அனுத் தேன் நேர் மொழியாலே மா மயல் உடைத்தார் போலவும் ஓர் நாள் ஆனதில் அடுத்தே தூதுகள் நூறு ஆறு ஆனதும் விடுவார்கள்
அழைத்தே வீடினிலே தான் ஏகுவர் நகைத்தே மோடிகளாவார் காதலொடு அடுத்தே மா முலை மீதே மார்பு உற அணைவார்
பின் குனித்தே பாகு இலை ஈவார் பாதியில் கடிப்பார் வாய் இதழ் வாய் நீரானது குடிப்பார் தேன் என நானா லீலைகள் புரிவார்கள்
குறித்தே மா மயலாலே நீள் பொருள் பறிப்பார் ஆசுகள் சூழ் மா பாதக குணத்தார் மாதர்கள் மேல் ஆசா விட அருள்வாயே
வனத்தே வேடுவர் மாதாம் ஓர் மினை எடுத்தே தான் வரவே தான் யாவரும் வளைத்தே சூழவும் ஓர் வாளால் வெலும் விறல் வீரா
மலர்த் தேன் ஓடையில் ஓர் மா வானதை பிடித்தே நீள் கர வாதாட ஆழியை மனத்தால் ஏவிய மா மால் ஆனவர் மருகோனே
சினத்தே சூரர்கள் போர் ஆய் மாளவும் எடுத்து ஓர் வேல் விடு தீரா தார் அணி திருத் தோளா இரு பாதா தாமரை முருகோனே
திருத் தேர் சூழ் மதிள் ஏர் ஆர் தூபிகள் அடுக்கார் மாளிகையே நீள் ஏர் உள திருப்போரூர் உறை தேவா தேவர்கள் பெருமாளே.
நல்ல தேனுக்கு ஒப்பான பேச்சுக்களால் மிக்க மோகம் கொண்டவர்கள் போல நடித்து, ஒரே தினத்தில் மேலுக்கு மேல் தூதுகளை நூற்றியாறு முறை விடுவார்கள். அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டுக்குள்ளே போவார்கள். சிரிப்புடனே பிணக்கத்தையும் செருக்கையும் காட்டுவர். பாசாங்கு அன்புடன் நெருங்கி தங்களுடைய பெரிய மார்பகங்களின் மேலே மார்பு பொருந்தும்படி அணைவார்கள். பின்பு குனிந்து பாக்கு வெற்றிலை கொடுப்பர். அங்ஙனம் கொடுக்கும்போது பாதியில் வாயிலிருப்பதைக் கடிப்பார்கள். இதழூறலைத் தேன் போலப் பாவித்துக் குடிப்பர். விதம் விதமான காம லீலைகளைச் செய்வர். ஒரு காரியத்தைக் குறிப்பாக வைத்துக் கொண்டு மிக்க மோக விளைவு ஊட்டி பெரும் பொருள் அனைத்தையும் பறிப்பார்கள். குற்றங்கள் நிறைந்த மகா பாவ குணத்தை உடையவர்கள். அத்தகைய விலைமாதர்கள் மீதுள்ள ஆசையை ஒழிக்க அருள் புரிவாயாக. காட்டில் வேடர் குலத்துப் பெண்ணாகிய மின்னல் போன்ற வள்ளியை நீ எடுத்துப் போகவே, வேடர் யாவரும் உன்னை வளைத்துச் சூழ, ஒரு வாள் கொண்டு அவர்களை வென்ற பெருமை வாய்ந்தவனே, மலர்களின் தேன் சொட்டும் ஓடையில் ஒரு பெரிய யானையை (கஜேந்திரனை)ப் பிடித்துக் கொண்டு, ஒரு நீண்ட முதலை போர் செய்ய, சக்கரத்தை (முதலையின் மீது) மனம் கொண்டு செலுத்திய சிறந்த திருமாலுக்கு மருகனே, கோபித்து சூரர்கள் போர் செய்து இறக்கும்படி ஒரு வேலை எடுத்துச் செலுத்திய தீரனே, மாலை அணிந்த அழகிய தோளனே, இரண்டு பாதத் தாமரைகளைக் கொண்ட முருகோனே, அழகிய தேரும், சூழ்ந்துள்ள மதிலும், எழில் நிறைந்த கோபுரங்களும், அடுக்கு மெத்தைகள் கொண்ட மாளிகைகளும் ஆகிய நீடிய சிறப்புகள் வாய்ந்த திருப் போரூரில் வீற்றிருக்கும் தேவனே, தேவர்களின் பெருமாளே.
