தாக்கு அமருக்கு
ஒரு சாரையை
வேறொரு சாக்ஷியற
பசி யாறியை
நீறிடு சாஸ்த்ர வழிக்கு
அதி தூரனை
வேர்விழு தவமூழ்கும்
தாற்பர்யம் அற்று உழல் பாவியை
நாவலர் போல்
பரிவுற்று உனையே கருதாது இகல் சாற்று
தமிழ்க்குரை ஞாளியை
நாள்வரை தடுமாறி
போக்கிடமற்ற வ்ருதாவனை
ஞானிகள் போற்றுதல் அற்ற துரோகியை
மாமருள் பூத்த மலத்ரய பூரியை
நேரிய புலையேனை
போக்கிவி டக் கடனோ
கதியானது அடியாரொடு போய்
பெறுகைக்கு இலையோ
போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயிலா
அருள்புரிவாயே
மூக்கறை
மட்டை
மகாபல
காரணி
சூர்ப்பநகைப் படு மூளி
உதாசனி
மூர்க்க குலத்தி
விபீஷணர் சோதரி
முழுமோடி
மூத்த அரக்கன் இராவணனோடு
இயல்பேற்றிவிட
கமலாலய சீதையை
மோட்டன் வளைத்து
ஒரு தேர்மிசையே கொடு முகிலேபோய்
மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டில்
இருத்திய நாள்
அவன் வேரற
மார்க்க முடித்த
விலாளிகள் நாயகன் மருகோனே
வாச்சிய மத்தள பேரிகை போல்
மறை வாழ்த்த
மலர்க்கழு நீர்தரு
நீள்சுனை வாய்த்த
திருத்தணி மாமலை மேவிய பெருமாளே.
தாக்கிச்செய்ய வேண்டிய போருக்கு ஒரு சாரைப்பாம்பு சென்றதைப் போன்றவனை (கோழை), அருகில் வேறு ஒருவரையும் சாக்ஷியாக வைத்து உண்பிக்காமல் தான்மாத்திரம் உண்ணுபவனை (சுயநலவாதி), திருநீற்றைத் தரிக்கிற சைவசாஸ்திர வழிக்கு வெகு தொலைவில் உள்ளவனை (சிவத்வேஷி), மரத்தைத் தாங்கும் வேர்போல் உயிரைத்தாங்கும் தவத்தில் மூழ்கும் நற்பயனை விடுத்து வீணில் உழலும் பாவியை (நாஸ்திகன்), புலவர் போல நடித்துக்கொண்டு, அன்போடு உன்னை நினையாமல், சண்டை செய்து தமிழிலே வைது வாதிட்டுக் குரைக்கும் நாயினை (நாய் போன்றவன்), இந்தநாள் வரைக்கும் தடுமாற்றம் அடைந்து, வேறு புகலிடம் இல்லாத வீணனை (வீணன்), மெய்யறிவாளர்களைப் போற்றாதுவிட்ட துரோக சிந்தனை உடையவனை (துரோகி), பெரும் அஞ்ஞானம் நிறைந்த மும்மலங்கள் (ஆணவம், கன்மம், மாயை) சேர்ந்த கீழ்மகனை (மகாபாவி), பறையனுக்குச் சமானமானவனை (மிலேச்சன்), இத்தகைய பாவியாகிய அடியேனை (முருகா, நீ) நீக்கிவிடக் கடவதோ? (இதுவரை அருணகிரியார் தம்மைத் தாழ்த்திக் கொண்டு கோழை, சுயநலவாதி, சிவத்வேஷி, நாஸ்திகன், நாய்போன்றவன், வீணன், துரோகி, மகாபாவி, மிலேச்சன் என்று கூறுகிறார்). மோக்ஷ உலகில் உன் அடியார்களோடு சேர்ந்து யானும் போய் பெறக்கூடிய பாக்கியம் எனக்கு இல்லையா? போர் செய்வதும், ஒளிவிடுவதுமான வைரம் போன்ற கூரிய வேலினையும், மயிலினையும் உடையவனே, திருவருள் புரியவேண்டும். (இனி, ராமாயணக் கதைக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறார்). மூக்கு அறுபட்டவளும், அறிவில்லாதவளும், பெரும் வலிமையுள்ளவளும், ராவணாதியர்களின் வதைக்கு காரணமாக இருந்தவளும், சூர்ப்பநகையென்ற பெயருடன், மூளியான கொடியவளும், அவமதிக்கத் தக்கவளும், மூர்க்க குணமுள்ள அசுர குலத்தில் பிறந்தவளும், விபீஷணருக்கு சகோதரியும், முழு மாயக்காரியும் ஆகிய சூர்ப்பநகை, அண்ணனும் அரக்கனுமான ராவணனிடம் சென்று சீதையின் அழகின் தன்மையை அவன் மனத்தில் புகுத்திவிட, தாமரைக் கோவிலில் வாழும் லக்ஷ்மியாகிய சீதாதேவியை மூர்க்கனாகிய அந்த ராவணன் மாயமாகக் கவர்ந்து ஒற்றைத் தேரிலே வைத்து மேகமண்டலம் சென்று, பிரசித்தி பெற்ற, அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில் (அசோகவனத்தில்) சிறை வைத்தபோது, அந்த ராவணனின் வம்சமே வேரோடு அற்றுப்போகும்படி, அதற்குரிய வழியை நிறைவேற்றிய வில்லாதி வீரர்களின் தலைவனாம் ராமனின் மருமகனே, வாத்தியங்களான மத்தளம், பேரிகை இவற்றின் ஓசை போல வேதியரின் வேத கோஷங்கள் வாழ்த்தவும், செங்கழுநீர் மலரை நாள்தோறும் தருகின்ற நீண்ட சுனை வாய்க்கப் பெற்ற திருத்தணிகை என்னும் பெருமலையில் மேவிய பெருமாளே.