மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச்
சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்
இனமாதவ ரிறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. |
1
|
மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புக ழொளிசேர்
கலையார்தரு புலவோரவர் காவன்மிகு குன்றில்
இலையார்தரு பொழில்சூழ்தரு மிடும்பாவன மிதுவே. |
2
|
சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழு மெந்தை
ஞாலம்மிகு கடல்சூழ்தரு முலகத்தவர் நலமார்
கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே. |
3
|
பொழிலார்தரு குலைவாழைக ளெழிலார்திகழ் போழ்தில்
தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில்
குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
எழிலார்தரு மிறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. |
4
|
பந்தார்விர லுமையாளொரு பங்காகங்கை முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல்
கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில்
எந்தாயென விருந்தானிடம் இடும்பாவன மிதுவே. |
5
|
| Go to top |
நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி
அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக்
குறிநீர்மையர் குணமார்தரு மணமார்தரு குன்றில்
எறிநீர்வயல் புடைசூழ்தரு மிடும்பாவன மிதுவே. |
6
|
நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம்
பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்காக்
கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
ஏறேறிய விறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. |
7
|
தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை
ஓராதெடுத் தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்துக்
கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த
ஏரார்தரு மிறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. |
8
|
பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலிமலிசீர்த்
தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர்பலதூய்
மருளார்தரு மாயன்னயன் காணார்மயலெய்த
இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே. |
9
|
தடுக்கையுட னிடுக்கித்தலை பறித்துச்சமண் நடப்பார்
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும்
மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல்
இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே. |
10
|
| Go to top |
கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல
இடியார்கட லடிவீழ்தரு மிடும்பாவனத் திறையை
அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்
படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும் வினை தானே. |
11
|