மன்னியபல்பொறிசேர் ஆயிரவாய்வாளரவின் சென்னிமணிக்குடுமித் தெய்வச்சுடர்நடுவுள் மன்னியநாகத்தணைமேல் ஓர்மாமலைபோல் மின்னுமணிமகரகுண்டலங்கள் வில்வீச துன்னியதாரகையின் பேரொளிசேராகாசம் என்னும்விதானத்தின்கீழால் இருசுடரை மன்னும் விளக்காகவேற்றி மறிகடலும் பன்னுதிரைக்கவரிவீச நிலமங்கை தன்னைமுனநாள் அளவிட்டதாமரைபோல் மன்னியசேவடியை வானியங்குதாரகைமீன் என்னும்மலர்ப்பிறையாலேய்ந்த மழைக்கூந்தல் தென்னனுயர்பொருப்பும் தெய்வவடமலையும் என்னுமிவையே முலையாவடிவமைந்த அன்னநடையவணங்கே அடியிணையைத் தன்னுடையவங்கைகளால் தான்தடவத்தான்கிடந்து ஓர் உன்னியயோகத்து உறக்கந்தலைக்கொண்ட பின்னை தன்னாபிவலயத்துப் பேரொளிசேர் மன்னியதாமரை மாமலர்ப்பூத்து அம்மலர்மேல் முன்னந்திசைமுகனைத் தான்படைக்க மற்றவனும் முன்னம்படைத்தனன் நான்மறைகள் அம்மறைதான் மன்னுமறம் பொருளின்பம் வீடென்று உலகில் நன்னெறிமேம்பட்டன நான்கன்றே நான்கினிலும் பின்னையது பின்னைப்பெயர்த்தருமென்பது ஓர் தொன்னெறியைவேண்டுவார் வீழ்கனியுமூழிலையும் என்னுமிவையே நுகர்ந்து உடலம்தாம்வருந்தி துன்னுமிலைக்குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் மன்னுமழல் நுகர்ந்தும் வண்தடத்தினுட் கிடந்தும் இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம்விட்டெழுந்து தொன்னெறிக்கட்சென்றா ரெனப்படுஞ்சொல்லல்லால் இன்னதோர்காலத்து இனையாரிது பெற்றார் என்னவுங் கேட்டறிவதில்லை உளதென்னில் மன்னுங்கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் அன்னதோரில்லியினூடுபோய் வீடென்னும் தொன்னெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே அன்னதேபேசும் அறிவில் சிறுமனத்து ஆங் கன்னவரைக் கற்பிப்போம்யாமே அதுநிற்க முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற அன்னவர்த்தாம்காண்டீர்கள் ஆயிரக்கண்வானவர்கோன் பொன்னகரம்புக்கமரர் போற்றிசைப்ப பொங்கொளிசேர் கொல்நவிலுங்கோளரிமாத் தாஞ்சுமந்தகோலம்சேர் மன்னியசிங்காசனத்தின்மேல் வாள்நெடுங்கண் கன்னியராலிட்ட கவரிப்பொதியவிழ்ந்து ஆங் கின்னிளம்பூந்தென்றலியங்க மருங்கிருந்த மின்னனைய நுண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல் முன்னம்முகிழ்த்த முகிழ்நிலாவந்தரும்ப அன்னவர்த்தம்மானோக்க முண்டாங்கணிமலர்சேர் பொன்னியல்கற்பகத்தின் காடுடுத்தமாடெல்லாம் மன்னியமந்தாரம் பூத்தமதுத்திவலை இன்னிசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர் மன்னியமாமயில்போற்கூந்தல் மழைத்தடங்கண் மின்னிடையாரோடும் விளையாடிவேண்டிடத்து மன்னும்மணித்தலத்து மாணிக்கமஞ்சரியின் மின்னினொளிசேர் பளிங்குவிளிம்படுத்த மன்னும்பவளக்கால் செம்பொன் செய்மண்டபத்துள் அன்னநடைய அரம்பயர்த்தம்வகை வளர்த்த இன்னிசை யாழ்பாடல்கேட்டின்புற்று