சருவும்படி வந்தனன் இங்கித
மதன் நின்றிட அம்புலியும் சுடு
தழல் கொண்டிட மங்கையர் கண்களின் வசமாகி
சயிலம் கொளு மன்றல் பொருந்திய
பொழிலின் பயில் தென்றலும் ஒன்றிய
தட அம் சுனை துன்றி எழுந்திட திறமாவே
இரவும் பகல் அந்தியும் நின்றிடு
குயில் வந்து இசை தெந்தன என்றிட
இரு கண்கள் துயின்றிடல் இன்றியும் அயர்வாகி
இவண் நெஞ்சு பதன் பதன் என்றிட
மயல் கொண்டு வருந்திய வஞ்சகன்
இனி உன் தன் மலர்ந்து இலகும் பதம் அடைவேனோ
திரு ஒன்றி விளங்கிய அண்டர்கள்
மனையின் தயிர் உண்டவன் எண் திசை
திகழும் புகழ் கொண்டவன் வண் தமிழ் பயில்வோர் பின்
திரிகின்றவன் மஞ்சு நிறம் புனை
பவன் மிஞ்சு திறம் கொள வென்று அடல்
செய துங்க முகுந்தன் மகிழ்ந்து அருள் மருகோனே
மருவும் கடல் துந்துமியும் குட
முழவங்கள் குமின் குமின் என்றிட
வளம் ஒன்றிய செந்திலில் வந்து அருள் முருகோனே
மதியும் கதிரும் புயலும் தினம்
மறுகும்படி அண்டம் இலங்கிட
வளர்கின்ற பரங்கிரி வந்து அருள் பெருமாளே.
சண்டையிடும் கருத்துடன் வந்து மன்மதன் நிற்க, நிலவும் சுடுகின்ற தீயை தன்னுள் வைத்துக் கொள்ள, விலைமாதர்களின் கண்களில் வசப்பட்டு, மலைச் சாரலில் உள்ள மணம் பொருந்திய சோலைகளில் தவழ்ந்துவரும் தென்றல் காற்றும் அங்குள்ள அகன்ற அழகிய சுனைநீரில் படிந்து வலிவுடனே எழ, இரவும் பகலும் அந்திவேளையும் நின்று நிதானமாக குயில் வந்து இசையைத் தெந்தன என்று பாட, எனது இரண்டு கண்களும் தூக்கம் இல்லாமல் களைத்துப் போய், இங்கே என் மனம் பதை பதைக்க, காம மயக்கம் கொண்டு வருந்திய வஞ்சகனாகிய நான் இனிமேல் உன் மலர்ந்து விளங்கும் திருவடியை அடைவேனோ? செல்வம் பொருந்தி விளங்கிய இடையர்களின் வீடுகளிலிருந்த தயிரை (திருடி) உண்டவனும், எட்டு திசைகளிலும் புகழ் பெற்றவனும், வளமான தமிழைப் பயில்வோர்களுடைய பின்னே திரிகின்றவனும், மேக நிறம் கொண்டவனும், மிக்க திறல் கொண்டு (மற்போரில்) வெல்லும் வலிமை வாய்ந்தவனும், வெற்றியும் பரிசுத்தமும் கொண்ட முகுந்தனுமாகிய திருமால் மகிழும் மருகனே, பொருந்திய கடல் அலைகளைப் போல, துந்துமிப் பறையும், குடமுழவு வாத்தியமும் குமின் குமின் என்று ஒலி செய்ய, வளம் பொருந்திய திருச் செந்தூரில் வந்து எழுந்தருளி உள்ள முருகனே, திங்களும், சூரியனும், மேகமும் நாள்தோறும் வானில் செல்வதற்குத் தயங்கும்படி, இவ்வுலகம் விளங்கும்படியாக வானளாவி வளர்கின்ற திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி அருளுகின்ற பெருமாளே.
சருவும்படி வந்தனன் இங்கித மதன் நின்றிட அம்புலியும் சுடு தழல் கொண்டிட ... சண்டையிடும் கருத்துடன் வந்து மன்மதன் நிற்க, நிலவும் சுடுகின்ற தீயை தன்னுள் வைத்துக் கொள்ள, மங்கையர் கண்களின் வசமாகி ... விலைமாதர்களின் கண்களில் வசப்பட்டு, சயிலம் கொளு மன்றல் பொருந்திய பொழிலின் பயில் தென்றலும் ஒன்றிய தட அம் சுனை துன்றி எழுந்திட திறமாவே ... மலைச் சாரலில் உள்ள மணம் பொருந்திய சோலைகளில் தவழ்ந்துவரும் தென்றல் காற்றும் அங்குள்ள அகன்ற அழகிய சுனைநீரில் படிந்து வலிவுடனே எழ, இரவும் பகல் அந்தியும் நின்றிடு குயில் வந்து இசை தெந்தன என்றிட ... இரவும் பகலும் அந்திவேளையும் நின்று நிதானமாக குயில் வந்து இசையைத் தெந்தன என்று பாட, இரு கண்கள் துயின்றிடல் இன்றியும் அயர்வாகி ... எனது இரண்டு கண்களும் தூக்கம் இல்லாமல் களைத்துப் போய், இவண் நெஞ்சு பதன் பதன் என்றிட மயல் கொண்டு வருந்திய வஞ்சகன் ... இங்கே என் மனம் பதை பதைக்க, காம மயக்கம் கொண்டு வருந்திய வஞ்சகனாகிய நான் இனி உன் தன் மலர்ந்து இலகும் பதம் அடைவேனோ ... இனிமேல் உன் மலர்ந்து விளங்கும் திருவடியை அடைவேனோ? திரு ஒன்றி விளங்கிய அண்டர்கள் மனையின் தயிர் உண்டவன் ... செல்வம் பொருந்தி விளங்கிய இடையர்களின் வீடுகளிலிருந்த தயிரை (திருடி) உண்டவனும், எண் திசை திகழும் புகழ் கொண்டவன் வண் தமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன் ... எட்டு திசைகளிலும் புகழ் பெற்றவனும், வளமான தமிழைப் பயில்வோர்களுடைய பின்னே திரிகின்றவனும், மஞ்சு நிறம் புனைபவன் மிஞ்சு திறம் கொள வென்று அடல் செய துங்க முகுந்தன் மகிழ்ந்து அருள் மருகோனே ... மேக நிறம் கொண்டவனும், மிக்க திறல் கொண்டு (மற்போரில்) வெல்லும் வலிமை வாய்ந்தவனும், வெற்றியும் பரிசுத்தமும் கொண்ட முகுந்தனுமாகிய திருமால் மகிழும் மருகனே, மருவும் கடல் துந்துமியும் குட முழவங்கள் குமின் குமின் என்றிட ... பொருந்திய கடல் அலைகளைப் போல, துந்துமிப் பறையும், குடமுழவு வாத்தியமும் குமின் குமின் என்று ஒலி செய்ய, வளம் ஒன்றிய செந்திலில் வந்து அருள் முருகோனே ... வளம் பொருந்திய திருச் செந்தூரில் வந்து எழுந்தருளி உள்ள முருகனே, மதியும் கதிரும் புயலும் தினம் மறுகும்படி அண்டம் இலங்கிட வளர்கின்ற ... திங்களும், சூரியனும், மேகமும் நாள்தோறும் வானில் செல்வதற்குத் தயங்கும்படி, இவ்வுலகம் விளங்கும்படியாக வானளாவி வளர்கின்ற பரங்கிரி வந்து அருள் பெருமாளே. ... திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி அருளுகின்ற பெருமாளே.