சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
809   வழுவூர் திருப்புகழ் ( - வாரியார் # 819 )  

தருவூரிசை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனனாதன தானன தானன
     தனனாதன தானன தானன
          தனனாதன தானன தானன ...... தனதானா

தருவூரிசை யாரமு தார்நிகர்
     குயிலார்மொழி தோதக மாதர்கள்
          தணியாமய லாழியி லாழவு ...... மமிழாதே
தழலேபொழி கோரவி லோசன
     மெறிபாசம காமுனை சூலமுள்
          சமனார்முகில் மேனிக டாவினி ...... லணுகாதே
கருவூறிய நாளுமு நூறெழு
     மலதேகமு மாவலு மாசைக
          படமாகிய பாதக தீதற ...... மிடிதீரக்
கனிவீறிய போதமெய் ஞானமு
     மியலார்சிவ நேசமு மேவர
          கழல்சேரணி நூபுர தாளிணை ...... நிழல்தாராய்
புருகூதன்மி னாளொரு பாலுற
     சிலைவேடுவர் மானொரு பாலுற
          புதுமாமயில் மீதணை யாவரு ...... மழகோனே
புழுகார்பனிர் மூசிய வாசனை
     யுரகாலணி கோலமென் மாலைய
          புரிநூலுமு லாவுது வாதச ...... புயவீரா
மருவூர்குளிர் வாவிகள் சோலைகள்
     செழிசாலிகு லாவிய கார்வயல்
          மகதாபத சீலமு மேபுனை ...... வளமூதூர்
மகதேவர்பு ராரிச தாசிவர்
     சுதராகிய தேவசி காமணி
          வழுவூரில்நி லாவிய வாழ்வருள் ...... பெருமாளே.
Easy Version:
தரு ஊர் இசையார் அமுது ஆர் நிகர் குயிலார் மொழி தோதக
மாதர்கள் தணியா மயல் ஆழியில் ஆழவும் அமிழாதே
தழலே பொழி கோர விலோசனம் எறி பாச மகா முனை
சூலம் உள் சமனார் முகில் மேனி கடாவினில் அணுகாதே
கரு ஊறிய நாளு மு(ந்)நூறு எழு மல தேகமும் ஆவலும்
ஆசை கபடம் ஆகிய பாதக தீது அற மிடி தீர
கனி வீறிய போத(ம்) மெய் ஞானமும் இயலார் சிவ நேசமுமே
வர கழல் சேர் அணி நூபுர தாள் இணை நிழல் தாராய்
புருகூதன் மி(ன்)னாள் ஒரு பால் உற சிலை வேடுவர் மான்
ஒரு பால் உற புதுமா மயில் மீது அணையாவரும்
அழகோனே
புழுகு ஆர் ப(ன்)னிர் மூசிய வாசனை உர(ம்) கால் அணி
கோல மென் மாலைய புரி நூலும் உலாவ துவாதச புய வீரா
மருவூர் குளிர் வாவிகள் சோலைகள் செழி சாலி குலாவிய
கார் வயல் மக தாபத சீலமுமே புனை வள மூதூர்
மக தேவர் புராரி சதாசிவர் சுதர் ஆகிய தேவ சிகாமணி
வழுவூரில் நிலாவிய வாழ்வருள் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

