சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.018   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சடையாய்! எனுமால்; சரண் நீ!
பண் - இந்தளம்   (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)
Audio: https://www.youtube.com/watch?v=f_ZJk-kJhbA
Audio: https://sivaya.org/audio/2.018 sadaiyai enumaal.mp3
5.088   திருநாவுக்கரசர்   தேவாரம்   பெருகல் ஆம், தவம்; பேதைமை
பண் - திருக்குறுந்தொகை   (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)
Audio: https://www.youtube.com/watch?v=ya_VWVJgL_Y

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.018   சடையாய்! எனுமால்; சரண் நீ!  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருமருகல் ; (திருத்தலம் அருள்தரு வண்டுவார்குழலி உடனுறை அருள்மிகு மாணிக்கவண்ணர் திருவடிகள் போற்றி )
வைப்பூரிலுள்ள தாமன் என்போன் என் தந்தை. அவனுக்கு மகளிர் எழுவர். அரவு தீண்டப்பட்டவன் என் தாய்மாமன். என் தந்தை தன் மகளிருள் மூத்தவளை மாமனுக்குத் தருவதாகக் கூறிப் பொரு ளாசையால் பிறன் ஒருவனுக்கு மணம் செய்வித்தார், அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஏழாவது பெண்ணாகிய நான் என்னையும் இவ்வாறே வேறு ஒருவருக்கு மணம் செய்வித்துத் தன் மருகனைத் தந்தை தளர்வுறச் செய்வார் என்ற எண்ணத்தால் உறவினர்க்கும் தெரியாமல் இவரோடு போந்து மணம் முடித்து வாழ எண்ணினேன். வழியிடையே இவ்வூரில் அரவு தீண்டி இவரும் இறந்தார். கடல் நடுவே கலம் கவிழ்ந்த நாய்கன் போலத் துன்பத்துக்கு ஆளானேன். இந்நிலையில் என் சுற்றத்தார் போல என்பால் பரிவு காட்டி அருள் செய்கின்றீர்கள்! என்று கூறிய பெண்ணின் ஆற்றாமையைக் கேட்டுத் திருவுளம் இரங்கிய ஞான சம்பந்தர் மருகற் பெருமான் ஆலயம் சென்று பணிந்து உன் பெயர் கூறி ஒள்ளிழையாள் உளம் மெலிந்து வருந்துதல் அருட் கடலாகிய உனக்கு அழகோ என முறையிடும் நிலையில் சடையாயெனுமால் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞான சம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம் புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார்.
திருமணம் விரைவில் நிறைவேற ஓத வேண்டிய பதிகம்.
சடையாய்! எனுமால்; சரண் நீ! எனுமால்;
விடையாய்! எனுமால்; வெருவா விழுமால்;
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?

[1]
சிந்தாய்! எனுமால்; சிவனே! எனுமால்;
முந்தாய்! எனுமால்; முதல்வா! எனுமால்;
கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
எந்தாய்! தகுமோ, இவள் ஏசறவே?

[2]
அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும்,
பிறை ஆர் சடையும், உடையாய்! பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய்! இவளை
இறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே?

[3]
ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம்
பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்!
மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?

[4]
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம்(ம்) உடையாய், மருகல்!
கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?

[5]
பலரும் பரவப்படுவாய்! சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்!
புலரும்தனையும் துயிலாள், புடை போந்து
அலரும் படுமோ, அடியாள் இவளே

[6]
வழுவாள்; பெருமான்கழல் வாழ்க! எனா
எழுவாள்; நினைவாள், இரவும் பகலும்;
மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்!
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே?

[7]
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப,
துலங்க விரல் ஊன்றலும், தோன்றலனாய்;
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்!
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே?

[8]
எரி ஆர் சடையும், அடியும், இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே!
மரியார் பிரியா மருகல் பெருமான்!
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?

[9]
அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும்
நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;
மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்!
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?

[10]
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால்,
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்,
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.088   பெருகல் ஆம், தவம்; பேதைமை  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருமருகல் ; (திருத்தலம் அருள்தரு வண்டுவார்குழலி உடனுறை அருள்மிகு மாணிக்கவண்ணர் திருவடிகள் போற்றி )
பெருகல் ஆம், தவம்; பேதைமை தீரல் ஆம்;
திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம்;
பருகல் ஆம், பரம் ஆயது ஓர் ஆனந்தம்-
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.

[1]
பாடம் கொள் பனுவல்-திறம் கற்றுப் போய்,
நாடு அங்கு உள்ளன தட்டிய நாண் இலீர்!
மாடம் சூழ் மருகல் பெருமான் திரு
வேடம் கைதொழ, வீடு எளிது ஆகுமே.

[2]
சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை-
அனைத்தும் நீங்கி நின்று, ஆதரவு ஆய், மிக
மனத்தினால் மருகல் பெருமான் திறம்
நினைப்பினார்க்கு இல்லை, நீள் நில வாழ்க்கையே.

[3]
ஓது பைங்கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி,
பாதுகாத்துப் பலபல கற்பித்து,
மாதுதான், மருகல் பெருமானுக்குத்
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.

[4]
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன்; இன்று
துன்னு கைவளை சோர, கண் நீர் மல்கும்;
மன்னு தென் மருகல் பெருமான் திறம்
உன்னி, ஒண்கொடி உள்ளம் உருகுமே.

[5]
சங்கு சோர, கலையும் சரியவே,
மங்கைதான், மருகல் பெருமான் வரும்
அங்கவீதி அருகு அணையா நிற்கும்;
நங்கைமீர்! இதற்கு என் செய்கேன், நாளுமே?

[6]
காட்சி பெற்றிலள் ஆகிலும், காதலே
மீட்சி ஒன்று அறியாது மிகுவதே?
மாட்சி ஆர் மருகல் பெருமானுக்குத்
தாட்சி சால உண்டாகும்!-என் தையலே.

[7]
நீடு நெஞ்சுள் நினைந்து, கண் நீர் மல்கும்,
ஓடும் மாலினோடு, ஒண் கொடிமாதராள்,
மாடம் நீள் மருகல் பெருமான் வரில்
கூடு, நீ! என்று கூடல் இழைக்குமே.

[8]
கந்தவார் குழல் கட்டிலள், காரிகை
அந்தி, மால் விடையோடும் அன்பு ஆய் மிக
வந்திடாய், மருகல் பெருமான்! என்று
சிந்தைசெய்து திகைத்திடும்; காண்மினே!

[9]
ஆதி மாமலை அன்று எடுத்தான் இற்று,
சோதி! என்றலும், தொல் அருள் செய்திடும்
ஆதியான், மருகல் பெருமான், திறம்
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list