முனை யழிந்தது மேட்டி குலைந்தது
வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது
முதுகு வெஞ்சிலை காட்டி வளைந்தது
ப்ரபையான முகம் இழிந்தது
நோக்கும் இருண்டது
இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது
மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது
அறிவேபோய் நினைவ யர்ந்தது
நீட்டல் முடங்கலும்
அவசமும்பல ஏக்கமும் உந்தின
நெறிமறந்தது மூப்பு முதிர்ந்தது
பலநோயும் நிலுவை கொண்டது
பாய்க்கிடை கண்டது
சலமலங்களின் நாற்றமெழுந்தது
நிமிஷ மிங்கினி யாச்சுது
என் முன்பு
இனிது அருள்வாயே
இனைய இந்திர னேற்றமும்
அண்டர்கள் தலமு மங்கிட வோட்(டி)
இருஞ்சிறையிடும் இடும்புள ராக்கதர் தங்களில்
வெகுகோடி எதிர்பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர்
தசைசிரங்களு நாற்றிசை சிந்திட
இடிமுழங்கிய வேற்படையொன்றனை எறிவோனே
தினைவனங்கிளி காத்த சவுந்தரி
அருகு சென்றடி போற்றிமணஞ்செய்து
செகமறிந்திட வாழ்க்கை புரிந்திடும் இளையோனே
திரிபுரம்பொடி யாக்கிய சங்கரர் குமர
கந்தபராக்ரம
செந்தமிழ் தெளிவு கொண்டு அடியார்க்கு விளம்பிய பெருமாளே.
தைரியம் அற்றுப் போக, நானெனும் ஆணவம் அகல, வயது மிகவும் ஏற, வாயிலுள்ள பற்கள் உதிர, முதுகு வளைந்த வில்லைப் போல் கூன் விழ, ஒளி வீசிய முகம் மங்கிப்போய் தொங்க, பார்வையும் இருளடைய, இருமல் வந்து, தூக்கம் இல்லாமல் போக, பேச்சு தளர, நாக்கு செயலற்று விழ, புத்தி கெட்டுப்போய் ஞாபக மறதி ஏற்பட, காலை நீட்டுவதும் மடக்குவதுமாக ஆகி, மயக்கமும், பல கவலைகளும் ஏற்பட்டு, ஒழுக்கவழி மறந்து, கிழத்தன்மை முற்றி, பலவித வியாதிகள் நிலையாகப் பீடிக்க, பாயில் நிரந்தரப் படுக்கையாகிவிட, மல மூத்திரங்களின் துர்நாற்றம் எழ, இன்னும் ஒரே நிமிஷத்தில் எல்லாம் ஆயிற்று (உயிர் போய் விடும்) என்று உலகத்தார் பேசுவதற்கு முன்பு, நல்லவிதமாக அருள்வாயாக. வருந்துகிற இந்திரனின் மேன்மையும், தேவர்கள் உலகமும் ஒளி மங்கிட அவர்களை ஓட்டி, கடும் சிறையிடும் கொடுமையான அரக்கரில் பலகோடி பேர் எதிரே சண்டையிட, போர்க்களத்தில் எதிர்த்தவர்களின் சதைகளும் தலைகளும் நாலா பக்கமும் சிதறிட இடி போல் ஒலித்த வேலாயுதத்தை வீசியவனே, தினைப்புனத்தில் கிளிகள் வாராமல் காத்த அழகி வள்ளியின் பக்கத்தில் சென்று அவளது திருவடியைப் போற்றி மணந்து உலகறிய வாழ்க்கை நடத்தும் இளையோனே, திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய சங்கரர் மகனே, கந்தா, பராக்கிரம மூர்த்தியே, செந்தமிழை தெளிவோடு அடியார்க்கு உபதேசித்த பெருமாளே.