தும்பி முகத்து ஆனை பணைக் கொம்பு அது எனத் தாவி மயல் தொந்தம் எனப் பாயு(ம்) முலைகுடி கன மாதர்
தும்பி மலர்ச் சோலை முகில் கங்குல் இருள் காரின் நிறத் தொங்கல் மயில் சாயல் எனக் குழல் மேவி
செம் பொன் உருக்கான மொழிச் சங்கின் ஒளிக் காம நகைச் செம் கயலைப் போலும் விழிக் கணையாலே
சிந்தை தகர்த்து ஆளும் இதச் சந்த்ர முகப் பாவையர் தித்திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு உழல்வேனோ
தம்பி வரச் சாதி திருக் கொம்பு வரக் கூட வனச் சந்த மயில் சாய் விலகிச் சிறை போக
சண்டர் முடித் தூள்கள் படச் சிந்தி அரக்கோர்கள் விழத் தங்க நிறத்தாள் சிறையைத் தவிர் மாயோன்
கொம்பு குறிக் காளம் மடுத் திந்தம் என உற்று ஆடி நிரைக் கொண்டு வளைத்தே மகிழ் அச்சுதன்
ஈண கொஞ்சு சுகப் பாவை இணைக் கொங்கை தனில் தாவி மகிழ் கும்பகொணத்து ஆறுமுகப் பெருமாளே.
துதிக்கையை உடைய முகத்தைக் கொண்ட யானையின் பெருத்த தந்தம் போல வெளித்தோன்றி, காம இச்சைக்குச் சம்பந்தம் உடையது என மேலெழுகின்ற மார்பகங்களை உடைய பெருமை வாய்ந்த (விலை) மாதர்கள் வண்டுகளின் கூட்டம், மலர்ச் சோலை, மேகம், இரவின் இருட்டு இவற்றின் கரு நிறம் கொண்ட, தோகை மயிலின் அழகு இது என்று சொல்லும்படியான, கூந்தலை உடையவர்களாய், செம்பொன் இளகி விழுகின்றதோ என்னும்படியான பேச்சுடன், சங்கின் வெள் ஒளி போன்று, காமத்தைத் தூண்டும், பற்கள், சிவந்த கயல் மீனைப் போன்ற கண்களாகிய அம்புகள் கொண்டு, கண்டோர் மனதைச் சிதற வைத்து ஆளும், இன்பத்தைத் தரும் சந்திரனை ஒத்த முகத்தைக் கொண்ட, பதுமை போன்றவர்கள் தித்திம்திம் என்ற தாளங்களுக்கு நடனம் ஆடும் விலைமாதர்களுக்காக நான் வீணாக அலைச்சல் உறுவேனோ? தம்பியாகிய லக்ஷ்மணன் கூட வர, பண்பில் சிறந்த, கொம்பு போல மெலிந்த இடையை உடையவளும், லக்ஷ்மி போன்றவளுமான சீதை (கானகத்தில்) உடன் வர, (அவளைக் கண்டு) அழகிய மயில்கள் இவள் சாயலுக்கு நாம் ஈடாகோம் என்று ஒதுங்கி விலகி ஒரு புறம் போக, கடுங் கோபம் உடையவர்களான அசுரர்களின் முடிகள் தூளாகும்படி சிதறடித்து, அந்த அரக்கர்கள் மாண்டு விழ, பொன் நிறம் உடைய சீதையின் சிறையை நீக்கிய ராமனாகிய திருமால், புல்லாங்குழலை அடையாளமாகக் கொண்டவனும், விஷம் நிரம்பிய மடுவில் (காளிங்கன் மீது) திந்தம் என்று பொருந்தி நடனம் செய்வதவனும், பசுக் கூட்டங்களை ஒன்று கூட்டி வளைத்து மேய்த்து மகிழ்ந்த கண்ணனுமாகிய அந்த திருமால் பெற்ற கொஞ்சும் கிளி போன்ற பதுமையாகிய வள்ளியின் இரு மார்பகங்களைத் தழுவி மகிழ்பவனும், கும்பகோணத்தில் வீற்றிருப்பவனுமாகிய ஆறுமுகப் பெருமாளே.
