சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

10.813   திருமூலர்   திருமந்திரம்


Add audio link Add Audio
ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையி னுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமைமென் மேலும்ஓர் ஆயிரத் தாண்டே.


1


கால் அங்கி நீர் பூக் கலந்தஆ காயமே
மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
மேல் அஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்
காலனும் இல்லை கருத்தில்லை தானே.


2


ஆன்மாவே தன்மைந்த னாயினன் என்பது
தான்மா மறைஅறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்(கு) இலனென்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐயைந்தும் இல்லையே.


3


உதயம் மழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்
கதிசாக் கிரம்கன வாதி சுழுத்தி
பதிதரும் சேதனன் பற்றாத் துரியத்(து)
அதிசுப னாய்அனந் தானந்தி யாகுமே.


4


எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுட் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றெய்து மன்றே.


5


Go to top
காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்தும்
தோய்ந்த கருமத் துரிசக லாதே.


6


ஆன மறையாதி யாம்உரு நந்திவந்து
தேனை யருள்செய் தெரிசனா வத்தையில்
ஆன வகையை விடும் அடைந் தாய்விட
ஆன மலாதீதம் அப்பரந் தானே.


7


சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள்நீங்கா(து) ஆங்கணில்தான் ஆகச்
சித்த சுகாவத்தை தீண்டாச் சமாதிசெய்
அத்தனொ டொன்றற் கருள்முத லாகுமே.


8


வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருட் கேவலத் தேவிட்டு
வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.


9


கறங்கோலை கொள்ளியின் வட்டம் கடலில்
நிறஞ்சேர் திரைதயிர் மத்தின் மலத்தே
அறம்காண் சுவர்க்கம் நரகம் புவிசேர்ந்(து)
இறங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.


10


Go to top
தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும்அப் பாசபே தங்களும்
ஆன குணமும்ப ரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல்பட ராவே.


11


நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்(கு)
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் றானும்
உருத்திர சோதியும் உள்ளத் துளாரே.


12


ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்
ஞானந் திரியில் கொளுவி அதனுட்புக்(கு)
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாகுமே.


13


ஆடிய காலின் அசைக்கின்ற வாயுவும்
தாடித் தெழுந்த தமருக ஓசையும்
பாடி யெழுகின்ற வேதா கமங்களும்
நாடியி னுள்ளாக நான்கண்ட வாறே.


14


முன்னை யறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவ(து) அறிவாம் அஃதன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே.


15


Go to top
செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்திஉண் டாகுமே.


16


தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்(து)
ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.


17


தொலையா அரனடி தோன்றும்ஐஞ் சத்தி
தொலையா இருள்ஒளி தோற்ற அணுவும்
தாலையாத் தொழில்ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தமுத் திக்கிடை தோயுமே.


18


தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
தான்றரும் ஞானந்தன் சத்திக்குச் சத்தன்றான்
ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கொளி யாகுமே.


19


அறிகின் றிலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீஎன் றருள்செய்தான் நந்தி
அறிகின்றேன் நான்என் றறிந்துகொண் டேனே.


20


Go to top
தான்அவன் ஆகியன் ஞானத் தலைவனை
வானவர் ஆதியை மாமணிச் சோதியை
ஈனமில் ஞானத்(து) இன்னருட் சத்தியை
ஊனம் இலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.


21


ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளிய தெனலாகும் ஆன்மாவை யன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிபவ ருள்ளே சிவானந்த மாமே.


22


ஆனந்த மாகும் அரன்அருட் சத்தியில்
தான்அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்(து)
ஊன்அந்த மாய்உணர் வாய்உள்ளுணர்வுறின்
கோன்அந்தம் வாய்க்கும் மகாவாகியம் ஆமே.


23


அறிவிக்க வேண்டா அறிவற் றவர்க்கும்
அறிவிக்க வேண்டா அறிவுற் றவர்க்கும்
அறிவுற்ற றறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்க தம்அறி(வு) ஆர்அறி வாரே.


24


சத்தும் அசத்தும் சதசத்தும் தாம்கூடிச்
சித்தும் அசித்தும் சிதசித்து மாய்நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடக்காத் துரியத்துச்
சுத்தராய் மூன்றுடன் சொல்லற் றவர்கட்கே.


25


Go to top
தானே அறியான் அறிவிலோன் றானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்
றானால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே யறிந்து சிவத்துடன் தங்குமே.