தரு ஊர் இசையார் அமுது ஆர் நிகர் குயிலார் மொழி தோதக
மாதர்கள் தணியா மயல் ஆழியில் ஆழவும் அமிழாதே
... மூங்கில்
மரத்தால் (செய்த புல்லாங்குழலால்) ஏற்படுகின்ற இசையில் வல்லவர்,
அமுதைப் போல் இனியவர், குயிலைப் போன்ற இனிய குரலை உடையவர்,
வஞ்சகம் செய்யும் விலைமாதர்கள் (மீதுள்ள) குறைவுபடாத காம இச்சைக்
கடலில் விழுந்து அழிந்து போகாமலும்,
தழலே பொழி கோர விலோசனம் எறி பாச மகா முனை
சூலம் உள் சமனார் முகில் மேனி கடாவினில் அணுகாதே
...
நெருப்பைப் பொழியும் பயங்கரமான கண்கள், (உயிரைப் பறிக்க) எறிந்து
வீசப்படும் பாசக் கயிறு, முள் போன்ற மிக்க கூர்மையை உடைய சூலம்
ஆகியவைகளை உடையவனும், கரு மேகம் போன்ற நிறம்
கொண்டவனுமாகிய யமன் தன் எருமைக் கடா வாகனத்தின் மீது ஏறி
வந்து என்னை நெருங்காமலும்,
கரு ஊறிய நாளு மு(ந்)நூறு எழு மல தேகமும் ஆவலும்
ஆசை கபடம் ஆகிய பாதக தீது அற மிடி தீர
... கரு
உற்பத்தியான பின் முன்னூற்று ஏழு நாட்களும், மும்மலங்களுக்கு
இடமான உடலும், மண், பெண், பொன் ஆகிய மூவாசைகளும்,
வஞ்சகத்தால் ஏற்படும் பாவங்களும் தீமைகளும் அற்றுப் போகவும்,
என் வறுமை ஒழியவும்,
கனி வீறிய போத(ம்) மெய் ஞானமும் இயலார் சிவ நேசமுமே
வர கழல் சேர் அணி நூபுர தாள் இணை நிழல் தாராய்
...
முதிர்ந்த அறிவும், மெய்ஞ் ஞானமும், தகுதி மிக்க சிவ நேசமும் எனக்கு
உண்டாக, கழல்கள் அணிந்த, சிலம்புகள் கொண்ட உனது இரு
திருவடிகளின் நிழலைத் தருவாயாக.
புருகூதன் மி(ன்)னாள் ஒரு பால் உற சிலை வேடுவர் மான்
ஒரு பால் உற புதுமா மயில் மீது அணையாவரும்
அழகோனே
... இந்திரன் மகளாகிய மின்னலை ஒத்த தேவயானை ஒரு
பக்கத்தில் வீற்றிருக்க, வில் ஏந்திய வேடர்களுடைய மான் போன்ற வள்ளி
மற்றொரு பக்கத்தில் வீற்றிருக்க, அதிசயிக்கத்தக்க சிறந்த மயிலின் மீது
அமர்ந்து அவர்களை அணைந்தவண்ணம் ஏறிவரும் அழகனே,
புழுகு ஆர் ப(ன்)னிர் மூசிய வாசனை உர(ம்) கால் அணி
கோல மென் மாலைய புரி நூலும் உலாவ துவாதச புய வீரா
...
புனுகு சட்டம் நிறைந்த பன்னீர் இவை நெருங்கிக் கூடிய, வாசனை உள்ள
மார்பில் அணிந்துள்ள மெல்லிய மாலையை உடையவனே, பூணூலும்
அசைகின்ற பன்னிரண்டு தோள்களை உடைய வீரனே,
மருவூர் குளிர் வாவிகள் சோலைகள் செழி சாலி குலாவிய
கார் வயல் மக தாபத சீலமுமே புனை வள மூதூர்
... வாசனை
உலாவும் குளிர்ந்த குளங்களும், சோலைகளும், செழிப்பான நெல்
தழைத்துள்ள அழகிய வயல்கள் சேர்ந்துள்ளதும், சிறந்த தவச் சீலர்கள்
வாழ்வதுமான வளப்பம் பொருந்திய பழைய ஊராகியது இந்த வழுவூர்.
மக தேவர் புராரி சதாசிவர் சுதர் ஆகிய தேவ சிகாமணி
வழுவூரில் நிலாவிய வாழ்வருள் பெருமாளே.
... மகாதேவர், திரி
புரங்களை அழித்தவர், சதாசிவர் ஆகிய சிவபெருமானின் மகனாகிய தேவ
சிகாமணியே, வழுவூரில் வீற்றிருந்து அடியார்களுக்கு வாழ்வு அருளும்
பெருமாளே.

Similar songs:

809 - தருவூரிசை (வழுவூர்)

தனனாதன தானன தானன
     தனனாதன தானன தானன
          தனனாதன தானன தானன ...... தனதானா

Songs from this thalam வழுவூர்

809 - தருவூரிசை

810 - தலை நாளில் பதம்

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song