பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம் பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம் பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.
|
1
|
தமிழ்மண் டலம்ஐந்தும் தாவிய ஞானம் உமிழ்வது போல உலகர் திரிவார் அவிழும் மனமும் ஆதி யருளும் தமிழ்மண் டலம்ஐந்தும் தத்துவ மாமே.
|
2
|
புண்ணியம் பாவம் இரண்டுள பூமியில் நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள் எண்ணி இரண்டையும் வேரறுத் தப்புறத் தண்ணல் இருந்திடம் ஆய்துகொள் ளீரே.
|
3
|
முன்னின் றருளும் முடிகின்ற காலத்து நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும் பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும் முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.
|
4
|
சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர் சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர் சிவனரு ளால்வினை சேரகி லாமை சிவனருள் கூடிற் சிவலோக மாமே.
|
5
|
Go to top |
புண்ணியன் எந்தை புனிதன் இணையடி நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது மண்ணவ ராவதும் வானவ ராவதும் அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.
|
6
|
காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர் நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால் ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.
|
7
|
அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும் அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர் அவ்வுல கத்தே அரனடி கூடுவர் அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.
|
8
|
கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம் மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம் சதிர்கொண்ட சாக்கி சரியன் வடிவாம் எதிர்கொண்ட ஈசன் எழில்வடி வாமே.
|
9
|
நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத் தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல வீடு மளவும் விடுகின் றிலேனே. 8,
|
10
|
Go to top |