நீறு அலைத்தது ஓர் மேனி, நிமிர்சடை ஆறு அலைக்க நின்று ஆடும், அமுதினை; தேறலை; தெளியை; தெளி வாய்த்தது ஓர் ஊறலை; கண்டுகொண்டது-என் உள்ளமே.
|
1
|
பொந்தையைப் புக்கு நீக்கப் புகுந்திடும் தந்தையை, தழல் போல்வது ஓர் மேனியை, சிந்தையை, தெளிவை, தெளி வாய்த்தது ஓர் எந்தையை, கண்டுகொண்டது-என் உள்ளமே.
|
2
|
வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே வெள்ளத்தைச் சடை வைத்த விகிர்தனார், கள்ளத்தைக் கழிய(ம்) மனம் ஒன்றி நின்று உள்ளத்தில், ஒளியைக் கண்டது-என் உள்ளமே.
|
3
|
அம்மானை,- அமுதின் அமுதே! என்று- தம்மானை, தத்துவத்து அடியார் தொழும் செம் மான(ந்) நிறம் போல்வது ஓர் சிந்தையுள் எம்மானை, கண்டுகொண்டது, என் உள்ளமே.
|
4
|
கூறு ஏறும்(ம்) உமை பாகம் ஓர் பாலராய், ஆறு ஏறும் சடைமேல் பிறை சூடுவர், பாறு ஏறும் தலை ஏந்திப் பல இலம் ஏறு ஏறும் எந்தையைக் கண்டது-என் உள்ளமே.
|
5
|
Go to top |
முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார், தம் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்; வன் நெஞ்சம்(ம்) அது நீங்குதல் வல்லிரே? என் நெஞ்சில் ஈசனைக் கண்டது-என் உள்ளமே.
|
6
|
வென்றானை, புலன் ஐந்தும்; என் தீவினை கொன்றானை; குணத்தாலே வணங்கிட நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம் ஒன்றானை; கண்டுகொண்டது-என் உள்ளமே.
|
7
|
மருவினை, மட நெஞ்சம்! மனம் புகும் குருவினை, குணத்தாலே வணங்கிடும் திருவினை, சிந்தையுள் சிவனாய் நின்ற உருவனை, கண்டுகொண்டது-என் உள்ளமே.
|
8
|
தேசனை, திருமால் பிரமன் செயும் பூசனை, புணரில் புணர்வு ஆயது ஓர் நேசனை, நெஞ்சினுள் நிறைவு ஆய் நின்ற ஈசனை, கண்டுகொண்டது-என் உள்ளமே.
|
9
|
வெறுத்தான், ஐம்புலனும்; பிரமன் தலை அறுத்தானை; அரக்கன் கயிலாயத்தைக் கறுத்தானைக் காலினில் விரல் ஒன்றினால் ஒறுத்தானை; கண்டுகொண்டது-என் உள்ளமே.
|
10
|
Go to top |