வரிசையாக நிறைந்திருந்த பல் வேரற்று விழுந்து போக, பாழ்பட்ட சட்டையான இந்த உடலின் செயல்கள் தடுமாறி, மயிரெல்லாம் கொக்கின் நிறமாக வெளுத்து, உடல் கூன் அடைந்து, ஊன்றுகோல் பிடித்து, கொட்டாவி விட்ட தலை குனிதலை அடைந்து, இவ்வாறு நிலை வேறுபாடுகளை அனுபவித்து, நின்றார், பின்னர் இறந்தார், ஐயோ கெட்டேன் எனக் கூறிக் கதறி, அ ஆ உ உ என்னும் ஒலியுடன் உறவினர் அழ, சுடுகாட்டுக்குச் சென்று, அங்கு பிணத்தைச் சுட்டுவிட்டு, (நீரில் மூழ்கி) வெளியேறி வருகின்ற அந்தப் பேதைமை வாய்ந்த துக்கம் நீங்காதோ? என்றும் உள்ளவனே, விரிந்த தோகையை உடைய மயில் மீது விளங்கி நிற்பவனே, காஞ்சீபுரத்துக் குமரேசனே, கொடுமை வாய்ந்த சூரன் கேடு அடைந்து கடலிடையே ஓட, போரினை பெரிய கடலில் புரிந்தவனே, முத்து மாலை அணிந்த தோளில் வெண்காந்தள் மலரைத் தவறாது விருப்பத்துடன் அணிபவனே, முதுமையே வாராதவனே, என்றும் இளமையாய் இருப்பவனே, என் தந்தையே, பரிசுத்தனே, பாசங்களினின்று நீங்கியவனே, முக்தியைத் தரும் பெருமாளே.
கொத்தார் பற் கால் அற்று ஏகப் பாழ் குப்பாயத்திற் செயல்மாறி ... வரிசையாக நிறைந்திருந்த பல் வேரற்று விழுந்து போக, பாழ்பட்ட சட்டையான இந்த உடலின் செயல்கள் தடுமாறி, கொக்காகிக் கூனிக் கோல் தொட்டே ... மயிரெல்லாம் கொக்கின் நிறமாக வெளுத்து, உடல் கூன் அடைந்து, ஊன்றுகோல் பிடித்து, கொட்டாவிக் குப்புற வாசித் தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன் ... கொட்டாவி விட்ட தலை குனிதலை அடைந்து, இவ்வாறு நிலை வேறுபாடுகளை அனுபவித்து, நின்றார், பின்னர் இறந்தார், ஐயோ கெட்டேன் எனக் கூறிக் கதறி, அஆ உஉ எனவேகேள் செற்றே சுட்டே விட்டு ஏறிப்போம் ... அ ஆ உ உ என்னும் ஒலியுடன் உறவினர் அழ, சுடுகாட்டுக்குச் சென்று, அங்கு பிணத்தைச் சுட்டுவிட்டு, (நீரில் மூழ்கி) வெளியேறி வருகின்ற அப்பேதுத் துக்கம் அறாதோ ... அந்தப் பேதைமை வாய்ந்த துக்கம் நீங்காதோ? நித்தா வித்தாரத் தோகைக்கே நிற்பாய் கச்சிக் குமரேசா ... என்றும் உள்ளவனே, விரிந்த தோகையை உடைய மயில் மீது விளங்கி நிற்பவனே, காஞ்சீபுரத்துக் குமரேசனே, நிட்டூரச் சூர் கெட்டோடப் போர் நெட்டு ஓதத்திற் பொருதோனே ... கொடுமை வாய்ந்த சூரன் கேடு அடைந்து கடலிடையே ஓட, போரினை பெரிய கடலில் புரிந்தவனே, முத்தாரத் தோளிற் கோடற்பூ முட்டாது இட்டத்து அணிவோனே ... முத்து மாலை அணிந்த தோளில் வெண்காந்தள் மலரைத் தவறாது விருப்பத்துடன் அணிபவனே, முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ... முதுமையே வாராதவனே, என்றும் இளமையாய் இருப்பவனே, என் தந்தையே, பரிசுத்தனே, பாசங்களினின்று நீங்கியவனே, முக்தியைத் தரும் பெருமாளே.