சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
142   பழநி திருப்புகழ் ( - வாரியார் # 126 )  

கனத்திறுகி

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனத்ததனத் தனத்ததனத்
     தனத்ததனத் தனத்ததனத்
          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான

கனத்திறுகிப் பெருத்திளகிப்
     பணைத்துமணத் திதத்துமுகக்
          கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் ...... தலமேராய்
கவட்டையுமெத் தடக்கிமதர்த்
     தறக்கெருவித் திதத்திடுநற்
          கலைச்சவுளித் தலைக்குலவிக் ...... களிகூருந்
தனத்தியர்கட் கிதத்துமிகுத்
     தனற்குண்மெழுக் கெனப்புவியிற்
          றவித்திழிசொற் பவக்கடலுற் ...... றயர்வாலே
சலித்தவெறித் துடக்குமனத்
     திடக்கனெனச் சிரிக்கமயற்
          சலத்தின்வசைக் கிணக்கமுறக் ...... கடவேனோ
புனத்தின்மலைக் குறத்தியுயர்த்
     திருக்குதனக் குடத்தினறைப்
          புயத்தவநற் கருத்தையுடைக் ...... குகவீரா
பொருப்பரசற் கிரக்கமொடுற்
     றறற்சடிலத் தவச்சிவனிற்
          புலச்சிதனக் கிதத்தைமிகுத் ...... திடுநாதா
சினத்தெதிர்துட் டரக்கர்தமைத்
     திகைத்துவிழக் கணப்பொழுதிற்
          சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத் ...... துடையோனே
செருக்கொடுநற் றவக்கமலத்
     தயற்குமரிக் கருட்புரிசைத்
          திருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே.
Easy Version:
கனத்து இறுகிப் பெருத்து இளகிப் பணைத்து மணத்து
இதத்து முகக் கறுப்பு மிகுத்து அடர்த்து நிகர் தல(ம்) மேரு
ஆய்
கவட்டையும் மெத்து அடக்கி மதர்த்து அறக் கெருவித்து
இதத்திடு நல் கலைச் சவுளித் தலைக் குலவிக் களி
கூரும்தனத்தியர் கட்கு இதத்து மிகுத்து
அனற்கு உள் மெழுக்கு எனப் புவியில் தவித்து இழி சொல்
பவக் கடல் உற்ற அயர்வாலே சலித்த வெறித் துடக்கு மனத்து
இடக்கன் எனச் சிரிக்க மயல் சலத்தின் வசைக்கு இணக்கம்
உறக் கடவேனோ
புனத்தின் மலைக் குறத்தி உயர்த் திருக்கு தனக் குடத்தின்
நறைப் புயத்தவ நல் கருத்தை உடைக் குக வீரா
பொருப்பு அரசற்கு இரக்கமொடு உற்ற அறல் சடிலத்த அச்
சிவனில் புலச்சி தனக்கு இதத்தை மிகுத்திடு நாதா
சினத்து எதிர் துட்ட அரக்கர் தமைத் திகைத்து விழக் கணப்
பொழுதில் சிதைத்திடு நல் கதிர்க் கை படைத்து
உடையோனே
செருக்கொடு நல் தவக் கமலத்து அயற்கும் அரிக்கு(ம்) அருள்
புரிசைத் திருப் பழநிக் கிரிக் குமரப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

