மரு அறா வெற்றி மலர் தொடா வில் கை வலி செயா நிற்கு(ம்) மதனாலும்
மதில்கள் தாவுற்ற கலை படா வட்ட மதி சுடா நிற்கும் அதனாலும்
இரு க(ண்)ணால் முத்தம் உதிர யாமத்தின் இரவினால் நித்தம் மெலியாதே
இடர் உறா மெத்த மயல் கொ(ள்)ளா நிற்கும் இவளை வாழ்விக்க வர வேணும்
கரிகள் சேர் வெற்பில் அரிய வேடிச்சி கலவி கூர் சித்ர மணி மார்பா
கனக மாணிக்க வடிவனே மிக்க கதிரகாமத்தில் உறைவோனே
முருகனே பத்தர் அருகனே முத்தி முதல்வனே பச்சை மயில் வீரா
முடுகி மேலிட்ட கொடிய சூர் கெட்டு முறிய வேல் தொட்ட பெருமாளே.
வாசனை நீங்காததும், வெற்றியே பெறுவதுமான மலர்ப் பாணங்களை தொடுத்து, (கரும்பு) வில்லைக் கையில் வைத்து வலிமையுடன் நிற்கும் மன்மதனாலும், மதில்களைத் தாண்டி வரும் கிரணங்களைக் கொண்ட வட்ட வடிவமான சந்திரன் கதிர்களால் (இவளைச்) சுட்டுக்கொண்டு நிற்பதனாலும், இரண்டு கண்களிலிருந்தும் முத்துப் போன்ற கண்ணீர் சிந்தி, யாமங்கள் தோறும் இரவில் தினமும் மெலியாதபடி, துன்பம் அடைந்து மிகவும் காம மயக்கம் கொண்டு நிற்கும் இந்தப் பெண்ணை வாழ்விக்க நீ வந்து அருள வேண்டும். யானைகள் கூடியுள்ள (வள்ளி) மலையில் அருமையான வேடப் பெண் வள்ளியுடன் சேர்ந்து இன்பம் துய்க்கும் அழகிய மணி மார்பனே, பொன், மாணிக்கம் போன்ற உருவத்தனே, சிறந்த கதிர்காமம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, முருகனே, பக்தர்களுக்கு அருகில் இருப்பவனே, முக்தி தரும் முதன்மையானவனே, பச்சை மயில் வீரனே, விரைந்து வந்து மேல் எதிர்த்த பொல்லாத சூரன் கேடு உற்று அழிபட, வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.
மரு அறா வெற்றி மலர் தொடா வில் கை வலி செயா நிற்கு(ம்) மதனாலும் ... வாசனை நீங்காததும், வெற்றியே பெறுவதுமான மலர்ப் பாணங்களை தொடுத்து, (கரும்பு) வில்லைக் கையில் வைத்து வலிமையுடன் நிற்கும் மன்மதனாலும், மதில்கள் தாவுற்ற கலை படா வட்ட மதி சுடா நிற்கும் அதனாலும் ... மதில்களைத் தாண்டி வரும் கிரணங்களைக் கொண்ட வட்ட வடிவமான சந்திரன் கதிர்களால் (இவளைச்) சுட்டுக்கொண்டு நிற்பதனாலும், இரு க(ண்)ணால் முத்தம் உதிர யாமத்தின் இரவினால் நித்தம் மெலியாதே ... இரண்டு கண்களிலிருந்தும் முத்துப் போன்ற கண்ணீர் சிந்தி, யாமங்கள் தோறும் இரவில் தினமும் மெலியாதபடி, இடர் உறா மெத்த மயல் கொ(ள்)ளா நிற்கும் இவளை வாழ்விக்க வர வேணும் ... துன்பம் அடைந்து மிகவும் காம மயக்கம் கொண்டு நிற்கும் இந்தப் பெண்ணை வாழ்விக்க நீ வந்து அருள வேண்டும். கரிகள் சேர் வெற்பில் அரிய வேடிச்சி கலவி கூர் சித்ர மணி மார்பா ... யானைகள் கூடியுள்ள (வள்ளி) மலையில் அருமையான வேடப் பெண் வள்ளியுடன் சேர்ந்து இன்பம் துய்க்கும் அழகிய மணி மார்பனே, கனக மாணிக்க வடிவனே மிக்க கதிரகாமத்தில் உறைவோனே ... பொன், மாணிக்கம் போன்ற உருவத்தனே, சிறந்த கதிர்காமம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, முருகனே பத்தர் அருகனே முத்தி முதல்வனே பச்சை மயில் வீரா ... முருகனே, பக்தர்களுக்கு அருகில் இருப்பவனே, முக்தி தரும் முதன்மையானவனே, பச்சை மயில் வீரனே, முடுகி மேலிட்ட கொடிய சூர் கெட்டு முறிய வேல் தொட்ட பெருமாளே. ... விரைந்து வந்து மேல் எதிர்த்த பொல்லாத சூரன் கேடு உற்று அழிபட, வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.