சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.035   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருத்தென்குரங்காடுதுறை - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு அழகுசடைமுடியம்மை உடனுறை அருள்மிகு குலைவணங்குநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=i_rCbmU4gRA   Add audio link Add Audio

பரவக் கெடும், வல்வினை பாரிடம் சூழ,
இரவில் புறங்காட்டுஇடை நின்று எரிஆடி;
அரவச் சடை அந்தணன்; மேய, அழகு ஆர்
குரவப்பொழில் சூழ், குரங்காடுதுறையே.

1
பூதகணங்கள் சூழ இரவில் சுடுகாட்டில் நின்று எரி ஆடுபவனும் , அரவணிந்த சடையினை உடைய அந்தணனும் ஆகிய சிவபிரானது குராமரப் பொழில் சூழ்ந்த குரங்காடுதுறையைப் பரவ வலிய வினைகள் கெட்டொழியும் .

விண்டார் புரம்மூன்றும் எரித்த விமலன்,
இண்டு ஆர் புறங்காட்டுஇடை நின்று எரி ஆடி,
வண்டு ஆர் கருமென்குழல் மங்கை ஒர்பாகம்
கொண்டான், நகர்போல் குரங்காடுதுறையே.

2
தன்னோடு பகை பூண்டவராகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த விமலனும், இண்டங்கொடிகள் படர்ந்த சுடுகாட்டில் நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கும் மெல்லிய கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை.

நிறைவு இல் புறங்காட்டுஇடை, நேரிழையோடும்
இறைவு இல் எரியான், மழு ஏந்தி நின்று ஆடி;
மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும்
குறைவுஇல்லவன்; ஊர் குரங்காடுதுறையே.

3
நிறைதல் இல்லாத சுடுகாட்டுள் நின்று அழிவற்ற எரியைக் கையில் உடையவனாய் மழு ஏந்தி உமையம்மையோடு ஆடுபவனும், வேத ஒலியால் தேவர், அசுரர் ஆகியோரால் தொழப்படும் குறைவற்றவனும் ஆகிய சிவபிரானது ஊர், குரங்காடுதுறை.

விழிக்கும் நுதல்மேல் ஒரு வெண்பிறை சூடி,
தெழிக்கும் புறங்காட்டுஇடைச் சேர்ந்து எரிஆடி,
பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன், ஊர் பொன்
கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே.

4
விழியை உடைய நெற்றியின்மேல் தலையின் முன் பாகத்தில் பிறைசூடி, ஒலிக்கும் சுடுகாட்டை அடைந்து எரியாடி, எல்லோரும் பழித்துரைக்கப் பலியேற்றுத்திரியும் சிவபிரானது ஊர் பொன் கொழிக்கும் காவிரி நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறையாகும்.

நீறு ஆர்தரு மேனியன், நெற்றி ஓர் கண்ணன்,
ஏறு ஆர் கொடி எம் இறை, ஈண்டு எரிஆடி,
ஆறு ஆர் சடை அந்தணன், ஆயிழையாள் ஓர்
கூறான், நகர்போல் குரங்காடுதுறையே.

5
நீறு பூசிய மேனியன். நெற்றிக்கண்ணன். விடைக் கொடியை உடைய எம் தலைவன் மிகுதியான தீயில் நின்று ஆடுபவன். கங்கை சூடிய சடையினை உடைய கருணையாளன். உமையொருபாகன். அவனது நகர் குரங்காடுதுறை.
Go to top

நளிரும் மலர்க்கொன்றையும் நாறு கரந்தைத்
துளிரும் சுலவி, சுடுகாட்டு எரிஆடி,
மிளிரும் அரவு ஆர்த்தவன் மேவிய கோயில்
குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே.