தும்பி முகத்து ஆனை பணைக் கொம்பு அது எனத் தாவி மயல் தொந்தம் எனப் பாயு(ம்) முலைகுடி கன மாதர் ... துதிக்கையை உடைய முகத்தைக் கொண்ட யானையின் பெருத்த தந்தம் போல வெளித்தோன்றி, காம இச்சைக்குச் சம்பந்தம் உடையது என மேலெழுகின்ற மார்பகங்களை உடைய பெருமை வாய்ந்த (விலை) மாதர்கள் தும்பி மலர்ச் சோலை முகில் கங்குல் இருள் காரின் நிறத் தொங்கல் மயில் சாயல் எனக் குழல் மேவி ... வண்டுகளின் கூட்டம், மலர்ச் சோலை, மேகம், இரவின் இருட்டு இவற்றின் கரு நிறம் கொண்ட, தோகை மயிலின் அழகு இது என்று சொல்லும்படியான, கூந்தலை உடையவர்களாய், செம் பொன் உருக்கான மொழிச் சங்கின் ஒளிக் காம நகைச் செம் கயலைப் போலும் விழிக் கணையாலே ... செம்பொன் இளகி விழுகின்றதோ என்னும்படியான பேச்சுடன், சங்கின் வெள் ஒளி போன்று, காமத்தைத் தூண்டும், பற்கள், சிவந்த கயல் மீனைப் போன்ற கண்களாகிய அம்புகள் கொண்டு, சிந்தை தகர்த்து ஆளும் இதச் சந்த்ர முகப் பாவையர் தித்திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு உழல்வேனோ ... கண்டோர் மனதைச் சிதற வைத்து ஆளும், இன்பத்தைத் தரும் சந்திரனை ஒத்த முகத்தைக் கொண்ட, பதுமை போன்றவர்கள் தித்திம்திம் என்ற தாளங்களுக்கு நடனம் ஆடும் விலைமாதர்களுக்காக நான் வீணாக அலைச்சல் உறுவேனோ? தம்பி வரச் சாதி திருக் கொம்பு வரக் கூட வனச் சந்த மயில் சாய் விலகிச் சிறை போக ... தம்பியாகிய லக்ஷ்மணன் கூட வர, பண்பில் சிறந்த, கொம்பு போல மெலிந்த இடையை உடையவளும், லக்ஷ்மி போன்றவளுமான சீதை (கானகத்தில்) உடன் வர, (அவளைக் கண்டு) அழகிய மயில்கள் இவள் சாயலுக்கு நாம் ஈடாகோம் என்று ஒதுங்கி விலகி ஒரு புறம் போக, சண்டர் முடித் தூள்கள் படச் சிந்தி அரக்கோர்கள் விழத் தங்க நிறத்தாள் சிறையைத் தவிர் மாயோன் ... கடுங் கோபம் உடையவர்களான அசுரர்களின் முடிகள் தூளாகும்படி சிதறடித்து, அந்த அரக்கர்கள் மாண்டு விழ, பொன் நிறம் உடைய சீதையின் சிறையை நீக்கிய ராமனாகிய திருமால், கொம்பு குறிக் காளம் மடுத் திந்தம் என உற்று ஆடி நிரைக் கொண்டு வளைத்தே மகிழ் அச்சுதன் ... புல்லாங்குழலை அடையாளமாகக் கொண்டவனும், விஷம் நிரம்பிய மடுவில் (காளிங்கன் மீது) திந்தம் என்று பொருந்தி நடனம் செய்வதவனும், பசுக் கூட்டங்களை ஒன்று கூட்டி வளைத்து மேய்த்து மகிழ்ந்த கண்ணனுமாகிய ஈண கொஞ்சு சுகப் பாவை இணைக் கொங்கை தனில் தாவி மகிழ் கும்பகொணத்து ஆறுமுகப் பெருமாளே. ... அந்த திருமால் பெற்ற கொஞ்சும் கிளி போன்ற பதுமையாகிய வள்ளியின் இரு மார்பகங்களைத் தழுவி மகிழ்பவனும், கும்பகோணத்தில் வீற்றிருப்பவனுமாகிய ஆறுமுகப் பெருமாளே.