வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலை குழல் ஆரமொடு தோள்புரள
வண்காதில் ஓலைகதிர் போலவொளி வீச
இதழ் மலர்போல
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி யாகநகை பேசி
உற வந்தாரை வாரும் இரு(ம்) நீர் உறவென
ஆசைமயல் இடுமாதர்
சங்காளர் சூதுகொலைகாரர்குடி கேடர்
சுழல் சிங்கார தோளர் பண ஆசையுளர் சாதியிலர் சண்டாளர்
சீசியவர் மாயவலையோடு அடியென்உழலாமல்
சங்கோதை நாதமொடு கூடி
வெகு மாயையிருள் வெந்தோட
மூலஅழல் வீச உபதேசமது தண்காதிலோதி
இரு பாதமலர் சேரஅருள் புரிவாயே
சிங்கார ரூபமயில் வாகனநமோநமென
கந்தாகுமாரசிவ தேசிகநமோநமென
சிந்தூர பார்வதி சுதாகரநமோநமென
விருதோதை சிந்தான சோதிகதிர் வேலவநமோநமென
கங்காள வேணிகுருவானவ நமோநமென
திண்சூரர் ஆழிமலை தூள்பட வை வேலைவிடு முருகோனே
இங்கீத வேதபிரமாவை விழ மோதி
ஒரு பெண்காதலோடு வன மேவி வளிநாயகியை
இன்பான தேனிரச மார்முலைவிடாதகர மணிமார்பா
எண் தோளர் காதல்கொடு காதல்கறியேபருகு
செங்காடு மேவிபிரகாசமயில் மேலழகொடு
என்காதல் மாலைமுடி ஆறுமுகவா
அமரர் பெருமாளே.
மார்பில் அணிந்துள்ள பொன்மாலையுடன் உயர்ந்த மார்பகங்களும் அசைய, மலர்க் கொத்துக்கள் நிறைந்த மாலை அணிந்த கூந்தலும் மணிமாலையும் தோளில் புரண்டு அசைய, வளமான காதில் காதணி சூரிய ஒளி போன்ற ஒளியை வீச, உதடுகள் குமுத மலர் போல் விளங்க, மேகத்தில் தோன்றும் வானவில் போன்ற நெற்றி, வாளையும் வேலையும் போன்ற கண்கள், இவற்றுடன் கொஞ்சுதல் மிக்க ஆசைக் கிளி போன்று சிரித்துப் பேசி, நெருங்கி வந்தவர்களை வாரும், இங்கே இரும், நீர் நமக்கு உறவினர் ஆயிற்றே, என்றெல்லாம் ஆசை மயக்கத்தை ஊட்டுகின்ற பொது மாதர்கள், கூடிக் களிப்பவர்கள், சூதாடிகள், கொலையும் செய்யும் குணத்தினர், குடியைக் கெடுப்பவர்கள், திரிகின்றவர்கள், அலங்காரத் தோளினர், பண ஆசையுள்ளவர்கள், சாதிபேதம் கவனிக்காது பலருடனும் கூடுபவர், இழிகுலத்தவர், சீ, சீ, இத்தகையோரது மாயவலையில் அடியேன் சிக்கி அலையாமல், யோகவழியில் கிடைக்கும் தசநாதங்களாகிய ஓசையை அனுபவித்து அதனோடு கலந்து, மிக்க மாயையாம் இருள் வெந்து அழிந்து போக, மூலாக்கினி வீசிட, உபதேசத்தை என் குளிர்ந்த காதில் ஓதி, உன் இரண்டு பாதமலரைச் சேரும்படியான திருவருளைத் தந்தருள்க. அலங்கார உருவத்தனே, மயில் வாகனனே, போற்றி, போற்றி, என்று கந்தனே, குமரனே, குருநாதனே, போற்றி, போற்றி, என்று குங்குமம் அணிந்த பார்வதியின் பிள்ளையாய் அமைந்தவனே போற்றி, போற்றி, என்று வெற்றிச் சின்னங்களின் ஓசைகள் கடல் போல முழங்க ஜோதி ரூபம் கொண்ட வேலாயுதனே போற்றி, போற்றி, என்று எலும்பு மாலைகளை அணிந்தவரும், ஜடாமுடி உடையவருமான சிவபிரானுக்கு குருநாதன் ஆனவனே போற்றி, போற்றி, என்று முழங்கவும், வலிமை மிக்க சூரன் முதலியவரையும், கடலையும், கிரெளஞ்ச மலையையும் பொடியாகும்படி கூரிய வேலைச் செலுத்திய முருகனே. இனிமை வாய்ந்த வேதம் பயின்ற பிரமன் விழும்படியாக மோதியும், ஒப்பற்ற பெண்ணாகிய வள்ளிமேல் காதலோடு அவள் வசித்த காட்டிற்குச் சென்று அந்த வள்ளிநாயகியின் இன்பம் நிறைந்த, தேனைப் போல் இனிமையான மார்பினைவிட்டு நீங்காத கரதலமும் அழகிய மார்பும் உடையவனே, எட்டுத் தோள்களை உடைய சிவபிரான் ஆசையுடனே பிள்ளைக்கறியை உண்ணப்புகுந்த திருச்செங்காட்டங்குடி என்னும் தலத்தைச் சார்ந்து, ஒளிவீசும் மயில் மீது அழகோடு அமர்ந்து, எனது ஆசையால் எழுந்த இந்தத் தமிழ் மாலையைப் புனைந்தருளும் ஆறுமுகனே, தேவர்களின் பெருமாளே.