இறைச்சிப் பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்கப் பரப்பப் பட்டு
எலுப்புக் கட்டளைச் சுற்றிச் சுவர் கோலி
எடுத்துச் செப்பு எனக் கட்டிப் புதுக்குப் புத்து அகத்தில் புக்கு
எனக்குச் சற்று உனக்குச் சற்று எனும் ஆசைச் சிறைக்கு ஒத்து இப் பிறப்பில் பட்டு
உறக்கம் சொப்பனத்து உற்றுத் திகைக்க பட்டு அவத்தைப் பட்டு உழலாது
உன் திருப் பத்மத் திறத்தைப் பற்றுகைக்குச் சித்திரத்தைச் சொல்
திதம் கொற்றப் புகழ்ச் செப்பித் திரிவேனோ
பிறைச் செக்கர் புரைக்கு ஒத்துச் சடைப் பச்சைக் கொடிக்கு இச்சைப் பிறக்குற்றத் திருப் பக்கச் சிவநாதர்
பெருக்கு அப்பு அத் தடக் கைக் கற்பகத் தொப்பைக் கணத்துக்குப் பிரச்சித்த
கொடிக் குக்(க)டக் கொடியோனே
பறைக் கொட்டிக் களைச்சு உற்றக் குறள் செக்கண் கணத்திற்குப் பலிக்குப் பச்சுடல் குத்திப் பகிர் வேலா
பணம் பத்திக் கணத் துத்திப் படுக்கைக் கச்சபத்து இச்சைப் படுக் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே.
மாமிசத்துடன், அதைப் பற்றியுள்ள ரத்தத்தைச் சேர்த்து, அந்த ரத்தம் பொருந்துவதற்குத் தக்கவாறு உடலிலே பரப்பி வைத்து, எலும்புச் சட்டத்தைச் சுற்றிலும் தோல் என்ற சுவரை வகுத்து, எடுத்து ஒரு பாத்திரமாக ஏற்படுத்தி அலங்கரித்த புதிய வீட்டில் புகுந்து (அதாவது உடலெடுத்துப் பிறந்து), எனக்குக் கொஞ்சம் வேண்டும், உனக்கும் சற்று வேண்டும் என்ற ஆசை எனப்படும் சிறைச் சாலையில் இருக்கச் சம்மதித்து, இந்தப் பிறப்பை அடைந்து, தூக்கம், கனவு இவைகளை அடைந்து, மயக்கம் உற்று, வேதனை அனுபவித்துத் திரியாமல், உனது தாமரைத் திருவடிகளின் சார்பைப் பற்றி உய்வதற்கு, உன் அழகை வெளிப்படுத்தும் சொற்களால் உனது நிலைத்த வீரத் திருப்புகழைச் சொல்லித் திரிய மாட்டேனோ? பெருமையும் செந்நிறமும் கொண்ட பிறைக்குத் தலையில் இடம் தந்தது போல, பின்னிய கூந்தலைக் கொண்ட, பச்சை நிறத்தாளான கொடி போன்ற பார்வதிக்கு ஆசை பிறப்பதற்குத் தக்க அழகிய இடப் பாகத்தைத் தந்துள்ள சிவபெருமானுடைய (சடையிலிருந்து) பெருகுகின்ற கங்கைக்கும், அந்தப் பெரும் துதிக்கையை உடைய விநாயகரைப் போல பெரிய வயிற்றை உடைய பூத கணங்களுக்கும் நன்கு தெரிந்தவனே, உயரமான கோழிக் கொடியை உடையவனே, பறை வாத்தியங்களை முழக்கிக் களைப்பு அடைந்துள்ள, சிவந்த கண்களை உடைய, குள்ள பூதக் கூட்டங்களின் உணவுக்கு, அசுரர்களின் பசிய உடலைக் குத்திப் பகிர்ந்தளித்த வேலனே, படங்களின் வரிசையையும், நெருங்கிய புள்ளிகளையும் உடைய ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்ட, ஆமை உரு எடுத்த, திருமால் ஆசைப்பட்ட இடமான கச்சி நகரில் (காஞ்சீபுரத்தில்) உறையும் அழகிய பெருமாளே.