இருவிசும்பில் மன்னுமழைதழும் வாணிலாநீண்மதிதோய் மின்னினொளிசேர் விசும்பூரும்மாளிகைமேல் மன்னுமணி விளக்கைமாட்டி மழைக்கண்ணார் பன்னுவிசித்திரமாப் பாப்படுத்தபள்ளிமேல் துன்னியசாலேகம் சூழ்கதவம்தாள் திறப்ப அன்னமுழக்க நெறிந்துக்கவாள்நீலச் சின்னநறுந்தாது சூடி ஓர்மந்தாரம் துன்னுநறுமலரால் தோள்கொட்டி கற்பகத்தின் மன்னுமலர்வாய் மணிவண்டுபின்தொடர இன்னிளம்பூந்தென்றல் புகுந்தீங்கிளமுலைமேல் நன்னறுஞ்சந்தனச்சேறு புலர்த்த தாங்கருஞ்சீர் மின்னிடைமேல் கைவைத்திருந்து ஏந்திளமுலைமேல் பொன்னரும்பாரம்புலம்ப அகங்குழைந்தாங்கு இன்னவுருவின் இமையாத்தடங்கண்ணார் அன்னவர்த்தம்மானோக்கமுண்டு ஆங்கணிமுறுவல் இன்னமுதம் மாந்தியிருப்பர் இதுவன்றே அன்னவறத்தின் பயனாவது ஒண்பொருளும் அன்னதிறத்ததே யாதலால் காமத்தின் மன்னும்வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின் அன்னநடையாரலரேச ஆடவர்மேல் மன்னும்மடலூரா ரென்பதோர்வாசகமும் தென்னுரையில் கேட்டறிவதுண்டு அதனையாம் தெளியோம் மன்னும் வடநெறியே வேண்டினோம் வேண்டாதார் தென்னன்பொதியில் செழுஞ்சந்தனக்குழம்பின் அன்னதோர் தன்மையறியாதார் ஆயன்வேய் இன்னிசை யோசைக்கு இரங்காதார் மால்விடையின் மன்னுமணி புலம்பவாடாதார் பெண்ணைமேல் பின்னும் அவ்வன்றிற்பேடைவாய்ச் சிறுகுரலுக்கு உன்னியுடலுருகிநையாதார் உம்பவர்வாய்த் துன்னிமதியுகுத்த தூதிலா நீள்நெருப்பில் தம்முடலம்வேவத் தளராதார் காமவேள் மன்னுஞ்சிலைவாய் மலர்வாளிகோத்தெய்ய பொன்னொடுவீதிபுகாதார் தம்பூவணைமேல் சின்னமலர்க்குழலும் அல்குலும்மென்முலையும் இன்னிளவாடைதடவத் தாம்கண்துயிலும் பொன்னனையார் பின்னுந்திருவுறுக போர்வேந்தன் தன்னுடையதாதை பணியாலரசொழிந்து பொன்னகரம் பின்னேபுலம்ப வலங்கொண்டு மன்னும்வளநாடு கைவிட்டு மாதிரங்கள் மின்னுருவில் விண்தேர் திரிந்துவெளிப்பட்டு கல்நிறைந்துதீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று பின்னுந்திரைவயிற்றுப் பேயேதிரிந்துலவா கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடுங்கதிரோன் துன்னுவெயில்வறுத்த வெம்பரல்மேல் பஞ்சடியால் மன்னனிராமன்பின் வைதேவிஎன்றுரைக்கும் அன்னநடைய அணங்குநடந்திலளே? பின்னும்கருநெடுங்கண் செவ்வாய்ப்பிணைநோக்கின் மின்னனையநுண்மருங்குல் வேகவதியென்றுரைக்கும் கன்னி தன் இன்னுயிராம் காதலனைக்காணது தன்னுடைய முன்தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு அன்னவனை நோக்காது அழித்துரப்பி வாளமருள் கல்நவில்தோள்காளையைக் கைப்பிடித்துமீண்டும்போய் பொன்னவிலுமாகம் புணர்ந்திலளே? பூங்கங்கை முன்னம் புனல்பரக்கும் நல்நாடன் மின்னாடும் கொன்னவிலும்நீள்வேல் குருக்கள் குலமதலை தன்னிகரொன்றில்லாத வென்றித்தனஞ்சயனை பன்னாகராயன் மடப்பாவை பாவைதன் மன்னியநாணச்சம் மடமென்றிவையகல