திமிர வுததி யனைய நரக
செனன மதனில் விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியும் அணுகாதே
அமரர் வடிவும் அ திக குலமும்
அறிவு நிறையும் வரவே நின்
அருள தருளி எனையு மனதோடு
அடிமை கொளவும் வரவேணும்
சமர முகவெல் அசுரா தமது
தலைக ளுருள மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் பெருமாளே.
இருண்ட கடல் போன்றதும், நரகத்திற்கு ஒப்பானதும் ஆன பிறப்பு என்பதில் நீ என்னை விழும்படியாகச் செய்தால், செவிடு, குருடு, அங்கஹீனம், சிறிதேனும் வறுமை என்பவை ஏதும் இல்லாது, தேவ லக்ஷணமும், உயர் குடிப்பிறப்பும், அறிவும், நீதி ஒழுக்கமும் எனக்கு வருமாறு உனது திருவருளைத் தந்தருளி, என்னையும் நீ மனம்வைத்து உன் அடிமையாக ஆட்கொள்ள வரவேண்டும். போர்க்களத்தில் வெல்லப்பட்ட அசுரர்களின் தலைகள் உருளும்படியாக, மிகப் பெரிய கடல் அலறும்படியாக, நீண்டுயர்ந்த கிரெளஞ்சமலை பொடியாக, வேலினைச் செலுத்தியவனே, பாம்புப் படுக்கையில் இனிதே துயிலும் தாமரைக்கண்ணன் திருமால் மருகனே, கண்டம் கறுத்த (நீலகண்ட) சிவனின் குமரனே, பழனியில் வந்து தொழும் தேவர்களின் பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 168 thalam %E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF thiru name %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF