சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
7.085   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   வடிவு உடை மழு ஏந்தி,
பண் - புறநீர்மை   (திருக்கூடலையாற்றூர் நெறிகாட்டுநாயகர் புரிகுழலாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=gXWUvgdaVZ4

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.085   வடிவு உடை மழு ஏந்தி,  
பண் - புறநீர்மை   (திருத்தலம் திருக்கூடலையாற்றூர் ; (திருத்தலம் அருள்தரு புரிகுழலாளம்மை உடனுறை அருள்மிகு நெறிகாட்டுநாயகர் திருவடிகள் போற்றி )
பின்பு காஞ்சிவாய்ப் பேரூரை அடைந்து திருக்கோயில் சென்று வழிபட்டார். அங்குப் பெருமான், தில்லை மன்றுள் நின்றாடும் தமது திருக்கோலத்தோடு காட்சி வழங்கியருளினார். அவ்வருட் காட்சியைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், தில்லையம்பலவன் திருக் கூத்தைக் கும்பிடப்பெற்றால் புறம்போய் எய்துதற்கு யாதுளது என்று எண்ணிப் பேரூரினின்றும் புறப்பட்டுத் தில்லையை நோக்கிச் செல்வராயினார். வெஞ்சமாக்கூடல், கற்குடி, ஆறை மேற்றளி, இன்னம்பர், புறம்பயம் முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டே நடுநாட்டுக் கூடலையாற்றுரை அணுகியவர், அங்கு செல்லாமல் திருமுதுகுன்றை நோக்கிச் சென்றார். அப்பொழுது கூடலையாற்றுார் இறைவன், மறையவர் வடிவம் தாங்கி வழிப் போக்கராய் வன்றொண்டரை அணுகினார். சுந்தரர் மறையவரைப் பணிந்து திருமுதுகுன்றத்திற்குச் செல்லும் வழியை வினவினார். மறையவர், கூடலையாற்றுரை அடையச் சென்றது இவ்வழி எனக் கூறித் துணையாய்த் தாமும் ஊர் எல்லையளவும் உடன் சென்று மறைந்தருளினார். உடன் வந்த அந்தணரைக் காணாத சுந்தரர், மறையவர் உருவில் வந்தவர் பெருமானே யென்பதறிந்து திருக்கோயிலை யடைந்து வடிவுடை மழுவேந்தி யென்று தொடங்கி, வழித்துணையாய் வந்த பெருமானை வணங்கிப் போற்றித் திருமுதுகுன்றத்தை அடைந்தார்.
வடிவு உடை மழு ஏந்தி, மதகரி உரி போர்த்து,
பொடி அணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்,
கொடி அணி நெடுமாடக் கூடலையாற்றூரில்
அடிகள் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[1]
வையகம் முழுது உண்ட மாலொடு, நான்முகனும்,
பை அரவு இள அல்குல் பாவையொடும்(ம்), உடனே,
கொய் அணி மலர்ச் சோலைக் கூடலையாற்றூரில்
ஐயன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[2]
ஊர்தொறும் வெண் தலை கொண்டு, உண் பலி இடும்! என்று,
வார் தரு மென்முலையாள் மங்கையொடும்(ம்) உடனே,
கூர் நுனை மழு ஏந்தி, கூடலையாற்றூரில்
ஆர்வன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[3]
சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ்சடையன்
பந்து அணவும் விரலாள் பாவையொடும்(ம்) உடனே,
கொந்து அணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே!

[4]
வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ, நல்
சோதி அது உரு ஆகி, சுரிகுழல் உமையோடும்,
கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில்
ஆதி இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[5]
வித்தக வீணையொடும், வெண்புரிநூல் பூண்டு,
முத்து அன வெண் முறுவல் மங்கையொடும்(ம்) உடனே,
கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அத்தன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[6]
மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடைமேல
இழை நுழை துகில் அல்குல் ஏந்திழையாளோடும
குழை அணி திகழ் சோலைக் கூடலையாற்றூரில்
அழகன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[7]
மறை முதல் வானவரும், மால், அயன், இந்திரனும்,
பிறை நுதல் மங்கையொடும், பேய்க்கணமும், சூழ,
குறள்படை அதனோடும், கூடலையாற்றூரில்
அறவன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[8]
வேலையின் நஞ்சு உண்டு, விடை அது தான் ஏறி,
பால் அன மென்மொழியாள் பாவையொடும்(ம்) உடனே,
கோலம் அது உரு ஆகி, கூடலையாற்றூரில்
ஆலன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[9]
கூடலையாற்றூரில் கொடி இடையவளோடும்
ஆடல் உகந்தானை, அதிசயம் இது என்று
நாடிய இன்தமிழால் நாவல ஊரன் சொல்
பாடல்கள் பத்தும் வல்லார் தம் வினை பற்று அறுமே.

[10]
Back to Top

This page was last modified on Sun, 09 Mar 2025 21:46:14 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list column name thalam string value %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D