திருமறைக்காடு (வேதாரண்யம்) - பியந்தைக்காந்தாரம் கரகரப்பிரியா நவரோசு கன்னடகௌலா ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி அக்காலத்தில் பாண்டிநாடு சமண் சமய இருளில் மூழ்கியிருந் தது. சமண சமயிகள் தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத்தலைப்பட்டனர். சிவாலயங்கள் சமண் பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டும் வழிபாடு இன்றியும் இருந்தன. மன்னனின் மாதேவியார் மங்கையர்க் கரசியாரும்அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து தம் பரிசனங்களை அனுப்பி வணங்கி தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். பாண்டி நாட்டிலிருந்து திருமறைக்காடு வந்த பரிசனங்கள் ஞானசம்பந்தரை வணங்கித் தங்கள் நாட்டின் நிலையை எடுத்துரைத் தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டார்கள். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் வேட்கையை அப்பரிடம் தெரிவித்தார். அதனை அறிந்த அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக் கோர் அளவில்லை என்பதை நான் உணர்ந்தவன். மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது? எனத்தடுத்தார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி நாம் போற்றுவது நம் பெருமானுடைய திருவடிகளை. ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க வேயுறு தோளிபங்கன் என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார். சனி, இராகு, கேது பெயர்ச்சி, கோள்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ ஓத வேண்டிய பதிகம்.
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன்,
மிகநல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி,
சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க,
எருது ஏறி, ஏழை உடனே,
பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும்,
உடன் ஆய நாள்கள் அவைதாம்,
அன்பொடு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து,
உமையோடும், வெள்ளை விடை மேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
திருமகள், கலை அது ஊர்தி, செயமாது, பூமி,
திசை தெய்வம் ஆன பலவும்,
அரு நெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
மதி நுதல் மங்கையோடு, வட பால் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன்,
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர்,
கொடு நோய்கள் ஆனபலவும்,
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள் தனோடும்
விடை ஏறும் நங்கள் பரமன்,
துஞ்சு இருள் வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும்,
மிகை ஆன பூதம் அவையும்,
அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
வாள்வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடன் ஆய்,
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல்,
கொடு நாகமோடு, கரடி,
ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக
விடை ஏறு செல்வன், அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும், வாதம், மிகை ஆன பித்தும்,
வினை ஆன, வந்து நலியா;
அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
வேள் பட விழி செய்து, அன்று, விடைமேல் இருந்து,
மடவாள் தனோடும் உடன் ஆய்,
வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடர் ஆன வந்து நலியா;
ஆழ் கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
பல பல வேடம் ஆகும் பரன், நாரிபாகன், பசு ஏறும்
எங்கள் பரமன்,
சல மகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
மலர் மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வரு காலம் ஆன பலவும்,
அலைகடல், மேரு, நல்ல; அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி,
வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில்
அரசு ஆள்வர்; ஆணை நமதே.
7.071
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
யாழைப் பழித் தன்ன மொழி
Tune - காந்தாரம்
(திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுவரர் யாழைப்பழித்தநாயகி)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai song author %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D paadal name %E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%2C pathigam no 2.085