வார் உற்று எழும் பூண் முலை வஞ்சியர்
கார் உற்று எழும் நீள் குழல் மஞ்சியர்
வாலக் குயில் போல் மொழி கொஞ்சியர்
தெரு மீதே மாண் உற்று எதிர் மோகன விஞ்சையர்
சேல் உற்று எழு நேர் விழி விஞ்சியர்
வாகக் குழையாம் அபரஞ்சியர் மயலாலே
சீர் உற்று எழு(ம்) ஞானமுடன் கல்வி நேர் அற்றவர் மால் கொ(ண்)டு மங்கியே
சேர் உற்ற அறிவானது அழிந்து உயிர் இழவா முன்
சேவல் கொடியோடு சிகண்டியின் மீது உற்று அறிஞோர் புகழ் பொங்கிய தேசுக் கதிர் கோடி எனும் பதம் அருள்வாயே
போர் உற்றிடு சூரர் சிரங்களை வீரத்தோடு பாரில் அரிந்து எழு பூதக் கொடி சோரி அருந்திட விடும் வேலா
பூகக் குலையே விழ மென் கயல் தாவக் குலை வாழைகளும்
செறி போகச் செ(ந்) நெ(ல்)லே உதிரும் செய்கள் அவை கோடி
சாரல் கிரி தோறும் எழும் பொழில் தூரத் தொழுவார் வினை சிந்திடு தாது உற்று எழு கோபுர மண்டபம் அவை சூழும்
தார் மெத்திய தோரண மென் தெரு தேர் சுற்றிய வார் பதி
அண்டர்கள் தாம் மெச்சிய நீள் தணி அம் பதி பெருமாளே.
கச்சை மீறி எழுகின்ற, ஆபரணம் அணிந்த மார்பகத்தை உடைய, வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவர்கள், மேகத்தின் கரு நிறத்தை ஒத்து எழுகின்ற நீண்ட கூந்தலின் அழகு உடையவர்கள், இளங் குயில் போல் இனிமையுள்ள பேச்சுக்களைப் பேசிக் கொஞ்சுபவர்கள், தெருவில் படாடோபத்துடன் எதிர்ப்படுகின்ற, காம மயக்கம் உண்டாக்க வல்ல, மாய வித்தைக்காரிகள், சேல் மீனுக்கு நிகராய் எழுகின்ற கண்களை உடையவர்கள், அழகுள்ள குண்டலம் அணிந்துள்ள, புடமிட்ட பொன் போன்ற நிறத்தவர்கள் (ஆகிய பொது மாதர்கள் மீதுள்ள) மோக மயக்கத்தால், சீரான ஞானமும் கல்வியும் ஒழுக்கமும் இல்லாத அந்த விலைமாதர்கள் மீதுள்ள ஆசை காரணமாக நான் ஒளி மழுங்கி, எனக்குள்ள அறிவும் கெட்டுப் போய் உயிரை இழப்பதற்கு முன்பாக, சேவற் கொடியோடு, மயிலின் மீது நீ ஆரோகணித்து, அறிஞர்கள் பாடிய உனது திருப்புகழ் நிறைந்துள்ள ஒளிச் சோதி கோடி என்னும்படி வீசுகின்ற திருவடியை அருள்வாயாக. போர்க் கோலம் பூண்டு வந்த அசுரர்களின் தலைகளை வீரத்துடன் இந்தப் பூமியில் வெட்டி வீழ்த்தி, எழுந்துள்ள பூத கணங்களும், காக்கைகளும் ரத்தத்தைக் குடிக்கும்படி வேலைச் செலுத்தியவனே, பாக்கு மரங்களின் குலைகள் சாய்ந்து விழும்படி மிருதுவான உடல் வாய்ந்த கயல் மீன்கள் தாவ, அந்தக் குலைகள் வீழ்வதால் (கீழுள்ள) வாழைக் குலைகளும் நெருங்கிச் செழிப்புடன் வளர்ந்த செந்நெற் கதிர்களும் உதிர்ந்து விழும் வயல்கள் பல கோடிக் கணக்காகவும், மலைச் சாரல் தோறும் எழுந்து வளர்ந்துள்ள சோலைகளும், தூரத்தே கண்டு தொழுபவர்களுடைய வினைகளைத் தொலைக்கும், பொன் மயமாக எழுந்துள்ள கோபுரங்களும், மண்டபங்களும் சூழ்ந்துள்ள, மாலைகளும், நிறைந்த தோரணங்களும், அமைதியான தெருக்களும் உள்ள, தேர் சுற்றி வருவதும் ஆகிய பெரிய ஊர், தேவர்கள் யாவரும் புகழும் திருத்தணிகையாகிய அழகிய ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே.
