விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம்
அடங்கிக் கைச் சிறையான அநேகமும்
அறல் ஓதியர் விழியாலே அறவே விழுங்கப்பட்டு
விரும்பத் தக்கன போகமும் மோகமும்
விளம்பத் தக்கன ஞானமும் மானமும்
வெறும் சுத்த சலமாய் வெளியாய் உயிர் விடும் நாளில்
இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல்
கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என
இடம் கட்டி சுடு காடு புகா முனம்
மனதாலே இறந்திட்டுப் பெறவே கதியாயினும்
இருந்திட்டுப் பெறவே மதியாயினும்
இரண்டில் தக்கது ஒரு ஊதியம் நீ தர இசைவாயே
கொடுங்கைப் பட்ட மராமரம் ஏழுடன் நடுங்க
சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய குரங்கைச் செற்று
மகா உததி தூள் எழ நிருதேசன்
குலம் கண் பட்ட நிசாசரர் கோ என
இலங்கைக்குள் தழலோன் எழ
நீடிய குமண்டைக் குத்திர ராவணனார் முடி அடியோடே பிடுங்க
தொட்ட சர அதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா
இயல் ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என
விருது ஊதும் ப்ரசண்டச் சொல் சிவ வேத சிகாமணி
ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ
பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே.
செலுத்தும் சாமர்த்தியத்திற்குத் தக்க எருமைக் கடாவை வாகனமாக உடைய யமன் வசத்தில் அடங்கி, கை வசத்திலிருந்த செல்வமும் பல பொருள்களும் கருமணலைப் போல் கரு நிறம் கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் கண்களால் முற்றிலுமாக கவரப்பட்டு, விரும்பி அடையத் தக்கனவான சுக போகங்களும், ஆசைகளும், சொல்லத் தக்கனவான அறிவும், பெருமையும், முழுப் பொய்யாகி அகல, உடலை விட்டு ஆவி வெளிப்பட்டுப் போகின்ற அந்த நாளில், (சுடு காட்டில்) அடுக்கப்படும் விறகு கட்டைகளுக்கு உணவாகி அடியேனுடைய இவ்வுடல் கிடக்கும்போது சுற்றத்தார்கள் கோ என்று ஓலமிட்டுக் கதற, கிடக்கும் இடத்தில் (பாடையில்) கட்டப்பட்டு சுடுகாட்டுக்குப் போவதற்கு முன்னே, என் மனதால் (உன்னுடன் இரண்டறக் கலந்து) சமாதி நிலையை அடைந்திட்டு நற்கதியைப் பெறவாவது, (அல்லது) இந்த உலகில் இருக்கும்போதே நல்ல அறிவைப் பெறவாவது, மேற் சொன்ன இரண்டில் எனக்குத் தகுந்ததான பயனை நீயே தீர்மானித்து, அதைக் கொடுக்க மனம் பொருந்துவாயாக. நீண்ட கிளைகளை உடைய ஏழு மராமரங்களை அவற்றின் உடல்கள் நடுங்கும்படியாக அம்பை விட்டும், சுக்ரீவனுடன் போர் புரிந்த குரங்காகிய வாலியை அழித்தும், பெரிய கடலில் தூசி கிளம்பும்படி, அரக்கர் தலைவன் ராவணனுடைய குலத்தைச் சார்ந்த அரக்கர்கள் எல்லாம் கோவென்ற சத்தத்தோடு அலற, இலங்கை நகருள் அக்கினி பகவான் எழுந்து தீப்பற்றி எரியச் செய்ய, செல்வம் மேலீட்டால் செருக்குண்ட, வஞ்சகம் நிறைந்த இராவணனனுடைய தலைகள் பத்தும் அடியோடு அறுபட்டு விழும்படியாக செலுத்திய அம்பைக் கொண்ட நாயகனாம் இராமன் மிகுந்த அன்பு கொள்வதற்குத் தகுந்த, நன்கு சிறந்த மருகனே, இந்த உலகத்துக்கு ஒப்பற்ற கவி அரசர் என்று வெற்றிச் சின்னங்கள் முழங்குகின்ற, பெருமையுடைய சொற்களைக் கொண்ட தேவாரப் பதிகங்களை ஓதிய சிவ வேத சிகாமணியாகிய ஞான சம்பந்த மூர்த்தியே, நூல் வகைகளுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனே, என்றும் மங்களகரமானவனே, பெரும்பற்றப் புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம் ... செலுத்தும் சாமர்த்தியத்திற்குத் தக்க