இடர் மொய்த்துத் தொடர் இல் பொய்க் குடில் அக்கிக்கு இடை இட்டு
இனிமைச் சுற்றமும் மற்றைப் புதல்வோரும் இனம் ஒப்பித்து இசையச் சொல் பல கத்திட்டு இழிய
பிற்கு இடையத் துக்கமும் விட்டிட்டு அவர் ஏக
விடம் மெத்தச் சொரி செக்கண் சமன் வெட்டத் தனம் உற்றிட்டு
உயிர் வித்துத்தனை எற்றிக் கொடு போ முன் வினை பற்று அற்று அற
நித்தப் புதுமைச் சொல்கொடு வெட்சிப் புய(ம்) வெற்றிப் புகழ் செப்பப் பெறுவேனோ
அடர் செக்கரச் சடையில் பொன் பிறை அப்புப் புனை அப்பர்க்கு
அறிவு ஒக்கப் பொருள் கற்பித்திடுவோனே
அலகைக்குள் பசி தித்தப் பலகைக் கொத்தது பட்டிட்டு அலறக் குத்து உற முட்டிப் பொரும் வேலா
கடலுக்குள் படு சர்ப்பத்தினில் மெச்சத் துயில் பச்சைக் கிரி கைக்குள் திகிரிக் கொற்றவன் மாயன்
கமலத்தில் பயில் நெட்டைக் குயவற்கு எண் திசையர்க்குக் கடவுள் சக்கிரவர்த்திப் பெருமாளே.
துன்பங்கள் மொய்த்து நெருங்கித் தொடரும் இடமாகிய நிலையில்லாத உடல் நெருப்புக்கு இடையில் வைக்கப்பட்டு, இனிய சுற்றத்தினரும், பின்னும் புதல்வர்களும் தங்கள் தங்கள் உறவைச் சொல்லி அச்சமயத்துக்கு ஏற்ற சொற்கள் பலவற்றைச் சொல்லி அழுது தீர்க்க, பின்பு மனம் தளர்ந்து இருந்த துக்கத்தையும் விட்டுவிட்டு அந்தச் சுற்றத்தினர் போக, விஷம் அதிகமாகச் சொரிகின்ற சிவந்த கண்களை உடைய யமன் அழிக்க வேண்டும் என்ற பண்பை உணர்த்தும் தன்மையை அடைந்து உயிராகிய விதையை நீக்கிக் கொண்டு போவதற்கு முன்பாக, எனது வினையும் பற்றும் அற்று ஒழிந்து நீங்க, நாள் தோறும் புதிய புதிய சொற்களைக் கொண்டு, வெட்சி மாலை அணிந்த உனது திருப் புயங்களின் வெற்றிப் புகழை உரைக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ? நெருங்கியுள்ள சிறந்த சடையில் அழகிய பிறைச் சந்திரனும் கங்கையும் அணிந்த தந்தையாகிய சிவபெருமானுக்கு ஞானம் கூடிய பிரணவப் பொருளை உபதேசித்தவனே, பேய்க் கூட்டங்களுள் பசி அடங்கும்படி பல பேய்களின் கைகளும் ஒன்றோடொன்று பிணங்களைக் கொத்தும் போது ஒன்றின் கை ஒன்றின் மேல் கொத்துப்பட, அந்த வலியால் பேய்கள் கூச்சலிடவும், ஒன்றை ஒன்று குத்திடும்படியாகவும், அசுரர்களை எதிர்த்துச் சண்டை செய்த வேலனே. பாற்கடலில் அமைந்த ஆதிசேஷன் மேல் அடியார்கள் போற்றித் துதிக்க அறி துயில் கொண்டுள்ள பச்சை மலை போன்ற வடிவை உள்ளவனும், திருக் கரத்தில் சக்கரம் ஏந்திய அரசனும் ஆகிய திருமாலுக்கும், தாமரையில் வீற்றிருக்கும் நெடிய படைப்பவனாகிய பிரமனுக்கும், எட்டு திக்குகளிலும் உள்ள மற்றவர்களுக்கும் கடவுள் சக்கிரவர்த்தியாக விளங்கும் பெருமாளே.
