இரவும் பகலுமாக, நீங்குதல் இன்றி, நாள் தோறும் துக்கம் இடைவிடாமல் பீடிக்க, தீப்போல வயிற்றில் எரிகின்ற பசியால் ஆசைகளே பெரிதாக வளர்ந்து, உணவு வேண்டி வாழ்க்கையின் ஊடே உழைப்பே மிகுதியாகி, தர்க்கம் செய்வதிலே எப்போதும் காலம் கழித்து, இவ்வாறே வாழ்க்கையின் இடைக்காலத்தில் சிலகாலம் கழிய, பின்பு வயது மூத்து, நரைகள் அதிகமாகிப் போய் கிழவன் என்ற ஒரு பேரே வந்து கூடிட, நடைகளும் நேராக இன்றி தாறுமாறாகி, கீழே விழும் நிலைமைக்கு வந்து, கண்களும் தெரியாமல் குருடனாகிப் போனால், அடியவனாகிய நான் என்போது தான் துன்பம் நீங்கி விடிந்து இன்பம் அடைவது? காலை வளைத்துத் தூக்கி நடனம் செய்பவனாகிய சிவபிரானின் மோக்ஷ வீட்டை அடையாமலேயே நான் அழிந்து போவேனோ? திருநடனம் செய்கின்ற பாதங்களை உடையவள், திருநீற்றுத் தூளை அணிந்துள்ளவள், மகர மீன் போன்ற குண்டலங்களைத் தரித்தவள், மாரியாகிய துர்க்கை, மகா காளி, திரிபுரங்களில் நெருப்பை ஏவியவள், புகலிடமாக உள்ளவள், பேரழகி, சிவனது இடப்பாகத்தைத் தரித்தவள், நீல நிறத்தாள், சூலம் ஏந்தியவள், கெளரி, ஐந்தாம் சக்தியாகும் அனுக்கிரக சக்தி, தாய், மகமாயி, சிவாம்பிகை, பாலாம்பிகை, பரிசுத்த தேவதை ஆகிய பார்வதி அருளிய குழந்தையே, ஒலிக்கும் கிண்கிணியை அணிந்துள்ள வீரனே, தீரனே, மலைகளைக் காக்கும் ஒளியாக விளங்கும் நாதனே, ஞானிகளின் தலைமேல் பதிக்கும் பாதனே, அழகும் இளமையும் பொலியும் குறத்தி, மான் போன்ற வள்ளியின் இனிமை நிறைந்த மணவாளனே, திருமால், சிவன், பிரமா எனப்படும் மூவகைத் தெய்வங்கள், இந்திரன் என்ற அரசன், பெரிய விண்ணுலகிலுள்ள தேவர்கள், கந்தர்வர் ஆனோர், பிற எல்லா வகையினர்க்கும் பெருமாளே.