சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.014   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருநல்லூர் - திருத்தாண்டகம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு பெரியாண்டேசுவரர் திருவடிகள் போற்றி
திருவடி தீகை்ஷக்கு நல்லூருக்கு வருக என்று அருளிச் செய்தார். அவ்வருள் வாக்குக் கேட்ட அப்பர் அடிகள் மகிழ்ந்து நன்மை பெருகும் அருள் வழியே, நல்லூரை அடைந்து பெருமானை வணங்கி எழுந்தார். நினைப்பதனை முடிக் கின்றோம் என்று அருளி அப்பரடிகள் திருமுடிமேல் பெருமான் திருவடி சூட்டியருளினான். நினைந்துருகும் அடியாரை என்று தொடங்கி இறை அருளை வியந்து நனைந்தனைய திருவடி என்றலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமான் என்றுபாடிப் பரவி மகிழ்ந்து பலநாள் அங்குத் தங்கிச் சிவதல தரிசனங்கள் பலவும் செய்து இன்புற்றார்.
இறைவனது திருவடி கான, தீக்க்ஷை பெற
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=S9-5_R-n1R0   Add audio link Add Audio

நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்; நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்;
சினம் திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார்;
செழு மதியின்தளிர் வைத்தார்; சிறந்து வானோர்-
இனம் துருவி, மணி மகுடத்து ஏற, துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடி என் தலைமேல்
வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

1

பொன் நலத்த நறுங்கொன்றை சடைமேல்
வைத்தார்; புலி உரியின் அதள் வைத்தார்; புனலும் வைத்தார்;
மன் நலத்த திரள் தோள்மேல் மழுவாள் வைத்தார்; வார் காதில் குழை வைத்தார்; மதியும் வைத்தார்;
மின் நலத்த நுண் இடையாள் பாகம் வைத்தார்; வேழத்தின் உரி வைத்தார்; வெண்நூல் வைத்தார்;
நல்-நலத்த திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

2

தோடு ஏறும் மலர்க்கொன்றை சடைமேல் 
வைத்தார்; துன் எருக்கின்வடம் வைத்தார்; துவலை சிந்த,
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார்; பனிமத்தமலர் வைத்தார்; பாம்பும் வைத்தார்;
சேடு ஏறு திருநுதல் மேல் நாட்டம் வைத்தார்; சிலை வைத்தார்; மலை பெற்ற மகளை வைத்தார்;
நாடு ஏறு திருவடி என் தலைமேல்
வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

3

வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம்
பொருத்து ஆகி, விரிசடைமேல் அருவி வைத்தார்;
கல் அருளி வரிசிலையா வைத்தார்; ஊராக் கயிலாயமலை வைத்தார்; கடவூர் வைத்தார்;
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார்; சுடுசுடலைப் பொடி வைத்தார்; துறவி வைத்தார்;
நல் அருளால்-திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

4

விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார்; வினை, தொழுவார்க்கு, அற வைத்தார்; துறவி வைத்தார்;
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார்; கடிக்கமலம் மலர் வைத்தார்; கயிலை வைத்தார்;
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார்; திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ண(அ)அரிய திருவடி என் தலைமேல்
வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

5
Go to top

உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார்;
உயிர் வைத்தார்; உயிர் செல்லும் கதிகள் வைத்தார்;
மற்று அமரர்கணம் வைத்தார்; அமரர் காணாமறை வைத்தார்; குறைமதியம் வளர வைத்தார்;
செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார்; துறவி வைத்தார்;
நல்-தவர் சேர் திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

6

மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார்; மணி முடிமேல் அர வைத்தார்; அணி கொள் மேனி
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார்;
நெற்றிமேல் கண் வைத்தார்; நிலையம் வைத்தார்;
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார்; ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார்;
நாறு மலர்த்திருவடி என் தலைமேல்
வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

7

குலங்கள் மிகு மலை, கடல்கள், ஞாலம், வைத்தார்;
குரு மணி சேர் அர வைத்தார்; கோலம் வைத்தார்;
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்; உண்டு அருளி விடம் வைத்தார்; எண்தோள் வைத்தார்;
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார்;
நிமிர் விசும்பின் மிசை வைத்தார்; நினைந்தார் இந் நாள்
நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

8

சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார்; திசைபத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார்;
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார்; நிறை தவமும் மறை பொருளும் நிலவ வைத்தார்;
கொன்று அருளி, கொடுங் கூற்றம் நடுங்கி ஓட, குரைகழல்சேவடி வைத்தார்; விடையும் வைத்தார்;
நன்று அருளும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

9

பாம்பு உரிஞ்சி, மதி கிடந்து, திரைகள் ஏங்க, பனிக் கொன்றை சடை வைத்தார்; பணி செய் வானோர்
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார்;
அடு சுடலைப் பொடி வைத்தார்; அழகும் வைத்தார்;
ஓம்ப(அ)அரிய வல்வினை நோய் தீர வைத்தார்; உமையை ஒருபால் வைத்தார்; உகந்து வானோர்,
நாம், பரவும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

10
Go to top

குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார்; குரு மணி சேர் மலை வைத்தார்; மலையைக் கையால்
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒருவிரலால் உற வைத்தார்; இறைவா! என்று
புலம்புதலும், அருளொடு போர் வாளும் வைத்தார்;
புகழ் வைத்தார்; புரிந்து ஆளாக் கொள்ள வைத்தார்;
நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநல்லூர்
1.086   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கொட்டும் பறை சீரால் குழும,
Tune - குறிஞ்சி   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
2.057   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பெண் அமரும் திருமேனி உடையீர்!
Tune - காந்தாரம்   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
3.083   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வண்டு இரிய விண்ட மலர்
Tune - சாதாரி   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
4.097   திருநாவுக்கரசர்   தேவாரம்   அட்டுமின், இல் பலி! என்று
Tune - திருவிருத்தம்   (திருநல்லூர் சிவக்கொழுந்தீசுவரர் பெரியநாயகியம்மை)
6.014   திருநாவுக்கரசர்   தேவாரம்   நினைந்து உருகும் அடியாரை நைய
Tune - திருத்தாண்டகம்   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000