கற்பு ஆர் மெய்ப் பாட்டைத் தவறிய சொல் பாகைக் காட்டி
புழுகொடு கஸ்தூரிச் சேற்றைத் தடவிய இள நீரைக் கண் சேலைக் காட்டி குழல் அழகைத் தோளைக் காட்டி
தரகொடு கைக் காசைக் கேட்டுத் தெருவினில் மயில் போலே நிற்பாருக்கு ஆட்பட்டு
உயரிய வித்தாரப் பூக்கட்டிலின் மிசை நெட்டூ ஊரக் கூட்டத்து அநவரதமு(ம்) மாயும் நெட்டாசைப் பாட்டை
துரிசு அற விட்டு ஏறிப் போய்ப் பத்தியருடன் நெக்கு ஓதிப் போற்றி கழல் இணை பணிவேனோ
வெற்பால் மத்தாக்கிக் கடல் கடை மைச்சு ஆவிக் காக்கைக் கடவுளை விட்டார் முக்கோட்டைக்கு ஒரு கிரி இரு காலும் வில் போலக் கோட்டி
பிறகு ஒரு சற்றே பல் காட்டி தழல் எழு வித்தார் தத்வார்த்தக் குருபர என ஓதும் பொற்பா
பற்றாக்கை புது மலர் பெட்டு ஏயப் பாற்பட்டு உயரிய பொன் தோளில் சேர்த்துக் கருணை செய் என மாலாய்
புள் கானத்து ஓச்சிக் கிரி மிசை பச்சேனல் காத்துத் திரி தரு பொன் பூவை பேச்சுக்கு உருகிய பெருமாளே.
கற்பு நிறைந்த மெய்யான நிலையினின்றும் தவறிய வழியில் செல்லும் சொற்களின் வெல்லப் பாகைப் போன்ற இனிப்பைக் காட்டி, புனுகு சட்டம், கஸ்தூரி இவைகளின் கலவை பூசப்பட்ட இள நீர் போன்ற மார்பகங்களையும், சேல் மீன் போன்ற கண்ணையும் காட்டி, கூந்தலின் அழகையும், தோள்களையும் காட்டி, மத்தியில் தரகர் வைத்துப் பேசி கையிலுள்ள பொருள் கேட்டு, தெருவில் மயில் நிற்பது போல் நிற்கும் வேசியர்களுக்கு நான் அடிமைப் பட்டு, உயர்ந்ததும் அழகு நிறைந்ததுமானக் கட்டிலின் மேல் நீண்ட நேரம் மேலே ஊர்ந்து அசைவுறும் அந்தப் புணர்ச்சியில் எப்போதும் அழிகின்ற நீண்ட ஆசை அனுபவத்தை, குற்றம் நீங்கும்படி விட்டு விலகிப் போய், உன்னிடம் பக்தி கொண்டுள்ள அடியார்களுடன் சேர்ந்து உன்னை நெகிழ்ந்து பாடிப் போற்ற உன் திருவடிகளைப் பணியும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ? மந்தர மலையையே மத்தாக அமைத்து திருப்பாற்கடலைக் கடைந்து, கறு நிறம் கொண்டு உயிர்களைக் காக்கின்ற கடவுள் திருமாலின் திருவிளையாட்டால் தர்மவழியைப் பின்பற்றாது (சிவ பூஜையை) விடடவர்களாகிய திரிபுரத் தலைவர் மூவர்களின் மும்மதிலுக்கும் மேம்பட்ட ஒப்பற்ற மேரு மலையின் இரண்டு முனைப் பக்கங்களையும் வில்லை வளைப்பது போல வளைத்து, பின்பு ஒரு சிறிது புன்னகை செய்து நெருப்பு மூள வைத்த சிவ பெருமானுக்கு, உண்மைப் பொருளை உபதேசித்த குரு பர மூர்த்தி என்று சொல்லப்படுகின்ற அழகனே, அம்புத் திரள் கட்டும் கயிற்றினின்று (மன்மதன்) தன் மலர்ப் பாணங்களை விரைவாக எய்ய, (அந்த அம்புகளால் காம வசத்தில்) அகப்பட்டு, பெருமை பொருந்திய (உனது) அழகிய தோளில் (என்னை) அணைந்து அருள் புரிவாயாக என்று (வள்ளியிடம் கூறி) ஆசை பூண்டவனாய், பறவைகளை தினைப்புனத்தில் ஓட்டி, வள்ளிமலை மீது பசுமையான தினைப் பயிர்களைக் காத்துத் திரிந்த அழகிய பூப் போன்ற வள்ளியின் பேச்சுக்கு மனம் உருகிய பெருமாளே.
