சிறிய எள்ளு, தினை, சிறு மணல் ஆகியவற்றின் அளவுள்ள உடலினை எடுத்து மறைந்த ஜன்மங்கள் எத்தனை? அலை வீசும் கடலுக்கடியில் பெருத்த சுறா மீனிலிருந்து சிறிய கடல் ஜந்து வரை எடுத்த பிறவிகள் எத்தனை? அவையெல்லாம் போதாவென்று மலைகளிலும் சுனைகளிலும் ஜனித்த பிறவிகள் எத்தனை? பலவிதமான உடம்புகளின் புகுந்து வளர்ந்து கீழ்மைக்குரிய பெண்களின் மார்பிலே மையல் கொண்டு அலைந்தமை எத்தனை? யமன் பல பல பிறவிகளிலும் பறித்துக் கொண்ட உயிர்கள் எத்தனை? மனத்திலேதான் எத்தனை வஞ்சகமான எண்ணங்கள்? வேண்டுமென்றே கெடுத்த மற்றவர்களின் குடிகள்தாம் எத்தனை? கொடிய மிருகம்போல் மற்ற உயிர்களை வதைத்தது எத்தனை? இவை யாவற்றையும் எண்ணினால் அளவிட முடியாது. விதி வகுத்த வழியினின்று மாறாமல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எத்தனை? கொசுவைப் போன்ற அற்பனகிய என்னை, முரட்டுக்குணம் உடைய என்னை, மூடர்கள் குலத்தனான என்னை, அறிவற்ற காமாதூரனான என்னை, உன் மலரடிகளில் என் நெஞ்சை வைத்து உருகுதற்கு இனியாகிலும் நீ அருள் புரிவாயாக. என்ற ஓசையோடு கூடிய சந்தத்தில் தமக்கே உரிய வெற்றி ஒலியோடு மத்தளமும், தமருகம் என்ற முரசும் கடல் அலை ஓசை போல ஆர்ப்பரிக்கவும், கோபம் பொங்கும் போர்க்களத்தில் இரத்தம் கொப்பளித்திடவும், போரில் யானைகளும், அசுரர்களும், குதிரைகளும், விற்களும் தெறித்து சின்னாபின்னமாக விழுந்திடவும், கழுகும் நரியும் பிணங்களைத் தின்ன, மாமிச மலை மீது நின்று சூரனோடு போர் செய்த வேலனே, மனவளம் மிக்க உத்தமர்களான சிவனடியார்களும், தவமுநிவர் கூட்டங்களும் தேன் நிறைந்த மலர்களைக் கொண்டு பணிகின்ற திருத்தணிகை என்ற திருப்பதியிலே வீற்றிருக்கும் குறப்பெண் வள்ளியின் மணவாளப் பெருமாளே.
சி(ன்)னத் திலத் தினை சிறுமணல் அளவுடல் ... சிறிய எள்ளு, தினை, சிறு மணல் ஆகியவற்றின் அளவுள்ள உடலினை செறித்த(து) எத்தனை ... எடுத்து மறைந்த ஜன்மங்கள் எத்தனை? சிலைகட லினிலுயிர் செனித்த தெத்தனை திரள்கய லெனபல ... அலை வீசும் கடலுக்கடியில் பெருத்த சுறா மீனிலிருந்து சிறிய கடல் ஜந்து வரை எடுத்த பிறவிகள் எத்தனை? அதுபோதா ... அவையெல்லாம் போதாவென்று செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை ... மலைகளிலும் சுனைகளிலும் ஜனித்த பிறவிகள் எத்தனை? செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு செடத்தில் ... பலவிதமான உடம்புகளின் புகுந்து வளர்ந்து கீழ்மைக்குரிய பெண்களின் மார்பிலே மையல் கொண்டு அலைந்தமை எத்தனை? எத்தனை நமனுயிர் பறிகொள்வது அளவேதோ ... யமன் பல பல பிறவிகளிலும் பறித்துக் கொண்ட உயிர்கள் எத்தனை? மனத்தி லெத்தனை நினைகவ டுகள் ... மனத்திலேதான் எத்தனை வஞ்சகமான எண்ணங்கள்? குடி கெடுத்த தெத்தனை ... வேண்டுமென்றே கெடுத்த மற்றவர்களின் குடிகள்தாம் எத்தனை? மிருகம தெனவுயிர் வதைத்த தெத்தனை ... கொடிய மிருகம்போல் மற்ற உயிர்களை வதைத்தது எத்தனை? அளவிலை ... இவை யாவற்றையும் எண்ணினால் அளவிட முடியாது. விதிகரம் ஒழியாமல் வகுத்த தெத்தனை ... விதி வகுத்த வழியினின்று மாறாமல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எத்தனை? மசகனை முருடனை ... கொசுவைப் போன்ற அற்பனகிய என்னை, முரட்டுக்குணம் உடைய என்னை, மடைக்குலத்தனை மதியழி விரகனை ... மூடர்கள் குலத்தனான என்னை, அறிவற்ற காமாதூரனான என்னை, மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் புரிவாயே ... உன் மலரடிகளில் என் நெஞ்சை வைத்து உருகுதற்கு இனியாகிலும் நீ அருள் புரிவாயாக. தனத்த னத்தன தனதன தனதன திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி தகுத்த குத்தகு தகுதகு தகுதகு ...... தகுதீதோ தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு ... என்ற ஓசையோடு கூடிய சந்தத்தில் தமித்த மத்தள தமருக விருதொலி கடல்போல ... தமக்கே உரிய வெற்றி ஒலியோடு மத்தளமும், தமருகம் என்ற முரசும் கடல் அலை ஓசை போல ஆர்ப்பரிக்கவும், சினத்தமர்க்கள செருதிகழ் குருதிய திமிழ்த்திட ... கோபம் பொங்கும் போர்க்களத்தில் இரத்தம் கொப்பளித்திடவும், கரி யசுரர்கள் பரி சிலை தெறித்திட ... போரில் யானைகளும், அசுரர்களும், குதிரைகளும், விற்களும் தெறித்து சின்னாபின்னமாக விழுந்திடவும், கழு நரிதின நிணமிசை பொரும்வேலா ... கழுகும் நரியும் பிணங்களைத் தின்ன, மாமிச மலை மீது நின்று சூரனோடு போர் செய்த வேலனே, செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ முநிக்கணத்தவர் ... மனவளம் மிக்க உத்தமர்களான சிவனடியார்களும், தவமுநிவர் கூட்டங்களும் மதுமலர் கொடுபணி ... தேன் நிறைந்த மலர்களைக் கொண்டு பணிகின்ற திருத்தணிப்பதி மருவிய ... திருத்தணிகை என்ற திருப்பதியிலே வீற்றிருக்கும் குறமகள் பெருமாளே. ... குறப்பெண் வள்ளியின் மணவாளப் பெருமாளே.