கருப்பு வி(ல்)லில் மருப் பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய கடைக் க(ண்)ணொடு சிரித்து அணுகு கருத்தினால் விரகு செய் மடமாதர்
கதக் களிறு திடுக்கம் உற மதர்த்து மிக எதிர்த்து மலை கனத்த இரு தனத்தின் மிசை கலக்கும் மோகனம் அதில் மருளாதே
ஒருப் படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து அருளி உனைப் புகழும் எனைப் புவியில் ஒருத்தனாம் வகை திரு அருளாலே
உருத்திரனும் விருத்தி பெற அனுக்கிரகி எனக் குறுகி உரைக்க அ(ம்) மறை அடுத்து பொருள் உணர்த்தும் நாள் அடிமையும் உடையேனோ
பருப்பதமும் உருப் பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு படிக் கடலும் அலைக்க வ(ல்)ல பருத்த தோகையில் வரு முருகோனே
பதித்த மரகதத்தினுடன் இரத்னமணி நிரைத்த பல பணிப் ப(ன்)னிரு புயச் சயில பரக்கவே இயல் தெரி வயலூரா
திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப் பகைமை செயித்தருளும் இசைப் பிரிய திருத்த மாதவர் புகழ் குருநாதா
சிலைக் குறவர் இலைக் குடிலில் புகைக் களக முகில் புடை செல் திருப் பழநி மலைக்குள் உறை திருக்கை வேல் அழகிய பெருமாளே.
கரும்பு வில்லில் வாசனை உடைய மலர்க் கணைகளைத் தொடுத்து மன்மதன் செலுத்தியது போல் கடைக் கண் நோக்குடன் சிரித்து நெருங்கி, எண்ணத்தினால் தந்திரச் செயல்கள் புரிகின்ற இளம் மாதர்களின், கோபமுள்ள யானையும் திடுக்கிடும்படி செழிப்புற்று மிகவும் எதிர்த்து, மலை போல் பருத்துள்ள இரண்டு மார்பகங்களின் மேல் கலந்து கொள்ளும் மோக வெறியில் மயங்காமல், மனம் ஒருமை அடைதலில் விருப்பம் கொள்ளும் எண்ணம் என் மனதில் உண்டாகும்படி உனது திரு உள்ளத்தில் நினைத்து அருள் செய்து, உன்னைப் புகழ்ந்து பாடும் என்னை நிகரில்லாத புலவனாகும் வகையை உன்னுடைய திருவருளால், ருத்திர மூர்த்தியும் விளக்கம் பெற வேண்டி, எனக்கு உபதேசித்து அருளுக என்று உன்னை அணுகிக் கேட்க, நீ அவருக்கு உபதேசித்த அந்த ரகசியப் பிரணவப் பொருளை அடியேனுக்கும் உணர்த்தும்படியான நாள் ஒன்றை அடியேனும் பெறுவேனோ? (கிரெளஞ்ச) மலையையும், பெரிய உருவம் உள்ள அரக்கர்களையும், ஒலித்து எழுகின்ற, பூமியிலுள்ள ஏழு கடல்களையும் அலைத்துக் கலக்க வல்ல பருமையான மயிலில் மீது வரும் முருகனே, பதிக்கப்பட்ட மரகதத்துடன் ரத்தின மணிகள் வரிசையில் அமைக்கப்பட்ட பலவகையான அணிகலன்களை அணிந்துள்ள, மலை போன்ற பன்னிரண்டு புயங்களை உடையவனே, விரிவாகவே இலக்கியத் தமிழைத் தெரிந்த வயலூர் முருகனே, திருப்புகழை உரைப்பவர்களுடையவும் படிப்பவர்களுடையவும் வறுமையும் பகைமையும் தொலைந்து வெற்றி தந்தருளும் இசைப் பிரியனே, ஒழுக்கமுடைய சிறந்த தவத்தினர் புகழ்கின்ற குருநாதனே, வில் ஏந்திய குறவர்களுடைய ஓலைக் குடிசையிலும், புகை போன்ற கருமையுடைய மேகங்கள் அருகில் தவழ்ந்து செல்லுகின்ற அழகிய பழனி மலையிலும் வீற்றிருக்கும், திருக்கையில் வேல் ஏந்தும் அழகிய பெருமாளே.