தன்னுடைய கொங்கை முகம்நெரிய தானவன்தன் பொன்வரையாகம் தழீஇக்கொண்டுபோய் தனது நல்நகரம்புக்கு நயந்தினிதுவாழ்ந்ததுவும் முன்னுரையில் கேட்டறிவதில்லையே? சூழ்கடலுள் பொன்னகரஞ்செற்ற புரந்தரனோடேரொக்கும் மன்னவன்வாணன் அவுணர்க்குவாள்வேந்தன் தன்னுடையபாவை உலகத்துத்தன்னொக்கும் கன்னியரையில்லாத காட்சியாள் தன்னுடைய இன்னுயிர்த்தோழியால் எம்பெருமானீன்துழாய் மன்னும்மணிவரைத்தோள் மாயவன் பாவியேன் என்னையிதுவிளைத்த ஈரிரண்டுமால்வரைத்தோள் மன்னவன்தன்காதலனை மாயத்தாற்கொண்டுபோய் கன்னிதன்பால்வைக்க மற்றவனோடெத்தனையோ மன்னியபேரின்பமெய்தினாள் மற்றிவைதான் என்னாலேகேட்டீரே? ஏழைகாள்! என்னுரைக்கேன்? மன்னுமலையரயன் பொற்பாவை வாள்நிலா மின்னுமணிமுறுவல் செவ்வாயுமையென்னும் அன்னநடைய அணங்கு நுடங்கிடைசேர் பொன்னுடம்புவாடப் புலனைந்தும்நொந்தகல தன்னுடையகூழைச் சடாபாரம்தாந்தரித்து ஆங்கு அன்னவருந்தவத்தினூடுபோய் ஆயிரந்தோள் மன்னுகரதலங்கள் மட்டித்து மாதிரங்கள் மின்னியெரிவீச மேலெடுத்தசூழ்கழற்கால் மன்னுகுலவரையும் மாருதமும்தாரகையும் தன்னினுடனே சுழலச்சுழன்றாடும் கொல்நவிலும் மூவிலைவேல் கூத்தன்பொடியாடி அன்னவன்தன் பொன்னகலம் சென்றாங்கணைந்திலளே? பன்னியுரைக்குங்கால் பாரதமாம் பாவியேற்கு என்னுறுநோய் யானுரைப்பக்கேண்மின் இரும்பொழில்சூழ் மன்னுமறையோர் திருநறையூர்மாமலைபோல் பொன்னியலுமாடக் கவாடம்கடந்துபுக்கு என்னுடையகண்களிப்ப நோக்கினேன் நோக்குதலும் மன்னன்திருமர்பும் வாயுமடியிணையும் பன்னுகரதலமும் கண்களும் பங்கயத்தின் பொன்னியல்காடு ஓர்மணிவரைமேல்பூத்ததுபோல் மின்னியொளிபடைப்ப வீழ்நாணும்தோள்வளையும் மன்னியகுண்டலமும் ஆரமும்நீண்முடியும் துன்னுவெயில்விரித்த சூளாமணியிமைப்ப மன்னும்மரதகக் குன்றின்மருங்கே ஓர் இன்னிளவஞ்சிக் கொடியொன்றுநின்றதுதான் அன்னமாய்மானாய் அணிமயிலாய்ஆங்கிடையே மின்னாய்இளவேயிரண்டாய் இணைச்செப்பாய் முன்னாயதொண்டையாய்க் கொண்டைகுலமிரண்டாய் அன்னதிருவுருவம் நின்றதறியாதே என்னுடையநெஞ்சும் அறிவும்இனவளையும் பொன்னியலும்மேகலையும் ஆங்கொழியப்போந்தேற்கு மன்னும்மறிகடலுமார்க்கும் மதியுகுத்த இன்னிலாவின்கதிரும் என்தனக்கேவெய்தாகும் தன்னுடையதன்மை தவிரத்தானெங்கொலோ? தென்னன்பொதியில் செழுஞ்சந்தின்தாதளைந்து மன்னிவ்வுலகை மனங்களிப்பவந்தியங்கும் இன்னிளம்பூந்தென்றலும் வீசுமெரியெனக்கே முன்னியபெண்ணைமேல் முள்முளரிக்கூட்டகத்து பின்னுமவ்வன்றில் பேடைவாய்ச்சிறுகுரலும் என்னுடையநெஞ்சுக்கு ஓரீர்வாளாம் என்செய்கேன்? கல்நவில்தோள்காமன் கருப்புச்சிலைவளைய கொல்நவிலும்பூங்கணைகள் கோத்துப்பொதவணைந்து தன்னுடையதோள்கழியவாங்கி தமியேன்மேல் என்னுடையநெஞ்சே இலக்காகவெய்கின்றான் பின்னிதனைக் காப்பீர்தானில்லையே பேதையேன் கன்நவிலுங்காட்டகத்து