கைக்
கற்பின் மேம்படு காதலி யாரை
விதிம ணக்குல மடந்தைஇன் றுனைஇம்
மெய்த்த வர்க்குநான் கொடுத்தனன் என்ன
மதும லர்க்குழல் மனைவியார் கலங்கி
மனந்தெ ளிந்தபின் மற்றிது மொழிவார்.
|
8
|
இன்று நீரெனக் கருள்செய்த திதுவேல்
என்னு யிர்க்கொரு நாதநீ ருரைத்தது
ஒன்றை நான்செயு மத்தனை யல்லால்
உரிமை வேறுள தோவெனக் கென்று
தன்த னிப்பெருங் கணவரை வணங்கத்
தாழ்ந்து தொண்டனார் தாமெதிர் வணங்கச்
சென்று மாதவன் சேவடி பணிந்து
திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்.
|
9
|
மாது தன்னைமுன் கொடுத்தமா தவர்தாம்
மனம கிழ்ந்துபே ருவகையின் மலர்ந்தே
யாது நானினிச் செய்பணி என்றே
இறைஞ்சி நின்றவர் தம்மெதிர் நோக்கிச்
சாதி வேதிய ராகிய தலைவர்
தையல் தன்னையான் தனிக்கொடு போகக்
காதல் மேவிய சுற்றமும் பதியுங்
கடக்க நீதுணை போதுக வென்றார்.
|
10
|
| Go to top |
என்றவர் அருளிச் செய்ய
யானேமுன் செய்குற் றேவல்
ஒன்றிது தன்னை யென்னை
யுடையவர் அருளிச் செய்ய
நின்றது பிழையா மென்று
நினைந்துவே றிடத்துப் புக்குப்
பொன்றிகழ் அறுவை சாத்திப்
பூங்கச்சுப் பொலிய வீக்கி.
|
11
|
வாளொடு பலகை யேந்தி
வந்தெதிர் வணங்கி மிக்க
ஆளரி யேறு போல்வார்
அவரைமுன் போக்கிப் பின்னே
தோளிணை துணையே யாகப்
போயினார் துன்னி னாரை
நீளிடைப் படமுன் கூடி
நிலத்திடை வீழ்த்த நேர்வார்.
|
12
|
மனைவியார் சுற்றத் தாரும்
வள்ளலார் சுற்றத் தாரும்
இனையதொன் றியாரே செய்தார்
இயற்பகை பித்தன் ஆனால்
புனையிழை தன்னைக் கொண்டு
போவதா மொருவ னென்று
துனைபெரும் பழியை மீட்பான்
தொடர்வதற் கெழுந்து சூழ்வார்.
|
13
|
வேலொடு வில்லும் வாளுஞ்
சுரிகையு மெடுத்து மிக்க
காலென விசையிற் சென்று
கடிநகர்ப் புறத்துப் போகிப்
பாலிரு மருங்கு மீண்டிப்
பரந்தஆர்ப் பரவம் பொங்க
மால்கடல் கிளர்ந்த தென்ன
வந்தெதிர் வளைத்துக் கொண்டார்.
|
14
|
வழிவிடுந் துணைபின் போத
வழித்துணை யாகி யுள்ளார்
கழிபெருங் காதல் காட்டிக்
காரிகை யுடன்போம் போதில்
அழிதகன் போகேல் ஈண்டவ்
வருங்குலக் கொடியை விட்டுப்
பழிவிட நீபோ வென்று
பகர்ந்தெதிர் நிரந்து வந்தார்.
|
15
|
| Go to top |
மறைமுனி யஞ்சி னான்போல்
மாதினைப் பார்க்க மாதும்
இறைவனே அஞ்ச வேண்டா
இயற்பகை வெல்லு மென்ன
அறைகழ லண்ணல் கேளா
அடியனே னவரை யெல்லாம்
தறையிடைப் படுத்து கின்றேன்
தளர்ந்தருள் செய்யே லென்று.
