முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உ(ள்)ள(ம்) மயங்கி
முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே முழுகு காதல் தனை மறந்து
பரம ஞான ஒளி சிறந்து முகம் ஒரு ஆறு மிக விரும்பி அயராதே
அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி
அவசமாகி உருகு தொண்டர் உடன் அதாகி விளையும் அன்பின் அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே
தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து தமர வேலை சுவற வென்ற வடி வேலா
தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர் அமுதம் உண்டு தரணி ஏழும் வலம் வரும் திண் மயில் வீரா
மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதணில் இருந்து வலிய காவல் புனை அணங்கின் மணவாளா
மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன(ம்) நெருங்கி வளர் சுவாமி மலை அமர்ந்த பெருமாளே.
கடுமையாகப் பொங்கி எழுந்த ஆலகால விஷத்தை உண்ட இரண்டு கண்களாகிய வேலினால் (இப் பொது மகளிரிடம்) மனம் மயங்கி, தாமரையின் மணம் உள்ள மொட்டுப் போன்ற மார்பின் மேல் முழுகுகின்ற காதலை மறந்து, மேலான ஞான ஒளியைச் சிறந்து வீசும் உனது ஆறு முகங்களையும் மிகவும் விரும்பி, சோர்வில்லாமல், அறுகம் புல், ஊமத்தை, மணம் வீசும் குவளை, வாசம் மிக்க திரு நீற்றுப் பச்சை வில்வ இவைகளை எல்லாம் நிரம்ப உன் பாதங்களின் மேலே சொரிந்து உனது திருவடியை விரும்பி, தன் வசம் அழிந்து மனம் உருகுகின்ற அடியார்களுடன் கலந்து கூடி, அதனால் உண்டாகும் அன்பினால் அடிமை என்னும் ஒழுக்க முறைமை பெறக் கூடிய ஒரு பேற்றை அருள்வாயாக. அஞ்சாமை கொண்ட வீரர்களின் தலைகளை வெட்டிச் சண்டை செய்த சூரனுடைய உடலை இரு கூறாகப் பிளந்து, ஒலிக்கும் கடல் வற்றும்படி வென்ற கூரிய வேலனே, முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியின் மார்பகங்களில் நிரம்ப பால் அமுதம் உண்டு, ஏழு உலகங்களையும் வலம் வந்த வலிய மயில் வீரனே, குற்றம் இல்லாத தினை விளைந்த புனத்தை விட்டு நீங்காது, பரண் மீது இருந்து பலமாகக் காவல் புரிந்த அணங்காகிய வள்ளியின் கணவனே, பொருந்திய புலி நகக் கொன்றை, அழகிய செருந்தி இவையுள்ள நந்தவனமும், மாமரக் காடும் நெருங்கி வளரும் (சுவாமிமலையில்) திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உ(ள்)ள(ம்) மயங்கி ... கடுமையாகப் பொங்கி எழுந்த ஆலகால விஷத்தை உண்ட இரண்டு கண்களாகிய வேலினால் (இப் பொது மகளிரிடம்) மனம் மயங்கி, முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே முழுகு காதல் தனை மறந்து ... தாமரையின் மணம் உள்ள மொட்டுப் போன்ற மார்பின் மேல் முழுகுகின்ற காதலை மறந்து, பரம ஞான ஒளி சிறந்து முகம் ஒரு ஆறு மிக விரும்பி அயராதே ... மேலான ஞான ஒளியைச் சிறந்து வீசும் உனது ஆறு முகங்களையும் மிகவும் விரும்பி, சோர்வில்லாமல், அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி ... அறுகம் புல், ஊமத்தை, மணம் வீசும் குவளை, வாசம் மிக்க திரு நீற்றுப் பச்சை வில்வ இவைகளை எல்லாம் நிரம்ப உன் பாதங்களின் மேலே சொரிந்து உனது திருவடியை விரும்பி, அவசமாகி உருகு தொண்டர் உடன் அதாகி விளையும் அன்பின் அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே ... தன் வசம் அழிந்து மனம் உருகுகின்ற அடியார்களுடன் கலந்து கூடி, அதனால் உண்டாகும் அன்பினால் அடிமை என்னும் ஒழுக்க முறைமை பெறக் கூடிய ஒரு பேற்றை அருள்வாயாக. தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து தமர வேலை சுவற வென்ற வடி வேலா ... அஞ்சாமை கொண்ட வீரர்களின் தலைகளை வெட்டிச் சண்டை செய்த சூரனுடைய உடலை இரு கூறாகப் பிளந்து, ஒலிக்கும் கடல் வற்றும்படி வென்ற கூரிய வேலனே, தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர் அமுதம் உண்டு தரணி ஏழும் வலம் வரும் திண் மயில் வீரா ... முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியின் மார்பகங்களில் நிரம்ப பால் அமுதம் உண்டு, ஏழு உலகங்களையும் வலம் வந்த வலிய மயில் வீரனே, மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதணில் இருந்து வலிய காவல் புனை அணங்கின் மணவாளா ... குற்றம் இல்லாத தினை விளைந்த புனத்தை விட்டு நீங்காது, பரண் மீது இருந்து பலமாகக் காவல் புரிந்த அணங்காகிய வள்ளியின் கணவனே, மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன(ம்) நெருங்கி வளர் சுவாமி மலை அமர்ந்த பெருமாளே. ... பொருந்திய புலி நகக் கொன்றை, அழகிய செருந்தி இவையுள்ள நந்தவனமும், மாமரக் காடும் நெருங்கி வளரும் (சுவாமிமலையில்) திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.