எருமைக் கடாவை வாகனமாக உடைய யமன் வசத்தில் அடங்கிக் கைச் சிறையான அநேகமும் ... அடங்கி, கை வசத்திலிருந்த செல்வமும் பல பொருள்களும் அறல் ஓதியர் விழியாலே அறவே விழுங்கப்பட்டு ... கருமணலைப் போல் கரு நிறம் கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் கண்களால் முற்றிலுமாக கவரப்பட்டு, விரும்பத் தக்கன போகமும் மோகமும் ... விரும்பி அடையத் தக்கனவான சுக போகங்களும், ஆசைகளும், விளம்பத் தக்கன ஞானமும் மானமும் ... சொல்லத் தக்கனவான அறிவும், பெருமையும், வெறும் சுத்த சலமாய் வெளியாய் உயிர் விடும் நாளில் ... முழுப் பொய்யாகி அகல, உடலை விட்டு ஆவி வெளிப்பட்டுப் போகின்ற அந்த நாளில், இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல் ... (சுடு காட்டில்) அடுக்கப்படும் விறகு கட்டைகளுக்கு உணவாகி அடியேனுடைய இவ்வுடல் கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என ... கிடக்கும்போது சுற்றத்தார்கள் கோ என்று ஓலமிட்டுக் கதற, இடம் கட்டி சுடு காடு புகா முனம் ... கிடக்கும் இடத்தில் (பாடையில்) கட்டப்பட்டு சுடுகாட்டுக்குப் போவதற்கு முன்னே, மனதாலே இறந்திட்டுப் பெறவே கதியாயினும் ... என் மனதால் (உன்னுடன் இரண்டறக் கலந்து) சமாதி நிலையை அடைந்திட்டு நற்கதியைப் பெறவாவது, இருந்திட்டுப் பெறவே மதியாயினும் ... (அல்லது) இந்த உலகில் இருக்கும்போதே நல்ல அறிவைப் பெறவாவது, இரண்டில் தக்கது ஒரு ஊதியம் நீ தர இசைவாயே ... மேற் சொன்ன இரண்டில் எனக்குத் தகுந்ததான பயனை நீயே தீர்மானித்து, அதைக் கொடுக்க மனம் பொருந்துவாயாக. கொடுங்கைப் பட்ட மராமரம் ஏழுடன் நடுங்க ... நீண்ட கிளைகளை உடைய ஏழு மராமரங்களை அவற்றின் உடல்கள் நடுங்கும்படியாக அம்பை விட்டும், சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய குரங்கைச் செற்று ... சுக்ரீவனுடன் போர் புரிந்த குரங்காகிய வாலியை அழித்தும், மகா உததி தூள் எழ நிருதேசன் ... பெரிய கடலில் தூசி கிளம்பும்படி, அரக்கர் தலைவன் ராவணனுடைய குலம் கண் பட்ட நிசாசரர் கோ என ... குலத்தைச் சார்ந்த அரக்கர்கள் எல்லாம் கோவென்ற சத்தத்தோடு அலற, இலங்கைக்குள் தழலோன் எழ ... இலங்கை நகருள் அக்கினி பகவான் எழுந்து தீப்பற்றி எரியச் செய்ய, நீடிய குமண்டைக் குத்திர ராவணனார் முடி அடியோடே பிடுங்க ... செல்வம் மேலீட்டால் செருக்குண்ட, வஞ்சகம் நிறைந்த இராவணனனுடைய தலைகள் பத்தும் அடியோடு அறுபட்டு விழும்படியாக தொட்ட சர அதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா ... செலுத்திய அம்பைக் கொண்ட நாயகனாம் இராமன் மிகுந்த அன்பு கொள்வதற்குத் தகுந்த, நன்கு சிறந்த மருகனே, இயல் ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என ... இந்த உலகத்துக்கு ஒப்பற்ற கவி அரசர் என்று விருது ஊதும் ப்ரசண்டச் சொல் சிவ வேத சிகாமணி ... வெற்றிச் சின்னங்கள் முழங்குகின்ற, பெருமையுடைய சொற்களைக் கொண்ட தேவாரப் பதிகங்களை ஓதிய சிவ வேத சிகாமணியாகிய ஞான சம்பந்த மூர்த்தியே, ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ ... நூல் வகைகளுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனே, என்றும் மங்களகரமானவனே, பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே. ... பெரும்பற்றப் புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.