ஓர்வல்லிக்கடிமலரின் நன்நறுவாசம் மற்றாரானுமெய்தாமே மன்னும்வறுநிலத்து வாளாங்குகுத்ததுபோல் என்னுடையபெண்மையும் என்நலனும்என்முலையும் மன்னுமலர்மங்கைமைந்தன் கணபுரத்துப் பொன்மலைபோல்நின்றவன்தன்பொன்னகலம் தோயாவேல் என்னிவைதான்? வாளாஎனக்கேபொறையாகி முன்னிருந்துமூக்கின்று மூவாமைக்காப்பதோர் மன்னும்மருந்தறிவிரில்லையே? மல்விடையின் துன்னுபிடரெருத்துத் தூக்குண்டு வன்தொடரால் கன்னியர்கண்மிளிரக் கட்டுண்டு மாலைவாய் தன்னுடையநாவொழியாது ஆடுந்தனிமணியின் இன்னிசையோசையும் வந்தென்செவிதனக்கே கொன்நவிலுமெஃகின் கொடிதாய்நெடிதாகும் என்னிதனைக்காக்குமா? சொல்லீர் இதுவிளைத்த மன்னன்நறுந்துழாய்வாழ்மார்பன் மாமதிகோள் முன்னம்விடுத்த முகில்வண்ணன் காயாவின் சின்னநறும்பூந் திகழ்வண்ணன் வண்ணம்போல் அன்னகடலை மலையிட்டணைகட்டி மன்னனிராவணனை மாமண்டுவெஞ்சமத்து பொன்முடிகள்பத்தும் புரளச்சரந்துரந்து தென்னுலகமேற்றுவித்த சேவகனை ஆயிரங்கண் மன்னவன்வானமும் வானவர்த்தம்பொன்னும்லகும் தன்னுடையதோள்வலியால் கைக்கொண்டதானவனை பின்னோரரியுருவமாகி எரிவிழித்து கொல்நவிலும்வெஞ்சமதுக் கொல்லாதே வல்லாளன் மன்னும்மணிக்குஞ்சி பற்றிவரவீர்த்து தன்னுடையதாள்மேல் கிடாத்தி அவனுடைய பொன்னகலம்வள்ளுகிரால் போழ்ந்துபுகழ்படைத்த மின்னிலங்கும்ஆழிப்படைத் தடக்கைவீரனை மன்னிவ்வகலிடத்தை மாமுதுநீர்தான்விழுங்க பின்னுமோரேனமாய் புக்குவளைமருப்பில் கொன்னவிலுங்கூர்நுதிமேல் வைத்தெடுத்தகூத்தனை மன்னும்வடமலையை மத்தாகமாசுணத்தால் மின்னுமிருசுடரும் விண்ணும்பிறங்கொளியும் தன்னினுடனே சுழலமலைதிரித்து ஆங்கு இன்னமுதம் வானவரையூட்டி அவருடைய மன்னுந்துயர்க்கடிந்த வள்ளலை மற்றன்றியும் தன்னுருவம் ஆருமறியாமல் தானங்கு ஓர் மன்னுங்குறளுருவில் மாணியாய் மாவலிதன் பொன்னியலும்வேள்விக்கண் புக்கிருந்து போர்வேந்தர் மன்னைமனங்கொள்ள வஞ்சித்துநெஞ்சுருக்கி என்னுடையபாதத்தால் யானளப்பமூவடிமண் மன்னா! தருகென்று வாய்திறப்ப மற்றவனும் என்னால்தரப்பட்டதென்றலுமே அத்துணைக்கண் மின்னார்மணிமுடிபோய் விண்தடவ மேலெடுத்த பொன்னார்கனைகழற்கால் ஏழுலகும்போய்க்கடந்து அங்கு ஒன்னாவசுரர் துளங்கச்செலநீட்டி மன்னிவ்வகலிடத்தை மாவலியைவஞ்சித்து தன்னுலகமாக்குவித்த தாளானை தாமரைமேல் மின்னிடையாள்நாயகனை விண்ணகருள்பொன்மலையை பொன்னிமணிகொழிக்கும் பூங்குடந்தைப்போர் விடையை தென்னன்குறுங்குடியுள் செம்பவளக்குன்றினை மன்னியதண் சேறை வள்ளலை மாமலர்மேல் அன்னம்துயிலும் அணிநீர்வயலாலி என்னுடையவின்னமுதை எவ்வுள் பெருமலையை கன்னிமதிள்சூழ் கணமங்கைக்கற்பகத்தை மின்னையிருசுடரை வெள்ளறையுள்கல்லறைமேற் பொன்னை மரதகதைப் புட்குழியெம்போரேற்றை மன்னுமரங்கத்துஎம்மாமணியை வல்லவாழ் பின்னைமணாளனைப் பேரில்பிறப்பிலியை தொன்னீர்க்கடல்கிடந்த தோளாமணிச்சுடரை என்மனத்துமாலை இடவெந்தையீசனை மன்னுங்கடல்மல்லை மாயவனை வானவர்தம் சென்னிமணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை தன்னைப்பிறரறியாத் தத்துவத்தைமுத்தினை அன்னத்தைமீனை அரியைஅருமறையை முன்னிவ்வுலகுண்டமூர்த்தியை கோவலூர் மன்னுமிடைகழி யெம்மாயவனை பேயலறப் பின்னும்முலையுண்டபிள்ளையை அள்ளல்வாய் அன்னமிரைதேர் அழுந்தூரெழுஞ்சுடரை தெந்தில்லைச் சித்திரகூடத்துஎன் செல்வனை மின்னிமழைதவழும் வேங்கடத்துஎம்வித்தகனை மன்னனை மாலிருஞ்சோலைமணாளனை கொல்நவிலும் ஆழிப்படையானை கோட்டியூர் அன்னவுருவினரியை திருமெய்யத்து இன்னமுதவெள்ளத்தை இந்தளூரந்தணனை மன்னுமதிள்கச்சி வேளுக்கையாளரியை மன்னியபாடகத்து எம்மைந்தனை வெஃகாவில் உன்னியயோகத்துறக்கத்தை ஊரகத்துள் அன்னவனை அட்டபுயகரத்தெம்மானேற்றை என்னைமனங்கவர்ந்தஈசனை வானவர்த்தம் முன்னவனை மூழிக்களத்துவிளக்கினை அன்னவனை ஆதனூராண்டாளக்குமையனை நென்னலையின்றினை நாளையை நீர்மலைமேல் மன்னும்மறைநான்குமானானை புல்லாணித் தென்னன்தமிழை வடமொழியை நாங்கூரில் மன்னுமணிமாடக் கோயில்மணாளனை நல்நீர்த்தலைச்சங்கநாண்மதியை நான்வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத்தானை தென்னறையூர் மன்னுமணிமாடக் கோயில்மணாளனை கல்நவில்தோள்காளையைக் கண்டாங்குக்கைதொழுது என்னிலைமையெல்லாம் அறிவித்தால்எம்பெருமான் தன்னருளுமாகமும் தாரானேல் தன்னைநான் மின்னிடையார்சேரியிலும் வேதியர்கள்வாழ்விடத்தும் தன்னடியார்முன்பும் தரணிமுழுதாளும் கொல்நவிலும்வேல்வேந்தர்கூட்டத்தும்நாட்டகத்தும் தன்னிலைமையெல்லாம் அறிவிப்பன் தான்முனநாள் மின்னிடையாய்ச்சியர்த்தம் சேரிக்களவிங்கண் துன்னுபடல்திறந்துபுக்கு தயிர்வெண்ணெய் தன்வயிறார விழுங்க கொழுங்கயல்கண் மன்னுமடவோர்கள் பற்றியோர்வான்கயிற்றால் பின்னுமுரலோடு கட்டுண்டபெற்றிமையும் அன்னதோர்பூதமாய் ஆயர்விழவின்கண் துன்னுசகடத்தால் புக்கபெருஞ்சோற்றை முன்னிருந்துமுற்றத்தான் துற்றியதெற்றெனவும் மன்னர்பெருஞ்சவையுள் வாழ்வேந்தர்தூதனாய் தன்னையிகழ்ந்துரைப்பத் தான்முனநாள்சென்றதுவும் மன்னுபறைகறங்க மங்கையர்த்தம்கண்களிப்ப கொன்னவிலுங்கூத்தனாய்ப் பெயர்த்துங்குடமாடி என்னிவன்? என்னப்படுகின்றஈடறவும் தென்னிலங்கையாட்டி அரக்கர்குலப்பாவை மன்னனிராவணன்தன் நல்தங்கை வாளெயிற்றுத் துன்னுசுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி பொன்னிறங்கொண்டு புலர்ந்தெழுந்தகாமத்தால் தன்னைநயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து மன்னியதிண்ணெனவும் வாய்த்தமலைபோலும் தன்னிகரொன்றில்லாத தாடகையை மாமுனிக்காகத் தென்னுலகமேற்றுவித்த திண்திறலும் மற்றிவைதான் உன்னியுலவாவுலகறிய ஊர்வன்நான் முன்னிமுளைத்தெழுந்து ஓங்கியொளிபரந்த மன்னியம்பூம் பெண்ணை மடல். |
[2674.2] |