மத வெம் கரிக்கு இரண்டு வலு கொம்பு எனத் திரண்டு வளரும் தனத்து அணிந்த மணி ஆரம்
வளை செம் கையில் சிறந்த ஒளி கண்டு நி(நீ)த்து இலங்கு வரரும் திகைத்து இரங்க வரும் மானார்
வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள் மிகை கண்டு உறக் கலங்கி மருளாதே
வி(து)டு சங்கை அற்று உணர்ந்து வலம் வந்து உனைப் புகழ்ந்து மிக விஞ்சு பொன் பதங்கள் தருவாயே
நதியும் திருக் கரந்தை மதியும் சடைக்கு அணிந்த நடநம்பர் உற்று இருந்த கயிலாய நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன்
சிரத்தொடு அங்கம் நவ துங்க ரத்நம் உந்து திரள் தோளும் சிதையும்படிக்கு ஒர் அம்பு தனை முன் தொடுத்த கொண்டல் திறல் செம் கண் அச்சுதன் தன் மருகோனே
தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உறப் பணிந்த திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே.
மதம் கொண்ட கொடிய யானையின் இரண்டு வலிமையான கொம்புகள் என்று சொல்லும்படியாக, திரட்சியுற்று வளர்கின்ற மார்பகங்கள் மீது அணிந்துள்ள ரத்தின மாலை, செங்கையில் வளைகள், இவைகள் ஒளி சிறந்து விளங்குவதைப் பார்த்து எல்லாவற்றையும் துறந்தவர்களான சான்றோர்களும் திகைப்புற்று மனம் நெகிழும்படி வருகின்ற மான் போன்ற மாதர்களின் விதம் விதமான இன்பம் தரும் செயல்களையும், சிரிப்புடன் கொஞ்சிப் பேசும் குணங்களின் மேம்பாட்டையும் பார்த்து, அவை மனத்தில் அழுந்த, உள்ளம் கலங்கி மோக மயக்கம் கொள்ளாமல், ஆசை விட்டொழிந்து, சிறிதேனும் சந்தேகம் கொள்ளாமல் உன்னை உணர்ந்து, உன்னைச் சுற்றி வலம் வந்து, உன்னைப் புகழ்ந்திட, மிக மேலான, அழகிய திருவடிகளைத் தந்து அருளுக. கங்கை ஆற்றையும், அழகிய கரந்தை மலரையும், பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்தவரும், நடனம் ஆடுகின்றவருமான நடராஜப் பெருமான் பொருந்தி வீற்றிருந்த கயிலாய மலையை, தனது கையால் பிடுங்க முயன்ற அசுரனாகிய ராவணனுடைய தலைகளும், உடலும், உயர்ந்த நவரத்தின மாலை விளங்கும் திரண்ட தோள்களும் சிதைந்து போகும்படி ஒப்பற்ற அம்பை முன்பு செலுத்தியவரும், மேகம் போன்று கரு நிறம் கொண்டவரும், வலிமை விளங்கும் செவ்விய கண்களை உடையவருமான ராமனின் (திருமாலின்) மருகனே, நாள்தோறும் உன்னைத் தொழுவதின் பயனை உணர்ந்த தேவர்கள் உன்னைத் தாழப் பணிந்த திரு அம்பலத்தே (சிதம்பரத்தில்) அமர்ந்த பெருமாளே.
மத வெம் கரிக்கு இரண்டு வலு கொம்பு எனத் திரண்டு வளரும் தனத்து அணிந்த மணி ஆரம் ... மதம் கொண்ட கொடிய யானையின் இரண்டு வலிமையான கொம்புகள் என்று சொல்லும்படியாக, திரட்சியுற்று வளர்கின்ற மார்பகங்கள் மீது அணிந்துள்ள ரத்தின மாலை, வளை செம் கையில் சிறந்த ஒளி கண்டு நி(நீ)த்து இலங்கு வரரும் திகைத்து இரங்க வரும் மானார் ... செங்கையில் வளைகள், இவைகள் ஒளி சிறந்து விளங்குவதைப் பார்த்து எல்லாவற்றையும் துறந்தவர்களான சான்றோர்களும் திகைப்புற்று மனம் நெகிழும்படி வருகின்ற மான் போன்ற மாதர்களின் வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள் மிகை கண்டு உறக் கலங்கி மருளாதே ... விதம் விதமான இன்பம் தரும் செயல்களையும், சிரிப்புடன் கொஞ்சிப் பேசும் குணங்களின் மேம்பாட்டையும் பார்த்து, அவை மனத்தில் அழுந்த, உள்ளம் கலங்கி மோக மயக்கம் கொள்ளாமல், வி(து)டு சங்கை அற்று உணர்ந்து வலம் வந்து உனைப் புகழ்ந்து மிக விஞ்சு பொன் பதங்கள் தருவாயே ... ஆசை விட்டொழிந்து, சிறிதேனும் சந்தேகம் கொள்ளாமல் உன்னை உணர்ந்து, உன்னைச் சுற்றி வலம் வந்து, உன்னைப் புகழ்ந்திட, மிக மேலான, அழகிய திருவடிகளைத் தந்து அருளுக. நதியும் திருக் கரந்தை மதியும் சடைக்கு அணிந்த நடநம்பர் உற்று இருந்த கயிலாய நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் ... கங்கை ஆற்றையும், அழகிய கரந்தை மலரையும், பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்தவரும், நடனம் ஆடுகின்றவருமான நடராஜப் பெருமான் பொருந்தி வீற்றிருந்த கயிலாய மலையை, தனது கையால் பிடுங்க முயன்ற அசுரனாகிய ராவணனுடைய சிரத்தொடு அங்கம் நவ துங்க ரத்நம் உந்து திரள் தோளும் சிதையும்படிக்கு ஒர் அம்பு தனை முன் தொடுத்த கொண்டல் திறல் செம் கண் அச்சுதன் தன் மருகோனே ... தலைகளும், உடலும், உயர்ந்த நவரத்தின மாலை விளங்கும் திரண்ட தோள்களும் சிதைந்து போகும்படி ஒப்பற்ற அம்பை முன்பு செலுத்தியவரும், மேகம் போன்று கரு நிறம் கொண்டவரும், வலிமை விளங்கும் செவ்விய கண்களை உடையவருமான ராமனின் (திருமாலின்) மருகனே, தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உறப் பணிந்த திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே. ... நாள்தோறும் உன்னைத் தொழுவதின் பயனை உணர்ந்த தேவர்கள் உன்னைத் தாழப் பணிந்த திரு அம்பலத்தே (சிதம்பரத்தில்) அமர்ந்த பெருமாளே.