|
16
|
பெருவிறல் ஆளி என்னப்
பிறங்கெரி சிதற நோக்கிப்
பரிபவப் பட்டு வந்த
படர்பெருஞ் சுற்றத் தாரை
ஒருவரு மெதிர்நில் லாமே
ஓடிப்போய்ப் பிழையு மன்றேல்
எரிசுடர் வாளிற் கூறாய்த்
துடிக்கின்றீர் என்று நேர்ந்தார்.
|
17
|
ஏடநீ யென்செய் தாயால்
இத்திறம் இயம்பு கின்றாய்
நாடுறு பழியும் ஒன்னார்
நகையையும் நாணாய் இன்ற பாடவம் உரைப்ப துன்றன்
மனைவியைப் பனவற் கீந்தோ
கூடவே மடிவ தன்றிக்
கொடுக்கயாம் ஒட்டோ மென்றார்.
|
18
|
மற்றவர் சொன்ன மாற்றம்
கேட்டலும் மனத்தின் வந்த
செற்றமுன் பொங்க உங்கள்
உடற்றுணி யெங்குஞ் சிந்தி
முற்றுநும் உயிரை யெல்லாம்
முதல்விசும் பேற்றிக் கொண்டு
நற்றவர் தம்மைப் போக
விடுவன்என் றெழுந்தார் நல்லோர்.
|
19
|
நேர்ந்தவர் எதிர்ந்த போது
நிறைந்தவச் சுற்றத் தாரும்
சார்ந்தவர் தம்முன் செல்லார்
தையலைக் கொண்டு பெற்றம்
ஊர்ந்தவர் படிமேற் செல்ல
உற்றெதிர் உடன்று பொங்கி
ஆர்ந்தவெஞ் சினத்தால் மேற்சென் றடர்ந்தெதிர் தடுத்தா ரன்றே.
|
20
|
| Go to top |
சென்றவர் தடுத்த போதில்
இயற்பகை யார்முன் சீறி
வன்றுணை வாளே யாகச்
சாரிகை மாறி வந்து
துன்றினர் தோளுந் தாளுந்
தலைகளுந் துணித்து வீழ்த்து
வென்றடு புலியே றென்ன
அமர்விளை யாட்டின் மிக்கார்.
|
21
|
மூண்டுமுன் பலராய் வந்தார்
தனிவந்து முட்டி னார்கள்
வேண்டிய திசைகள் தோறும்
வேறுவே றமர்செய் போழ்தில்
ஆண்டகை வீரர் தாமே
அனைவர்க்கும் அனைவ ராகிக்
காண்டகு விசையிற் பாய்ந்து
கலந்துமுன் துணித்து வீழ்த்தார்.
|
22
|
சொரிந்தன குடல்க ளெங்குந்
துணிந்தன உடல்க ளெங்கும்
விரிந்தன தலைக ளெங்கும்
மிடைந்தன கழுகு மெங்கும்
எரிந்தன விழிக ளெங்கும்
எதிர்ப்பவ ரொருவ ரின்றித்
திரிந்தனர் களனில் எங்குஞ்
சிவன்கழல் புனைந்த வீரர்.
|
23
|
மாடலை குருதி பொங்க
மடிந்தசெங் களத்தின் நின்றும்
ஆடுறு செயலின் வந்த கிளைஞரோ டணைந்தார் தம்மில்
ஓடினார் உள்ளார் உய்ந்தார்
ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார்
நீடிய வாளுந் தாமும்
நின்றவர் தாமே நின்றார்.
|
24
|
திருவுடை மனைவி யாரைக்
கொடுத்துஇடைச் செறுத்து முன்பு
வருபெருஞ் சுற்ற மெல்லாம்
வாளினால் துணித்து மாட்டி
அருமறை முனியை நோக்கி
அடிகள்நீர் அஞ்சா வண்ணம்
பொருவருங் கானம் நீங்க
விடுவனென் றுடனே போந்தார்.
|
25
|
| Go to top |
இருவரால் அறிய வொண்ணா
ஒருவர்பின் செல்லும் ஏழை
பொருதிறல் வீரர் பின்பு
போகமுன் போகும் போதில்
அருமறை முனிவன் சாய்க்கா
டதன்மருங் கணைய மேவித்
திருமலி தோளி னானை
மீளெனச் செப்பி னானே.