கனத்து இறுகிப் பெருத்து இளகிப் பணைத்து மணத்து
இதத்து முகக் கறுப்பு மிகுத்து அடர்த்து நிகர் தல(ம்) மேரு
ஆய்
... பாரமுள்ளதாய், அழுத்தம் உள்ளதாய், பெருத்ததாய்,
நெகிழ்ச்சி உள்ளதாய், எழுச்சி உடையதாய், நறு மணம் வீசுவதாய்,
இதம் தருவதாய், நுனி கரு நிறம் உடையதாய், பரப்புள்ளதாய், மேரு
மலைக்கு ஒப்பானதாய்,
கவட்டையும் மெத்து அடக்கி மதர்த்து அறக் கெருவித்து
இதத்திடு நல் கலைச் சவுளித் தலைக் குலவிக் களி
கூரும்தனத்தியர் கட்கு இதத்து மிகுத்து
... கபடத்தை மிகவும்
உள்ளடக்கியதாய், செழிப்புள்ளதாய், மிக்க ஆடம்பரம் உள்ளதாய்,
இன்பம் தருமாறு நல்ல ஆடையையும், அணி கலன்களுடன்
மேற்கொண்டதாய், இன்பம் மிகும் மார்பகங்களை உடைய பொது
மகளிர் கண்களுக்கு இன்பத்துடன் ஈடுபட்டு,
அனற்கு உள் மெழுக்கு எனப் புவியில் தவித்து இழி சொல்
பவக் கடல் உற்ற அயர்வாலே சலித்த வெறித் துடக்கு மனத்து
இடக்கன் எனச் சிரிக்க மயல் சலத்தின் வசைக்கு இணக்கம்
உறக் கடவேனோ
... நெருப்பில் இட்ட மெழுகைப் போல் பூமியில்
தவிப்புண்டு, இழிவான சொல்லுக்கு இடமான பிறவிக் கடலில்
(நீந்த முடியாமல்) ஏற்பட்ட சோர்வினால் அலுத்த வெறியில் கட்டுண்ட
மனத்தையுடைய கீழ் மகன் என்று (உலகோர்) சிரிக்க, (வேசியர்)
மயக்கத்துக்கும் கோபத்துக்கும் வசை மொழிகளுக்கும் இணக்கம்
உடையவனாக இருக்கக் கடவேனோ?
புனத்தின் மலைக் குறத்தி உயர்த் திருக்கு தனக் குடத்தின்
நறைப் புயத்தவ நல் கருத்தை உடைக் குக வீரா
... தினைப்
புனத்திலிருந்த (வள்ளி) மலைக் குறத்தியாகிய வள்ளியின் சிறந்த
கண்களும், குடம் போன்ற மார்பகங்களும் படும் மணம் வீசும்
புயத்தவனே, நல்ல எண்ணத்தை உடைய குக வீரனே,
பொருப்பு அரசற்கு இரக்கமொடு உற்ற அறல் சடிலத்த அச்
சிவனில் புலச்சி தனக்கு இதத்தை மிகுத்திடு நாதா
... மலை
அரசனான இமவானிடம் அன்புடன் (அவனது நாட்டிற்குச்) சென்ற
கங்கையைத் தரித்த சடை முடியை உடைய அந்தச் சிவனிடத்து
உள்ள ஞானாம்பாளுக்கு மிகவும் ஆனந்தத்தை அளிக்கும்
குழந்தைநாதனே,
சினத்து எதிர் துட்ட அரக்கர் தமைத் திகைத்து விழக் கணப்
பொழுதில் சிதைத்திடு நல் கதிர்க் கை படைத்து
உடையோனே
... கோபத்துடன் எதிர்த்து வந்த துஷ்ட அரக்கர்களை
திகைப்புண்டு விழும்படி, ஒரு நொடிப் பொழுதில் அழித்திட்ட, நல்ல
ஒளி வீசும் கைப்படையாகிய வேலை உடையவனே,
செருக்கொடு நல் தவக் கமலத்து அயற்கும் அரிக்கு(ம்) அருள்
புரிசைத் திருப் பழநிக் கிரிக் குமரப் பெருமாளே.
... களிப்புடன்
நல்ல தவம் நிறைந்த தாமரைப் பீடத்துப் பிரமனுக்கும், திருமாலுக்கும்
அருள் பாலித்தவனே, மதில் சூழ்ந்த திருப் பழனி மலையில்
வீற்றிருக்கும் குமரப் பெருமாளே.

Similar songs:

142 - கனத்திறுகி (பழநி)

தனத்ததனத் தனத்ததனத்
     தனத்ததனத் தனத்ததனத்
          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான

149 - குறித்தமணி (பழநி)

தனத்ததனத் தனத்ததனத்
     தனத்ததனத் தனத்ததனத்
          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான

1020 - இருட் குழலை (பொதுப்பாடல்கள்)

தனத்ததனத் தனத்ததனத்
     தனத்ததனத் தனத்ததனத்
          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான

1021 - வினைத் திரளுக்கு (பொதுப்பாடல்கள்)

தனத்ததனத் தனத்ததனத்
     தனத்ததனத் தனத்ததனத்
          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான

Songs from this thalam பழநி

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song