26


தத்துவ ஞானம் தலைப்பட் டவர்கட்கே
தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான்அவன் ஆகவே
தத்துவ ஞானானந் தம்தான் தொடங்குமே.


27


தன்னை யறிந்து சிவனுடன் தான்ஆக
மன்னும் மலக்குணம் மாளும் பிறப்பறும்
பின்அது நன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னர்த்து ஞானத்தின் முத்திரை நண்ணுமே.


28


ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்(டு) ஐங்கரு மத்துவித் தாதலால்
மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே.


29


உயிர்க்கறி வுண்மை உயிர்இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயர்மாயை சூக்கம்
உயிர்க்கிவை யூட்டுவோன் ஊட்டு மவனே
உயிர்ச்செய லன்றிஅவ் வுள்ளத் துளானே.


30


Go to top
தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவன்சீவர்
கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
பழியற்ற காரணம் காரியம் பாழ்விட்(டு)
அழிவற்ற சாந்தாதீ தன்சிவன் ஆமே.


31


இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதும் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
சொல்லது சொல்லிடின் தூராதி தூரம்என்(று)
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே.


32


உயிர்இச்சை ஊட்டி ஒழித்தருள் சத்தி
உயிர்இச்சை வீட்டிமெய் உண்மையை நாட
உயிர்இச்சை கூட்டி உடன்உற லாலே
உயிர்இச்சை வாட்டி உயர்பதம் சேருமே.


33


சேருஞ் சிவம்ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓரொன் றிலார்ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆரும்கண்(டு) ஓரார் அவைஅருள் அன்றே.


34


எய்தின செய்யும் இருமாயா சத்தியின்
எய்தின செய்யும் இருஞான சத்தியின்
எய்தின செய்யும் இருஞால சத்தியின்
எய்தின செய்யும் இறையருள் தானே.


35


Go to top
திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலக் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.


36


அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவன்அரு ளாமே.


37


அருளான சத்தி அனல்வெம்மை போலப்
பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
இருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும்
தருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே.


38


ஆதித்தன் தோன்ற அரும்பது மாதிகள்
பேதித்த தம்வினை யால்செயல் பேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்துப் பேதியா வா(று)அருட் பேதமே.


39


பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் அபோதம் புணர்போதா போதமும்
நாதம் அநாத முடன்நாதா நாதமும்
ஆதல் அருளின் அருளிச்சை யாமே.


40


Go to top
மேவிய பொய்க்கிரி ஆட்டும் வினையெனப்
பாவிய பூதங்கொண் டாட்டிப் படைப்பாதிப்
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை ஆட்டும் அரன்அரு ளாமே.


41


ஆறா றகன்று தனைஅறிந் தான்அவன்
ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டாச் சிவம்ஆமே.


42


தீண்டற் கரிய திருவடி நேயத்தை
மீண்டுற் றருளால் விதிவழி யேசென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தான்ஏறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.


43


சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.


44


தான்என் றவன்என் றிரண்டென்பர் தத்துவம்
தான்என் றவன்என் றிரண்டற்ற தன்மையால்
தான்என் றிரண்டுன்னார் கேவலத் தானவர்
தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.


45


Go to top
தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறியின் தலைப்படும்
தன்னினில் தன்னை அறிகில னாயிடில்
தன்னினில் தன்னையும் சார்தற் கரியனே.


46


அறியகி லேன்என் றரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை
இருசுட ராகிய இயற்றவல் லானும்
ஒருசுட ராய்வந்தென் உள்ளத்துள் ளானே.


47


மண்ணொன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ண மாகிநின் றானே.


48


ஓம்புகின் றான்உல கேழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடுங் கூடுவர்
தேம்புகின் றார்சிவம் சிந்தைசெய் யாதவர்
கூம்புகின் றார்வந்து கொள்ளலும் ஆமே.


49


குறியறி யார்கள் குறிகாண மாட்டார்
குறியறி யார்கடம் கூடல் பெரிது
குறியறி ஆவகை கூடுமின் கூடில்
அறிவறி வாய்இருந்(து) அன்னமும் ஆமே.


50


Go to top
ஊனோ உயிரோ உறுகின்ற தேதின்பம்?
வானோர் தலைவி மயக்கத் துறநிற்க
யானோ பெரிதறி வேன்என்னும் மானுடன்
தானோ பிறப்போ டிறப்பறி யானே. 14,


51



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song lang tamil pathigam no 10.813