கருப்பு வி(ல்)லில் மருப் பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய கடைக் க(ண்)ணொடு சிரித்து அணுகு கருத்தினால் விரகு செய் மடமாதர் ... கரும்பு வில்லில் வாசனை உடைய மலர்க் கணைகளைத் தொடுத்து மன்மதன் செலுத்தியது போல் கடைக் கண் நோக்குடன் சிரித்து நெருங்கி, எண்ணத்தினால் தந்திரச் செயல்கள் புரிகின்ற இளம் மாதர்களின், கதக் களிறு திடுக்கம் உற மதர்த்து மிக எதிர்த்து மலை கனத்த இரு தனத்தின் மிசை கலக்கும் மோகனம் அதில் மருளாதே ... கோபமுள்ள யானையும் திடுக்கிடும்படி செழிப்புற்று மிகவும் எதிர்த்து, மலை போல் பருத்துள்ள இரண்டு மார்பகங்களின் மேல் கலந்து கொள்ளும் மோக வெறியில் மயங்காமல், ஒருப் படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து அருளி உனைப் புகழும் எனைப் புவியில் ஒருத்தனாம் வகை திரு அருளாலே ... மனம் ஒருமை அடைதலில் விருப்பம் கொள்ளும் எண்ணம் என் மனதில் உண்டாகும்படி உனது திரு உள்ளத்தில் நினைத்து அருள் செய்து, உன்னைப் புகழ்ந்து பாடும் என்னை நிகரில்லாத புலவனாகும் வகையை உன்னுடைய திருவருளால், உருத்திரனும் விருத்தி பெற அனுக்கிரகி எனக் குறுகி உரைக்க அ(ம்) மறை அடுத்து பொருள் உணர்த்தும் நாள் அடிமையும் உடையேனோ ... ருத்திர மூர்த்தியும் விளக்கம் பெற வேண்டி, எனக்கு உபதேசித்து அருளுக என்று உன்னை அணுகிக் கேட்க, நீ அவருக்கு உபதேசித்த அந்த ரகசியப் பிரணவப் பொருளை அடியேனுக்கும் உணர்த்தும்படியான நாள் ஒன்றை அடியேனும் பெறுவேனோ? பருப்பதமும் உருப் பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு படிக் கடலும் அலைக்க வ(ல்)ல பருத்த தோகையில் வரு முருகோனே ... (கிரெளஞ்ச) மலையையும், பெரிய உருவம் உள்ள அரக்கர்களையும், ஒலித்து எழுகின்ற, பூமியிலுள்ள ஏழு கடல்களையும் அலைத்துக் கலக்க வல்ல பருமையான மயிலில் மீது வரும் முருகனே, பதித்த மரகதத்தினுடன் இரத்னமணி நிரைத்த பல பணிப் ப(ன்)னிரு புயச் சயில பரக்கவே இயல் தெரி வயலூரா ... பதிக்கப்பட்ட மரகதத்துடன் ரத்தின மணிகள் வரிசையில் அமைக்கப்பட்ட பலவகையான அணிகலன்களை அணிந்துள்ள, மலை போன்ற பன்னிரண்டு புயங்களை உடையவனே, விரிவாகவே இலக்கியத் தமிழைத் தெரிந்த வயலூர் முருகனே, திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப் பகைமை செயித்தருளும் இசைப் பிரிய திருத்த மாதவர் புகழ் குருநாதா ... திருப்புகழை உரைப்பவர்களுடையவும் படிப்பவர்களுடையவும் வறுமையும் பகைமையும் தொலைந்து வெற்றி தந்தருளும் இசைப் பிரியனே, ஒழுக்கமுடைய சிறந்த தவத்தினர் புகழ்கின்ற குருநாதனே, சிலைக் குறவர் இலைக் குடிலில் புகைக் களக முகில் புடை செல் திருப் பழநி மலைக்குள் உறை திருக்கை வேல் அழகிய பெருமாளே. ... வில் ஏந்திய குறவர்களுடைய ஓலைக் குடிசையிலும், புகை போன்ற கருமையுடைய மேகங்கள் அருகில் தவழ்ந்து செல்லுகின்ற அழகிய பழனி மலையிலும் வீற்றிருக்கும், திருக்கையில் வேல் ஏந்தும் அழகிய பெருமாளே.