கற்பு ஆர் மெய்ப் பாட்டைத் தவறிய சொல் பாகைக் காட்டி ... கற்பு நிறைந்த மெய்யான நிலையினின்றும் தவறிய வழியில் செல்லும் சொற்களின் வெல்லப் பாகைப் போன்ற இனிப்பைக் காட்டி, புழுகொடு கஸ்தூரிச் சேற்றைத் தடவிய இள நீரைக் கண் சேலைக் காட்டி குழல் அழகைத் தோளைக் காட்டி ... புனுகு சட்டம், கஸ்தூரி இவைகளின் கலவை பூசப்பட்ட இள நீர் போன்ற மார்பகங்களையும், சேல் மீன் போன்ற கண்ணையும் காட்டி, கூந்தலின் அழகையும், தோள்களையும் காட்டி, தரகொடு கைக் காசைக் கேட்டுத் தெருவினில் மயில் போலே நிற்பாருக்கு ஆட்பட்டு ... மத்தியில் தரகர் வைத்துப் பேசி கையிலுள்ள பொருள் கேட்டு, தெருவில் மயில் நிற்பது போல் நிற்கும் வேசியர்களுக்கு நான் அடிமைப் பட்டு, உயரிய வித்தாரப் பூக்கட்டிலின் மிசை நெட்டூ ஊரக் கூட்டத்து அநவரதமு(ம்) மாயும் நெட்டாசைப் பாட்டை ... உயர்ந்ததும் அழகு நிறைந்ததுமானக் கட்டிலின் மேல் நீண்ட நேரம் மேலே ஊர்ந்து அசைவுறும் அந்தப் புணர்ச்சியில் எப்போதும் அழிகின்ற நீண்ட ஆசை அனுபவத்தை, துரிசு அற விட்டு ஏறிப் போய்ப் பத்தியருடன் நெக்கு ஓதிப் போற்றி கழல் இணை பணிவேனோ ... குற்றம் நீங்கும்படி விட்டு விலகிப் போய், உன்னிடம் பக்தி கொண்டுள்ள அடியார்களுடன் சேர்ந்து உன்னை நெகிழ்ந்து பாடிப் போற்ற உன் திருவடிகளைப் பணியும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ? வெற்பால் மத்தாக்கிக் கடல் கடை மைச்சு ஆவிக் காக்கைக் கடவுளை விட்டார் முக்கோட்டைக்கு ஒரு கிரி இரு காலும் வில் போலக் கோட்டி ... மந்தர மலையையே மத்தாக அமைத்து திருப்பாற்கடலைக் கடைந்து, கறு நிறம் கொண்டு உயிர்களைக் காக்கின்ற கடவுள் திருமாலின் திருவிளையாட்டால் தர்மவழியைப் பின்பற்றாது (சிவ பூஜையை) விடடவர்களாகிய திரிபுரத் தலைவர் மூவர்களின் மும்மதிலுக்கும் மேம்பட்ட ஒப்பற்ற மேரு மலையின் இரண்டு முனைப் பக்கங்களையும் வில்லை வளைப்பது போல வளைத்து, பிறகு ஒரு சற்றே பல் காட்டி தழல் எழு வித்தார் தத்வார்த்தக் குருபர என ஓதும் பொற்பா ... பின்பு ஒரு சிறிது புன்னகை செய்து நெருப்பு மூள வைத்த சிவ பெருமானுக்கு, உண்மைப் பொருளை உபதேசித்த குரு பர மூர்த்தி என்று சொல்லப்படுகின்ற அழகனே, பற்றாக்கை புது மலர் பெட்டு ஏயப் பாற்பட்டு உயரிய பொன் தோளில் சேர்த்துக் கருணை செய் என மாலாய் ... அம்புத் திரள் கட்டும் கயிற்றினின்று (மன்மதன்) தன் மலர்ப் பாணங்களை விரைவாக எய்ய, (அந்த அம்புகளால் காம வசத்தில்) அகப்பட்டு, பெருமை பொருந்திய (உனது) அழகிய தோளில் (என்னை) அணைந்து அருள் புரிவாயாக என்று (வள்ளியிடம் கூறி) ஆசை பூண்டவனாய், புள் கானத்து ஓச்சிக் கிரி மிசை பச்சேனல் காத்துத் திரி தரு பொன் பூவை பேச்சுக்கு உருகிய பெருமாளே. ... பறவைகளை தினைப்புனத்தில் ஓட்டி, வள்ளிமலை மீது பசுமையான தினைப் பயிர்களைக் காத்துத் திரிந்த அழகிய பூப் போன்ற வள்ளியின் பேச்சுக்கு மனம் உருகிய பெருமாளே.