இறைச்சிப் பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்கப் பரப்பப் பட்டு ... மாமிசத்துடன், அதைப் பற்றியுள்ள ரத்தத்தைச் சேர்த்து, அந்த ரத்தம் பொருந்துவதற்குத் தக்கவாறு உடலிலே பரப்பி வைத்து, எலுப்புக் கட்டளைச் சுற்றிச் சுவர் கோலி ... எலும்புச் சட்டத்தைச் சுற்றிலும் தோல் என்ற சுவரை வகுத்து, எடுத்துச் செப்பு எனக் கட்டிப் புதுக்குப் புத்து அகத்தில் புக்கு ... எடுத்து ஒரு பாத்திரமாக ஏற்படுத்தி அலங்கரித்த புதிய வீட்டில் புகுந்து (அதாவது உடலெடுத்துப் பிறந்து), எனக்குச் சற்று உனக்குச் சற்று எனும் ஆசைச் சிறைக்கு ஒத்து இப் பிறப்பில் பட்டு ... எனக்குக் கொஞ்சம் வேண்டும், உனக்கும் சற்று வேண்டும் என்ற ஆசை எனப்படும் சிறைச் சாலையில் இருக்கச் சம்மதித்து, இந்தப் பிறப்பை அடைந்து, உறக்கம் சொப்பனத்து உற்றுத் திகைக்க பட்டு அவத்தைப் பட்டு உழலாது ... தூக்கம், கனவு இவைகளை அடைந்து, மயக்கம் உற்று, வேதனை அனுபவித்துத் திரியாமல், உன் திருப் பத்மத் திறத்தைப் பற்றுகைக்குச் சித்திரத்தைச் சொல் ... உனது தாமரைத் திருவடிகளின் சார்பைப் பற்றி உய்வதற்கு, உன் அழகை வெளிப்படுத்தும் சொற்களால் திதம் கொற்றப் புகழ்ச் செப்பித் திரிவேனோ ... உனது நிலைத்த வீரத் திருப்புகழைச் சொல்லித் திரிய மாட்டேனோ? பிறைச் செக்கர் புரைக்கு ஒத்துச் சடைப் பச்சைக் கொடிக்கு இச்சைப் பிறக்குற்றத் திருப் பக்கச் சிவநாதர் ... பெருமையும் செந்நிறமும் கொண்ட பிறைக்குத் தலையில் இடம் தந்தது போல, பின்னிய கூந்தலைக் கொண்ட, பச்சை நிறத்தாளான கொடி போன்ற பார்வதிக்கு ஆசை பிறப்பதற்குத் தக்க அழகிய இடப் பாகத்தைத் தந்துள்ள சிவபெருமானுடைய பெருக்கு அப்பு அத் தடக் கைக் கற்பகத் தொப்பைக் கணத்துக்குப் பிரச்சித்த ... (சடையிலிருந்து) பெருகுகின்ற கங்கைக்கும், அந்தப் பெரும் துதிக்கையை உடைய விநாயகரைப் போல பெரிய வயிற்றை உடைய பூத கணங்களுக்கும் நன்கு தெரிந்தவனே, கொடிக் குக்(க)டக் கொடியோனே ... உயரமான கோழிக் கொடியை உடையவனே, பறைக் கொட்டிக் களைச்சு உற்றக் குறள் செக்கண் கணத்திற்குப் பலிக்குப் பச்சுடல் குத்திப் பகிர் வேலா ... பறை வாத்தியங்களை முழக்கிக் களைப்பு அடைந்துள்ள, சிவந்த கண்களை உடைய, குள்ள பூதக் கூட்டங்களின் உணவுக்கு, அசுரர்களின் பசிய உடலைக் குத்திப் பகிர்ந்தளித்த வேலனே, பணம் பத்திக் கணத் துத்திப் படுக்கைக் கச்சபத்து இச்சைப் படுக் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே. ... படங்களின் வரிசையையும், நெருங்கிய புள்ளிகளையும் உடைய ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்ட, ஆமை உரு எடுத்த, திருமால் ஆசைப்பட்ட இடமான கச்சி நகரில் (காஞ்சீபுரத்தில்) உறையும் அழகிய பெருமாளே.