வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்! அருள் வேண்டுவீர்
கனைவில் ஆர் புனல் காவிரிக் கரை மேய கண்டியூர் வீரட்டன்,
தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள, தான்
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடிப் பாடி, இவ் வையம் மாப் பலி தேர்ந்ததே?
|
1
|
உள்ள ஆறு எனக்கு உரை செய்ம்மின்(ன்)! உயர்வு ஆய மா தவம் பேணுவீர்
கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை காதலான்
பிள்ளைவான் பிறை செஞ்சடை(ம்) மிசை வைத்ததும், பெரு நீர் ஒலி-
வெள்ளம் தாங்கியது என்கொலோ, மிகு மங்கையாள் உடன் ஆகவே?
|
2
|
அடியர் ஆயினீர்! சொல்லுமின்-அறிகின்றிலேன், அரன் செய்கையை;
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர் வீரட்டத்து உறை பான்மையான்,
முடிவும் ஆய், முதல் ஆய், இவ் வையம் முழுதும் ஆய், அழகு ஆயது ஓர்
பொடி அது ஆர் திருமார்பினில் புரிநூலும் பூண்டு, எழு பொற்பு அதே!
|
3
|
பழைய தொண்டர்கள்! பகருமின்-பல ஆய வேதியன் பான்மையை!
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர் வீரட்டன்
குழை ஒர் காதினில் பெய்து உகந்து, ஒரு குன்றின் மங்கை வெரு உறப்
புழை நெடுங்கை நன் மா உரித்து, அது போர்த்து உகந்த பொலிவு அதே!
|
4
|
விரவு இலாது உமைக் கேட்கின்றேன்; அடி விரும்பி ஆட்செய்வீர்! விளம்புமின்-
கரவு எலாம் திரை மண்டு காவிரிக் கண்டியூர் உறை வீரட்டன்
முரவம், மொந்தை, முழா, ஒலிக்க, முழங்கு பேயொடும் கூடிப் போய்,
பரவு வானவர்க்கு ஆக வார்கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே!
|
5
|
Go to top |
இயலும் ஆறு எனக்கு இயம்புமின்(ன்) இறைவ(ன்)னும் ஆய் நிறை செய்கையை!
கயல் நெடுங்கண்ணினார்கள் தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன்
புயல் பொழிந்து இழி வான் உளோர்களுக்கு ஆக அன்று, அயன் பொய்ச் சிரம்,
அயல் நக(வ்), அது அரிந்து, மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே!
|
6
|
திருந்து தொண்டர்கள்! செப்புமின்-மிகச் செல்வன் த(ன்)னது திறம் எலாம்!
கருந் தடங்கண்ணினார்கள் தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன்
இருந்து நால்வரொடு, ஆல்நிழல், அறம் உரைத்ததும், மிகு வெம்மையார்
வருந்த வன் சிலையால் அம் மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே!
|
7
|
நா விரித்து அரன் தொல் புகழ்பல பேணுவீர்! இறை நல்குமின்-
காவிரித் தடம் புனல் செய் கண்டியூர் வீரட்டத்து உறை கண்ணுதல்
கோ விரிப் பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும், கொடி வரை பெற
மா வரைத்தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பு அதே!
|
8
|
பெருமையே சரண் ஆக வாழ்வு உறு மாந்தர்காள்! இறை பேசுமின்-
கருமை ஆர் பொழில் சூழும் தண்வயல் கண்டியூர் உறை வீரட்டன்
ஒருமையால் உயர் மாலும், மற்றை மலரவன், உணர்ந்து ஏத்தவே,
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அத் தன்மையே!
|
9
|
நமர் எழுபிறப்பு அறுக்கும் மாந்தர்கள்! நவிலுமின், உமைக் கேட்கின்றேன்!
கமர் அழி வயல் சூழும் தண்புனல் கண்டியூர் உறை வீரட்டன்
தமர் அழிந்து எழு சாக்கியச் சமண் ஆதர் ஓதுமது கொள
அமரர் ஆனவர் ஏத்த, அந்தகன் தன்னைச் சூலத்தில் ஆய்ந்ததே! |
10
|
Go to top |
கருத்தனை, பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை கள்வனை,
அருத்தனை, திறம் அடியர்பால் மிகக் கேட்டு உகந்த வினா உரை
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ்
ஒருத்தர் ஆகிலும், பலர்கள் ஆகிலும், உரைசெய்வார் உயர்ந்தார்களே.
|
11
|