|
26
|
தவமுனி தன்னை மீளச் சொன்னபின் தலையால் ஆர
அவன்மலர்ப் பதங்கள் சூடி
அஞ்சலி கூப்பி நின்று
புவனமூன் றுய்ய வந்த
பூசுரன் தன்னை யேத்தி
இவனருள் பெறப்பெற் றேன்என்
றியற்பகை யாரும் மீண்டார்.
|
27
|
செய்வதற் கரிய செய்கை
செய்தநற் றொண்டர் போக
மைதிகழ் கண்டன் எண்டோள்
மறையவன் மகிழ்ந்து நோக்கிப்
பொய்தரும் உள்ளம் இல்லான்
பார்க்கிலன் போனா னென்று
மெய்தரு சிந்தை யாரை
மீளவும் அழைக்க லுற்றார்.
|
28
|
இயற்பகை முனிவா ஓலம்
ஈண்டுநீ வருவாய் ஓலம்
அயர்ப்பிலா தானே ஓலம்
அன்பனே ஓலம் ஓலம்
செயற்கருஞ் செய்கை செய்த
தீரனே ஓலம் என்றான்
மயக்கறு மறைஓ லிட்டு
மாலயன் தேட நின்றான்.
|
29
|
அழைத்தேபே ரோசை கேளா
அடியனேன் வந்தேன் வந்தேன்
பிழைத்தவ ருளரே லின்னும்
பெருவலித் தடக்கை வாளின்
இழைத்தவ ராகின் றாரென்
றியற்பகை யார்வந் தெய்தக்
குழைப்பொலி காதி னானும்
மறைந்தனன் கோலங் கொள்வான்.
|
30
|
| Go to top |
சென்றவர் முனியைக் காணார்
சேயிழை தன்னைக் கண்டார்
பொன்றிகழ் குன்று வெள்ளிப்
பொருப்பின்மேல் பொலிந்த தென்னத்
தன்றுணை யுடனே வானில்
தலைவனை விடைமேற் கண்டார்
நின்றிலர் தொழுது வீழ்ந்தார்
நிலத்தினின் றெழுந்தார் நேர்ந்தார்.
|
31
|
சொல்லுவ தறியேன் வாழி
தோற்றிய தோற்றம் போற்றி
வல்லைவந் தருளி யென்னை
வழித்தொண்டு கொண்டாய் போற்றி
எல்லையில் இன்ப வெள்ளம்
எனக்கருள் செய்தாய் போற்றி
தில்லையம் பலத்து ளாடுஞ்
சேவடி போற்றி யென்ன.
|
32
|
விண்ணிடை நின்ற வெள்ளை
விடையவர் அடியார் தம்மை
எண்ணிய உலகு தன்னில் இப்படி நம்பா லன்பு
பண்ணிய பரிவு கண்டு
மகிழ்ந்தனம் பழுதி லாதாய்
நண்ணிய மனைவி யோடு
நம்முடன் போது கென்று.
|
33
|
திருவளர் சிறப்பின் மிக்க
திருத்தொண்டர் தமக்குந் தேற்றம்
மருவிய தெய்வக் கற்பின்
மனைவியார் தமக்குந் தக்க
பெருகிய அருளின் நீடு
பேறளித் திமையோ ரேத்தப்
பொருவிடைப் பாகர் மன்னும்
பொற்பொது அதனுட் புக்கார்.
|
34
|
வானவர் பூவின் மாரி
பொழியமா மறைகள் ஆர்ப்ப
ஞானமா முனிவர் போற்ற
நலமிகு சிவலோ கத்தில்
ஊனமில் தொண்டர் கும்பிட்
டுடனுறை பெருமை பெற்றார்
ஏனைய சுற்றத் தாரும்
வானிடை யின்பம் பெற்றார்.
|
35
|
| Go to top |
இன்புறு தாரந் தன்னை
ஈசனுக் கன்ப ரென்றே
துன்புறா துதவுந் தொண்டர்
பெருமையைத் தொழுது வாழ்த்தி
அன்புறு மனத்தால் நாதன்
அடியவர்க் கன்பு நீடும்
மன்புகழ் இளைசை மாறன்
வளத்தினை வழுத்த லுற்றேன்.
|
36
|