இடர் மொய்த்துத் தொடர் இல் பொய்க் குடில் அக்கிக்கு இடை இட்டு ... துன்பங்கள் மொய்த்து நெருங்கித் தொடரும் இடமாகிய நிலையில்லாத உடல் நெருப்புக்கு இடையில் வைக்கப்பட்டு, இனிமைச் சுற்றமும் மற்றைப் புதல்வோரும் இனம் ஒப்பித்து இசையச் சொல் பல கத்திட்டு இழிய ... இனிய சுற்றத்தினரும், பின்னும் புதல்வர்களும் தங்கள் தங்கள் உறவைச் சொல்லி அச்சமயத்துக்கு ஏற்ற சொற்கள் பலவற்றைச் சொல்லி அழுது தீர்க்க, பிற்கு இடையத் துக்கமும் விட்டிட்டு அவர் ஏக ... பின்பு மனம் தளர்ந்து இருந்த துக்கத்தையும் விட்டுவிட்டு அந்தச் சுற்றத்தினர் போக, விடம் மெத்தச் சொரி செக்கண் சமன் வெட்டத் தனம் உற்றிட்டு ... விஷம் அதிகமாகச் சொரிகின்ற சிவந்த கண்களை உடைய யமன் அழிக்க வேண்டும் என்ற பண்பை உணர்த்தும் தன்மையை அடைந்து உயிர் வித்துத்தனை எற்றிக் கொடு போ முன் வினை பற்று அற்று அற ... உயிராகிய விதையை நீக்கிக் கொண்டு போவதற்கு முன்பாக, எனது வினையும் பற்றும் அற்று ஒழிந்து நீங்க, நித்தப் புதுமைச் சொல்கொடு வெட்சிப் புய(ம்) வெற்றிப் புகழ் செப்பப் பெறுவேனோ ... நாள் தோறும் புதிய புதிய சொற்களைக் கொண்டு, வெட்சி மாலை அணிந்த உனது திருப் புயங்களின் வெற்றிப் புகழை உரைக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ? அடர் செக்கரச் சடையில் பொன் பிறை அப்புப் புனை அப்பர்க்கு ... நெருங்கியுள்ள சிறந்த சடையில் அழகிய பிறைச் சந்திரனும் கங்கையும் அணிந்த தந்தையாகிய சிவபெருமானுக்கு அறிவு ஒக்கப் பொருள் கற்பித்திடுவோனே ... ஞானம் கூடிய பிரணவப் பொருளை உபதேசித்தவனே, அலகைக்குள் பசி தித்தப் பலகைக் கொத்தது பட்டிட்டு அலறக் குத்து உற முட்டிப் பொரும் வேலா ... பேய்க் கூட்டங்களுள் பசி அடங்கும்படி பல பேய்களின் கைகளும் ஒன்றோடொன்று பிணங்களைக் கொத்தும் போது ஒன்றின் கை ஒன்றின் மேல் கொத்துப்பட, அந்த வலியால் பேய்கள் கூச்சலிடவும், ஒன்றை ஒன்று குத்திடும்படியாகவும், அசுரர்களை எதிர்த்துச் சண்டை செய்த வேலனே. கடலுக்குள் படு சர்ப்பத்தினில் மெச்சத் துயில் பச்சைக் கிரி கைக்குள் திகிரிக் கொற்றவன் மாயன் ... பாற்கடலில் அமைந்த ஆதிசேஷன் மேல் அடியார்கள் போற்றித் துதிக்க அறி துயில் கொண்டுள்ள பச்சை மலை போன்ற வடிவை உள்ளவனும், திருக் கரத்தில் சக்கரம் ஏந்திய அரசனும் ஆகிய திருமாலுக்கும், கமலத்தில் பயில் நெட்டைக் குயவற்கு எண் திசையர்க்குக் கடவுள் சக்கிரவர்த்திப் பெருமாளே. ... தாமரையில் வீற்றிருக்கும் நெடிய படைப்பவனாகிய பிரமனுக்கும், எட்டு திக்குகளிலும் உள்ள மற்றவர்களுக்கும் கடவுள் சக்கிரவர்த்தியாக விளங்கும் பெருமாளே.