கூடிய பாதம் இரண்டும் படிமிசை பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழும் தேடும் முகம்ஐந்தும் செங்கயல் மூவைந்தும் நாடும் சதாசிவ நல்லொளி முத்தே.
|
1
|
வேதா நெடுமால் உருத்திரன் மேல்ஈசன் மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும் சாதா ரணமாம் சதாசிவந் தானே.
|
2
|
ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை ஆகின்ற சத்தியின் உள்ளெ கதிரெழ ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின் ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.
|
3
|
அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம் அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம் அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.
|
4
|
சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள சமயத் தெழுந்த இராசியீ ராறுள சமயத் தெழுந்த சரீரம்ஆ றெட்டுள சமயத் தெழுந்த சதாசிவந் தானே.
|
5
|
Go to top |
நடுவு கிழக்குத் தெற்குஉத் தரம்மேற்கு நடுவு படிகம்நற் குங்கும வன்னம் அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால் அடியேற் கருளிய முகம்இவை அஞ்சே.
|
6
|
அஞ்சு முகம்உள ஐம்மூன்று கண்உள அஞ்சினொ டஞ்சு கரதலந் தானுள அஞ்சுடன் அஞ்சுஆ யுதம்உள நம்பிஎன் நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.
|
7
|
சத்தி தராதலம் அண்டம் சதாசிவம் சத்தி சிவம்மிக்க தாபர சங்கமம் சத்தி உருவம் அருவம் சதாசிவம் சத்தி சிவம்தத் துவம்முப்பத் தாறே.
|
8
|
தத்துவ மாவது அருவம் சராசரம் தத்துவ மாவது உருவம் சுகோதயம் தத்துவ மெல்லாம் சகலமு மாய்நிற்கும் தத்துவ மாகும் சதாசிவந் தானே.
|
9
|
கூறுமின் நூறு சதாசிவன் எம்மிறை வேறுரை செய்து மிகைப்பொரு ளாய்நிற்கும் ஏறுரை செய்தொல் வானவர் தம்மொடும் மாறுசெய் வான்என் மனம்புகுந் தானே.
|
10
|
Go to top |
இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும் சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும் அருளார்ந்த நெஞ்சத்தெம் ஆதிப் பிரானைத் தெருளார்ந்தென் னுள்ளே தெளிந்திருந் தேனே.
|
11
|
சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில் உத்தரம் வாமம் உரைத்திடும் சத்தி பச்சிமம் பூருவம் தற்புரு டன்உரை தெற்கில் அகோரம் வடகிழக் கீசனே.
|
12
|
நாலுள்நல்ஈ சானம் நடுவுச்சி தானாகும் தாணுவின் றன்முகந் தற்புரு டம்மாகும் காணும்அ கோரம் இருதயம் குய்யமாம் மாணுறு வாமம் ஆம் சத்திநற் பாதமே.
|
13
|
நெஞ்சு சிரம் சிகை நீள்கவசம் கண் அம்பாம் வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம் செஞ்சுறு செஞ்சுடர்ச் சேகரி மின்ஆகும் செஞ்சுடர் போலுந் தெசாயுதந் தானே.
|
14
|
எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம் விண்ணிற் பரைசிரம்மிக்க சிகைஆதி வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம் பண்ணும் கிரியை பரநேத் திரத்திலே.
|
15
|
Go to top |
சத்தி நாற்கோணம் சலம்உற்று நின்றிடும் சத்தி அறுகோணம் சயனத்தை உற்றிடும் சத்திநல் வட்டம் சலம்அற் றிருந்திடும் சத்தி உருவாம் சதாசிவன் றானே.
|
16
|
மானந்தி எத்தனை காலம் அழைப்பினும் தானந்தி அஞ்சில் தனிச்சுட ராய்நிற்கும் கானந்தி உந்தி கடந்து கமலத்தின் மேனந்தி ஒன்பதின் மேவிநின் றானே.
|
17
|
ஒன்றிய வாறுஉம் உடலி னுடன்கிடந்து என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது தென்றலைக் கேறத் திருந்து சிவனடி நின்று தொழுதேன்என் நெஞ்சத்தி னுள்ளே.
|
18
|
உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக் கொணர்ந்தேன் குவலயம் கோயில்என் நெஞ்சம் புணர்தேன் புனிதனும் பொய்யல்லன் மெய்யே பணிந்தேன் பகல்அவன் பாட்டும் ஒலியே.
|
19
|
ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிடத் தாங்கிடும் ஈரேழுள் தான்நடு வானதில் ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம்என ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே.
|
20
|
Go to top |
தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும் தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும் தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாம் தன்மேனி தானாகும் தற்பரன் றானே.
|
21
|
ஆரும் அறியார் அகாரம் அவன்என்று பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி தாரம் இரண்டும் தரணி முழுதுமாய் ஊறி எழுந்திடும் ஓசைய தாமே.
|
22
|
இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரமாய் இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம் இலிங்கத்துள் வட்டம் இறையும் உகாரம் இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே. 5,
|
23
|