6
குளிர்ந்த கொன்றைமலர், மணம் வீசும் சிவகரந்தைத்தளிர் ஆகியவற்றைக் கலந்தணிந்து சுடுகாட்டில் எரியில் நின்றாடும் அழகனாய், விளங்கும் பாம்பை இடையில் கட்டியவன் ஆகிய சிவபிரான் மேவிய கோயிலைக் கொண்டது குளிர்ந்த நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறை.

பழகும் வினை தீர்ப்பவன்; பார்ப்பதியோடும்,
முழவம் குழல் மொந்தை முழங்க, எரிஆடும்
அழகன்; அயில்மூஇலைவேல் வலன் ஏந்தும்
குழகன்; நகர்போல் குரங்காடுதுறையே.

7
பிறவிதோறும் பழகிய வினைகளைத் தீர்ப்பவன். பார்வதிதேவியோடு முழவு, குழல், மொந்தை ஒலிக்க இடுகாட்டுள் முழங்கும் தீயில் நின்று எரியாடும் அழகன். கூரிய மூவிலைவேலை வெற்றிக்கு அடையாளமாக ஏந்தும் இளையோன் ஆகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை.

வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க,
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம்
கரை ஆர்ந்து இழி காவிரிக் கோலக் கரைமேல்,
குரை ஆர் பொழில் சூழ், குரங்காடுதுறையே.

8
கயிலைமலையை ஆரவாரித்துப் பெயர்த்த இராவணனின் வலிமை கெடுமாறு காலிலமைந்த விரலால் நெரித்தவனாகிய சிவபிரானது ஊர், கரையைப் பொருந்தி ஓடிவரும் காவிரியாற்றின் அழகிய கரைமேல் ஒலி பொருந்திய பொழில் சூழ்ந்திலங்கும் குரங்காடு துறையாகும்.

நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணாப்
படிஆகிய பண்டங்கன், நின்று எரிஆடி,
செடி ஆர் தலை ஏந்திய செங்கண் வெள் ஏற்றின்
கொடியான், நகர்போல் குரங்காடுதுறையே.

9
திருமால், பிரமர்கள் நினையவும் ஒண்ணாத இயல்பினன். பாண்டரங்கக் கூத்தை ஆடியவன். எரியில் நின்று ஆடுபவன். முடை நாற்றம் வீசும் தலையோட்டை ஏந்தியவன். சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெள்விடையைக் கொடியாக உடையவன். அவனது நகர் குரங்காடுதுறை.

துவர் ஆடையர், வேடம் அலாச் சமண்கையர்,
கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம்
நவை ஆர் மணி, பொன், அகில், சந்தனம், உந்திக்
குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே.

10
துவராடை அணிந்த புத்தர்களும், வேடமல்லாத வேடம் பூண்ட சமணர்களாகிய கீழோரும் பேசும் ஐயஉரைகளை விரும்பாத சிவபிரானது ஊர், மலைகளிலிருந்து சிதைந்து வந்த மணிகள், பொன், அகில், சந்தனம் ஆகியவற்றை உந்திவந்து குவியலாகக்கரையில் சேர்க்கும் காவிரியின் கரையில் உள்ள குரங்காடுதுறையாம்.
Go to top

நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன்,
கொல் ஏறு உடையான் குரங்காடுதுறைமேல்
சொல் ஆர் தமிழ்மாலைபத்தும், தொழுது ஏத்த
வல்லார் அவர், வானவரோடு உறைவாரே.

11
நல்லவர்கள் வாழும் காழியுள் தோன்றிய ஞானசம்பந்தன் கொல்லேற்றை ஊர்தியாக உடைய சிவபிரான் எழுந்தருளிய குரங்காடுதுறைமேல் பாடிய தமிழ்மாலை பத்தையும் பாடித்தொழ வல்லவர், வானவரோடு உறைவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருத்தென்குரங்காடுதுறை
2.035   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பரவக் கெடும், வல்வினை பாரிடம்
Tune - இந்தளம்   (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)
5.063   திருநாவுக்கரசர்   தேவாரம்   இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும்
Tune - திருக்குறுந்தொகை   (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000