மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய், தனம் ஆர்தரு, சங்கக் கடல் வங்கத்திரள் உந்தி, சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு, குன்றில் இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.
|
1
|
மலையார் தரு மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி, நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர், கலை ஆர்தரு புலவோர் அவர் காவல் மிகு, குன்றில் இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே.
|
2
|
சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை, ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர், கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில் ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே.
|
3
|
பொழில் ஆர்தரு, குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில், தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில், குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில் எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.
|
4
|
பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா! கங்கை, முடிமேல் செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரைமேல், கொந்து ஆர் மலர்ப்புன்னை, மகிழ், குரவம், கமழ் குன்றில் எந்தாய்! என, இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே.
|
5
|
Go to top |
நெறி நீர்மையர், நீள் வானவர், நினையும் நினைவு ஆகி, அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி, குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில், எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.
|
6
|
நீறு ஏறிய திருமேனியர், நிலவும் உலகு எல்லாம் பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா, கூறு ஏறிய மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி, ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.
|
7
|
தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன், சிவன் மலையை ஓராது எடுத்து ஆர்த்தான், முடி ஒருபஃது அவை நெரித்து, கூர் ஆர்தரு கொலைவாளொடு குணம் நாமமும் கொடுத்த, ஏர் ஆர்தரும், இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.
|
8
|
பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர்த் தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய், மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த, இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.
|
9
|
தடுக்கை உடன் இடுக்கித் தலை பறித்துச் சமண் நடப்பார், உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும், மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர்க் கரைமேல் இடுக் கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே.
|
10
|
Go to top |
கொடி ஆர் நெடுமாடக் குன்றளூரின் கரைக் கோல இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை, அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன் படியால் சொன்ன பாடல் சொல, பறையும், வினைதானே.
|
11
|