உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி ஒன்றுநூ றாயிர கோடி அலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ ! அங்ஙனே அழகிதோ, அரணம் பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர்வெண் திங்கள் இலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத்(து) இவர்க்கே. |
1
|
நெற்றியிற் கண்என் கண்ணில்நின் றகலா நெஞ்சினில் அஞ்சிலம்(பு) அலைக்கும் பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப் புகுந்தன போந்தன இல்லை மற்றெனக்(கு) உறவேன் மறிதிரை வடவாற் றிடுபுனல் மதகில்வாழ் முதலை ஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. |
2
|
சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய வெண்ணிலா விரிதரு தரளக் குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும் குறிப்பெனோ கோங்கிணர் அனைய குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்து உக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்(கு) இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. |
3
|
வாழியம் போதத்(து) அருகுபாய் விடையம் வரிசையின் விளக்கலின் அடுத்த சூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச் சுடர்விடு மண்டலம் பொலியக் காழகில் கமழும் மாளிகை மகளிர் கங்குல்வாய் அங்குலி கெழும யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. |
4
|
எவரும்மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாட்டிருக் கமலத் தவரும்மா லவனும் அறிவரும் பெருமை அடலழல் உமிழ்தழற் பிழம்பர் உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில் உறுகளிற்(று) அரசின(து) ஈட்டம் இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. |
5
|
Go to top |
அருளுமா(று) அருளி ஆளுமா(று) ஆள அடிகள்தம் அழகிய விழியும் குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற குயிலினை மயல்செய்வ(து) அழகோ தரளவான் குன்றில் தண்நிலா ஒளியும் தருகுவால் பெருகுவான் தெருவில் இருளெலாம் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. |
6
|
தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின் தளிர்இறப்(பு) இலைஉதிர்(வு) என்றால் நினைப்பருந் தம்பால்சேறலின் றேனும் நெஞ்சிடிந்(து) உருகுவ(து) என்னோ கனைப்பெருங் கலங்கல் பொய்கையங் கழுநீர்ச் சூழல்மா ளிகைசுடர் வீசும் எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. |
7
|
பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித் திருக்க என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் மின்நெடும் புருவத்(து) இளமயில் அனையார் விலங்கல்செய் நாடக சாலை இன்நடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. |
8
|
மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத்(து) ஒளிப்பார் அங்கழல் சுடராம் அவர்க்கிள வேனல் அலர்கதிர் அனையர் வாழியரோ ! பொங்கெழில் திருநீறு அழிபொசி வனப்பில் புனல்துளும்(பு) அவிர்சடை மொழுப்பர் எங்களுக்(கு) இனியர் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. |
9
|
தனியர்எத் தனைஓ ராயிர வருமாம் தன்மையர் என்வயத் தினராம் கனியரத் திருதீங் கரும்பர்வெண் புரிநூற் கட்டியர் அட்டஆ ரமிர்தர் புனிதர்பொற் கழலர்புரி சடா மகுடர் புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்(கு) இனியர்எத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. |
10
|
Go to top |
சரளமந் தார சண்பக வகுள சந்தன நந்தன வனத்தின் இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவரை அருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர் அறைந்தசொல் மாலைஈ ரைந்தின் பொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும் பொன்நெடுங் குன்றுடை யோரே. |
11
|