வார் உற்று எழும் பூண் முலை வஞ்சியர் ... கச்சை மீறி எழுகின்ற, ஆபரணம் அணிந்த மார்பகத்தை உடைய, வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவர்கள், கார் உற்று எழும் நீள் குழல் மஞ்சியர் ... மேகத்தின் கரு நிறத்தை ஒத்து எழுகின்ற நீண்ட கூந்தலின் அழகு உடையவர்கள், வாலக் குயில் போல் மொழி கொஞ்சியர் ... இளங் குயில் போல் இனிமையுள்ள பேச்சுக்களைப் பேசிக் கொஞ்சுபவர்கள், தெரு மீதே மாண் உற்று எதிர் மோகன விஞ்சையர் ... தெருவில் படாடோபத்துடன் எதிர்ப்படுகின்ற, காம மயக்கம் உண்டாக்க வல்ல, மாய வித்தைக்காரிகள், சேல் உற்று எழு நேர் விழி விஞ்சியர் ... சேல் மீனுக்கு நிகராய் எழுகின்ற கண்களை உடையவர்கள், வாகக் குழையாம் அபரஞ்சியர் மயலாலே ... அழகுள்ள குண்டலம் அணிந்துள்ள, புடமிட்ட பொன் போன்ற நிறத்தவர்கள் (ஆகிய பொது மாதர்கள் மீதுள்ள) மோக மயக்கத்தால், சீர் உற்று எழு(ம்) ஞானமுடன் கல்வி நேர் அற்றவர் மால் கொ(ண்)டு மங்கியே ... சீரான ஞானமும் கல்வியும் ஒழுக்கமும் இல்லாத அந்த விலைமாதர்கள் மீதுள்ள ஆசை காரணமாக நான் ஒளி மழுங்கி, சேர் உற்ற அறிவானது அழிந்து உயிர் இழவா முன் ... எனக்குள்ள அறிவும் கெட்டுப் போய் உயிரை இழப்பதற்கு முன்பாக, சேவல் கொடியோடு சிகண்டியின் மீது உற்று அறிஞோர் புகழ் பொங்கிய தேசுக் கதிர் கோடி எனும் பதம் அருள்வாயே ... சேவற் கொடியோடு, மயிலின் மீது நீ ஆரோகணித்து, அறிஞர்கள் பாடிய உனது திருப்புகழ் நிறைந்துள்ள ஒளிச் சோதி கோடி என்னும்படி வீசுகின்ற திருவடியை அருள்வாயாக. போர் உற்றிடு சூரர் சிரங்களை வீரத்தோடு பாரில் அரிந்து எழு பூதக் கொடி சோரி அருந்திட விடும் வேலா ... போர்க் கோலம் பூண்டு வந்த அசுரர்களின் தலைகளை வீரத்துடன் இந்தப் பூமியில் வெட்டி வீழ்த்தி, எழுந்துள்ள பூத கணங்களும், காக்கைகளும் ரத்தத்தைக் குடிக்கும்படி வேலைச் செலுத்தியவனே, பூகக் குலையே விழ மென் கயல் தாவக் குலை வாழைகளும் ... பாக்கு மரங்களின் குலைகள் சாய்ந்து விழும்படி மிருதுவான உடல் வாய்ந்த கயல் மீன்கள் தாவ, அந்தக் குலைகள் வீழ்வதால் (கீழுள்ள) வாழைக் குலைகளும் செறி போகச் செ(ந்) நெ(ல்)லே உதிரும் செய்கள் அவை கோடி ... நெருங்கிச் செழிப்புடன் வளர்ந்த செந்நெற் கதிர்களும் உதிர்ந்து விழும் வயல்கள் பல கோடிக் கணக்காகவும், சாரல் கிரி தோறும் எழும் பொழில் தூரத் தொழுவார் வினை சிந்திடு தாது உற்று எழு கோபுர மண்டபம் அவை சூழும் ... மலைச் சாரல் தோறும் எழுந்து வளர்ந்துள்ள சோலைகளும், தூரத்தே கண்டு தொழுபவர்களுடைய வினைகளைத் தொலைக்கும், பொன் மயமாக எழுந்துள்ள கோபுரங்களும், மண்டபங்களும் சூழ்ந்துள்ள, தார் மெத்திய தோரண மென் தெரு தேர் சுற்றிய வார் பதி ... மாலைகளும், நிறைந்த தோரணங்களும், அமைதியான தெருக்களும் உள்ள, தேர் சுற்றி வருவதும் ஆகிய பெரிய ஊர், அண்டர்கள் தாம் மெச்சிய நீள் தணி அம் பதி பெருமாளே. ... தேவர்கள் யாவரும் புகழும் திருத்தணிகையாகிய அழகிய ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே.