சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.121   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முன்னம் நின்ற முடக்கால் முயற்கு
பண் - செவ்வழி   (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=zMRLOLL1RUI
4.094   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும்
பண் - திருவிருத்தம்   (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=D2gzNhT2Uj8
Audio: https://www.youtube.com/watch?v=pTj6oWlvx_U

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.121   முன்னம் நின்ற முடக்கால் முயற்கு  
பண் - செவ்வழி   (திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) ; (திருத்தலம் அருள்தரு தோகையம்பிகையம்மை உடனுறை அருள்மிகு தோன்றாத்துணையீசுவரர் திருவடிகள் போற்றி )
முன்னம் நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து, நீள
புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான்
தன்னை நின்று வணங்கும் தனைத் தவம் இ(ல்)லிகள்,
பின்னை நின்ற பிணி யாக்கையைப் பெறுவார்களே

[1]
கொள்ளி நக்க பகுவாய பேய்கள் குழைந்து ஆடவே,
முள் இலவம் முது காட்டு உறையும் முதல்வன்(ன்) இடம்,
புள் இனங்கள் பயிலும் பாதிரிப் புலியூர் தனை
உள்ள, நம்மேல் வினை ஆயின ஒழியுங்களே

[2]
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர், மேல்
பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப் புலியூர் உளான்,
வெருளின் மானின் பிணை நோக்கல் செய்து, வெறி செய்த
பின்
அருளி ஆகத்திடை வைத்ததுவும்(ம்) அழகு ஆகவே.

[3]
போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம்
போதினாலே வழிபாடு செய்ய, புலியூர்தனுள்
ஆதினாலும்(ம்) அவலம்(ம்) இலாத அடிகள் மறை
ஓதி, நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு, உணப்பாலதே?

[4]
ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான்; அழல் ஐந்தலை
நாகம், நல்லார் பரவ(ந்), நயந்து அங்கு அரை ஆர்த்தவன்
போகம் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்தனுள்,
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே.

[5]
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி(ம்) மணல் கானல்வாய்ப்
புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும்
பதியில் வைக்கப்படும் எந்தை தன் பழந்தொண்டர்கள்
குதியும் கொள்வர்; விதியும் செய்வர், குழகு ஆகவே.

[6]
கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர் கானல்வாய்ச்
சங்கு அரவப் பறையின்(ன்) ஒலி அவை சார்ந்து எழ,
பொங்கு அரவம்(ம்) உயர் பாதிரிப்புலியூர் தனுள்
அங்கு அரவம்(ம்) அரையில்(ல்) அசைத்தானை அடைமினே!

[7]
வீக்கம் எழும்(ம்) இலங்கைக்கு இறை விலங்கல்(ல்) இடை
ஊக்கம் ஒழிந்து அலற(வ்) விரல் இறை ஊன்றினான்,
பூக் கமழும் புனல், பாதிரிப்புலியூர் தனை
நோக்க, மெலிந்து அணுகா, வினை, நுணுகுங்களே

[8]
அன்னம் தாவும் அணி ஆர் பொழில், மணி ஆர் புன்னை
பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர் தனுள்
முன்னம் தாவி அடிமூன்று அளந்தவன், நான்முகன்,
தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே.

[9]
உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்து இடைத்
திரிந்து தின்னும் சிறு நோன்பரும், பெருந் தேரரும்,
எரிந்து சொன்ன(வ்) உரை கொள்ளாதே, எடுத்து ஏத்துமின்
புரிந்த வெண்நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே!

[10]
அம் தண் நல்லார் அகன் காழியுள் ஞானசம்
பந்தன், நல்லார் பயில் பாதிரிப்புலியூர்தனுள்
சந்த மாலைத்தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல்,
வந்து தீய(வ்) அடையாமையால், வினை மாயுமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.094   ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) ; (திருத்தலம் அருள்தரு மங்கைநாயகியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டேசுவரர் திருவடிகள் போற்றி )
திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனடியார்கள் இச் செய்தி கேட்டு மகிழ்ந்தனர். எல்லோரும்கூடி அரஹர முழக்கம் செய்து திரு நாவுக்கரசரை வரவேற்றனர். திருநாவுக்கரசர் அடியார் கூட்டத்தோடு திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானை ஈன்றாளுமாய் என்று தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றிப் பரவினார்.
கடல் மற்றும் நீரினால் வரும் துன்பங்களில் இருந்து தப்பிக்க
ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய், உடன் தோன்றினராய்,
மூன்று ஆய் உலகம் படைத்து உகந்தான்; மனத்துள் இருக்க
ஏன்றான்; இமையவர்க்கு அன்பன்; திருப் பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணை ஆய் இருந்தனன், தன் அடியோங்களுக்கே.

[1]
பற்று ஆய் நினைந்திடு, எப்போதும்!-நெஞ்சே!-இந்தப் பாரை முற்றும்
சுற்று ஆய் அலைகடல் மூடினும் கண்டேன், புகல் நமக்கு;
உற்றான், உமையவட்கு அன்பன், திருப் பாதிரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியினான்தன மொய்கழலே.

[2]
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான்; இனி நமக்கு இங்கு
அடையா, அவலம்; அருவினை சாரா; நமனை அஞ்சோம்;
புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர்
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே?

[3]
மாயம் எல்லாம் முற்ற விட்டு, இருள் நீங்க, மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தான் அவன்தன் திருவடிக்கே
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும்-திருப் பாதிரிப்புலியூர்
மேய நல்லான் மலர்ப்பாதம் என் சிந்தையுள் நின்றனவே.

[4]
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி, மனத்து அடைத்து
சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால்,
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறல் ஆமோ?-அறிவு இலாப் பேதைநெஞ்சே!

[5]
கருஆய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்;
உருஆய்த் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன், உனது அருளால்,
திருவாய் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்;
தருவாய், சிவகதி நீ!-பாதிரிப்புலியூர் அரனே!

[6]
எண்ணாது அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சம் உண்டாய்!
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழச் செற்றவனே!
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர்க்
கண் ஆர் நுதலாய்!-கழல் நம் கருத்தில் உடையனவே.

[7]
புழுஆய்ப் பிறக்கினும், புண்ணியா!-உன் அடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தரவேண்டும்-இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப்-புனல் கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே!

[8]
மண் பாதலம் புக்கு, மால்கடல் மூடி, மற்று ஏழ் உலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும், அஞ்சல், நெஞ்சே!
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம்; திருப் பாதிரிப்புலியூர்க்
கண் பாவும் நெற்றிக் கடவுள் சுடரான் கழல் இணையே.

[9]
திருந்தா அமணர்தம் தீ நெறிப் பட்டு, திகைத்து, முத்தி
தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன்; வரை எடுத்த
பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய்! பாதிரிப்புலியூர்
இருந்தாய்! அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே!

[10]
Back to Top

This page was last modified on Sun, 09 Mar 2025 21:46:14 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list column name thalam lang tamil string value %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D