அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று
அமுதைப் பகிர்தற்கு இசையாதே
அடையப் பொருள் இளமைக்கென கைவைத்து
அருள்தப்பி மதத்து அயராதே
தமர் சுற்றியழப் பறைகொட்டியிட
சமன் நெட்டுயிரைக் கொடுபோகும்
சரிரத்தினை நிற்குமெனக் கருதி
தளர்வுற்று ஒழியக் கடவேனோ
இமயத்து மயிற்கு ஒரு பக்கமளித்த
அவருக்கு இசையப் புகல்வோனே
இரணத்தினில் எற்றுவரைக் கழுகுக்கு
இரையிட்டிடு விக்ரம வேலா
சமயச் சிலுகிட்டவரைத் தவறி
தவம் முற்ற அருள் புக நாடும்
சடுபத்ம முகக் குக புக்க கனத்
தணியிற் குமரப் பெருமாளே.
மிகுந்த பசி உற்றவர்களுக்கு, மன அமைதியுடன், அன்னத்தைப் பங்கிட்டுத் தருவதற்கு மனம் வராமல், வைத்துள்ள பொருள் அத்தனையும் எனது இளமைப்பருவத்துக்கு என்று கைவசமாக இறுகப் பிடித்து வைத்துக்கொண்டு, அருள் நெறியினின்றும் தவறிப் போய் அகங்காரத்தினால் தளர்ச்சி அடையாமல், சுற்றத்தார் சுற்றி நின்று அழவும், பறைகள் வாசிக்கவும், யமன் நெடுந்தூரத்திற்கு உயிரைக் கொண்டு போகும் இந்த உடம்பை நிலையாக நிற்கும் என்று கருதி இவ்வுடம்பிற்காகவே பாடுபட்டு நான் தளர்ந்து அழிவது முறையாகுமோ? இமவான் வளர்த்த மயில் போன்ற பார்வதிக்கு தன்னுடம்பின் ஒரு பாகத்தைத் தந்த சிவபெருமானுக்கு உள்ளம் இசையுமாறு உபதேசம் அருளியவனே, போர்க்களத்தில் தாக்கி எதிர்ப்பவர்களை கழுகுகட்கு இரையாக அளிக்கும் வீரமுள்ள வேலாயுதனே, சமயச் சண்டை இடுகின்ற சமயவாதிகளின் பக்கம் சாராமல் விலகி எனது தவம் நிறைவுறவும், உனது திருவருளில் புகவும், நான் விரும்பும் ஆறு தாமரையன்ன திரு முகங்களை உடைய குகனே, (வள்ளியை மணந்த பின்) நீ புகுந்த, பெருமை வாய்ந்த, திருத்தணிகைப் பதியில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே.
அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று ... மிகுந்த பசி உற்றவர்களுக்கு, மன அமைதியுடன், அமுதைப் பகிர்தற்கு இசையாதே ... அன்னத்தைப் பங்கிட்டுத் தருவதற்கு மனம் வராமல், அடையப் பொருள் இளமைக்கென கைவைத்து ... வைத்துள்ள பொருள் அத்தனையும் எனது இளமைப்பருவத்துக்கு என்று கைவசமாக இறுகப் பிடித்து வைத்துக்கொண்டு, அருள்தப்பி ... அருள் நெறியினின்றும் தவறிப் போய் மதத்து அயராதே ... அகங்காரத்தினால் தளர்ச்சி அடையாமல், தமர் சுற்றியழப் பறைகொட்டியிட ... சுற்றத்தார் சுற்றி நின்று அழவும், பறைகள் வாசிக்கவும், சமன் நெட்டுயிரைக் கொடுபோகும் ... யமன் நெடுந்தூரத்திற்கு உயிரைக் கொண்டு போகும் சரிரத்தினை நிற்குமெனக் கருதி ... இந்த உடம்பை நிலையாக நிற்கும் என்று கருதி தளர்வுற்று ஒழியக் கடவேனோ ... இவ்வுடம்பிற்காகவே பாடுபட்டு நான் தளர்ந்து அழிவது முறையாகுமோ? இமயத்து மயிற்கு ... இமவான் வளர்த்த மயில் போன்ற பார்வதிக்கு ஒரு பக்கமளித்தவருக்கு ... தன்னுடம்பின் ஒரு பாகத்தைத் தந்த சிவபெருமானுக்கு இசையப் புகல்வோனே ... உள்ளம் இசையுமாறு உபதேசம் அருளியவனே, இரணத்தினில் எற்றுவரைக் ... போர்க்களத்தில் தாக்கி எதிர்ப்பவர்களை கழுகுக்கு இரையிட்டிடு விக்ரம வேலா ... கழுகுகட்கு இரையாக அளிக்கும் வீரமுள்ள வேலாயுதனே, சமயச் சிலுகிட்டவரைத் தவறி ... சமயச் சண்டை இடுகின்ற சமயவாதிகளின் பக்கம் சாராமல் விலகி தவம் முற்ற அருள் புக நாடும் ... எனது தவம் நிறைவுறவும், உனது திருவருளில் புகவும், நான் விரும்பும் சடுபத்ம முகக் குக ... ஆறு தாமரையன்ன திரு முகங்களை உடைய குகனே, புக்க கனத் தணியிற் குமரப் பெருமாளே. ... (வள்ளியை மணந்த பின்) நீ புகுந்த, பெருமை வாய்ந்த, திருத்தணிகைப் பதியில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 239 thalam %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88 thiru name %E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF