சஞ்சித வினை, பிராரப்த வினை ஆகிய இருவினைகளும் பயப்படும்படியாக, இனி வந்து தாக்க இருக்கும் (ஆகாமிய) வினை தான் வரவில்லை என்று கெஞ்சிக் கூத்தாடி விலக, இருண்ட நோய்கள் வாராது மாய்ந்து போக, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அழிந்தொழிய, எனது துயரமெல்லாம் குறைந்துபோக, உனது திருவருள் பெருக, இசையுடன் உன் பரிசுத்தமான திருப்புகழைப் பாடி, சந்திரன் போன்ற அழகிய திருமுகத்தை உடையோனே, முருகா, கடம்பா, சிவகுமாரா, கந்தா, குகா, வேலா, சிவசிவ என்று கூறி அதனால் தெளிவுபெற்ற என் நெஞ்சு பொலிவு அடைவதற்காக நடனம் செய்யும் உன் திருவடிகளைத் தந்தருள்வாய். மருதமரம், கம்சன் இவர்களது உயிரை மாய்த்து மகிழ்ந்த ஹரி விஷ்ணுவின் மருமகனே, உயிர்களைக் கொன்ற அசுரர்கள் ஒடுங்க வெற்றிவலம் வந்த செம்பொன் மயில்வீரனே, அருகில் தன் பாகத்தில் அமர்ந்த பார்வதியுடன் ரிஷபவாகனம் ஏறும் அமலபிரான் சிவன் விரும்பும் முருகப் பெருமானே, அருள் நிறைந்த திருப்பந்தணைநல்லூர் தலத்தில் வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவிமாருடனும் மலர்ப்படுக்கையில் இன்புறும் பெருமாளே.