அனுத் தேன் நேர் மொழியாலே மா மயல் உடைத்தார் போலவும் ஓர் நாள் ஆனதில் அடுத்தே தூதுகள் நூறு ஆறு ஆனதும் விடுவார்கள் ... நல்ல தேனுக்கு ஒப்பான பேச்சுக்களால் மிக்க மோகம் கொண்டவர்கள் போல நடித்து, ஒரே தினத்தில் மேலுக்கு மேல் தூதுகளை நூற்றியாறு முறை விடுவார்கள். அழைத்தே வீடினிலே தான் ஏகுவர் நகைத்தே மோடிகளாவார் காதலொடு அடுத்தே மா முலை மீதே மார்பு உற அணைவார் ... அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டுக்குள்ளே போவார்கள். சிரிப்புடனே பிணக்கத்தையும் செருக்கையும் காட்டுவர். பாசாங்கு அன்புடன் நெருங்கி தங்களுடைய பெரிய மார்பகங்களின் மேலே மார்பு பொருந்தும்படி அணைவார்கள். பின் குனித்தே பாகு இலை ஈவார் பாதியில் கடிப்பார் வாய் இதழ் வாய் நீரானது குடிப்பார் தேன் என நானா லீலைகள் புரிவார்கள் ... பின்பு குனிந்து பாக்கு வெற்றிலை கொடுப்பர். அங்ஙனம் கொடுக்கும்போது பாதியில் வாயிலிருப்பதைக் கடிப்பார்கள். இதழூறலைத் தேன் போலப் பாவித்துக் குடிப்பர். விதம் விதமான காம லீலைகளைச் செய்வர். குறித்தே மா மயலாலே நீள் பொருள் பறிப்பார் ஆசுகள் சூழ் மா பாதக குணத்தார் மாதர்கள் மேல் ஆசா விட அருள்வாயே ... ஒரு காரியத்தைக் குறிப்பாக வைத்துக் கொண்டு மிக்க மோக விளைவு ஊட்டி பெரும் பொருள் அனைத்தையும் பறிப்பார்கள். குற்றங்கள் நிறைந்த மகா பாவ குணத்தை உடையவர்கள். அத்தகைய விலைமாதர்கள் மீதுள்ள ஆசையை ஒழிக்க அருள் புரிவாயாக. வனத்தே வேடுவர் மாதாம் ஓர் மினை எடுத்தே தான் வரவே தான் யாவரும் வளைத்தே சூழவும் ஓர் வாளால் வெலும் விறல் வீரா ... காட்டில் வேடர் குலத்துப் பெண்ணாகிய மின்னல் போன்ற வள்ளியை நீ எடுத்துப் போகவே, வேடர் யாவரும் உன்னை வளைத்துச் சூழ, ஒரு வாள் கொண்டு அவர்களை வென்ற பெருமை வாய்ந்தவனே, மலர்த் தேன் ஓடையில் ஓர் மா வானதை பிடித்தே நீள் கர வாதாட ஆழியை மனத்தால் ஏவிய மா மால் ஆனவர் மருகோனே ... மலர்களின் தேன் சொட்டும் ஓடையில் ஒரு பெரிய யானையை (கஜேந்திரனை)ப் பிடித்துக் கொண்டு, ஒரு நீண்ட முதலை போர் செய்ய, சக்கரத்தை (முதலையின் மீது) மனம் கொண்டு செலுத்திய சிறந்த திருமாலுக்கு மருகனே, சினத்தே சூரர்கள் போர் ஆய் மாளவும் எடுத்து ஓர் வேல் விடு தீரா தார் அணி திருத் தோளா இரு பாதா தாமரை முருகோனே ... கோபித்து சூரர்கள் போர் செய்து இறக்கும்படி ஒரு வேலை எடுத்துச் செலுத்திய தீரனே, மாலை அணிந்த அழகிய தோளனே, இரண்டு பாதத் தாமரைகளைக் கொண்ட முருகோனே, திருத் தேர் சூழ் மதிள் ஏர் ஆர் தூபிகள் அடுக்கார் மாளிகையே நீள் ஏர் உள திருப்போரூர் உறை தேவா தேவர்கள் பெருமாளே. ... அழகிய தேரும், சூழ்ந்துள்ள மதிலும், எழில் நிறைந்த கோபுரங்களும், அடுக்கு மெத்தைகள் கொண்ட மாளிகைகளும் ஆகிய நீடிய சிறப்புகள் வாய்ந்த திருப் போரூரில் வீற்றிருக்கும் தேவனே, தேவர்களின் பெருமாளே.