பரவக் கெடும், வல்வினை பாரிடம் சூழ,
இரவில் புறங்காட்டுஇடை நின்று எரிஆடி;
அரவச் சடை அந்தணன்; மேய, அழகு ஆர்
குரவப்பொழில் சூழ், குரங்காடுதுறையே.
|
1
|
பூதகணங்கள் சூழ இரவில் சுடுகாட்டில் நின்று எரி ஆடுபவனும் , அரவணிந்த சடையினை உடைய அந்தணனும் ஆகிய சிவபிரானது குராமரப் பொழில் சூழ்ந்த குரங்காடுதுறையைப் பரவ வலிய வினைகள் கெட்டொழியும் . | |
விண்டார் புரம்மூன்றும் எரித்த விமலன்,
இண்டு ஆர் புறங்காட்டுஇடை நின்று எரி ஆடி,
வண்டு ஆர் கருமென்குழல் மங்கை ஒர்பாகம்
கொண்டான், நகர்போல் குரங்காடுதுறையே.
|
2
|
தன்னோடு பகை பூண்டவராகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த விமலனும், இண்டங்கொடிகள் படர்ந்த சுடுகாட்டில் நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கும் மெல்லிய கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை. | |
நிறைவு இல் புறங்காட்டுஇடை, நேரிழையோடும்
இறைவு இல் எரியான், மழு ஏந்தி நின்று ஆடி;
மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும்
குறைவுஇல்லவன்; ஊர் குரங்காடுதுறையே.
|
3
|
நிறைதல் இல்லாத சுடுகாட்டுள் நின்று அழிவற்ற எரியைக் கையில் உடையவனாய் மழு ஏந்தி உமையம்மையோடு ஆடுபவனும், வேத ஒலியால் தேவர், அசுரர் ஆகியோரால் தொழப்படும் குறைவற்றவனும் ஆகிய சிவபிரானது ஊர், குரங்காடுதுறை. | |
விழிக்கும் நுதல்மேல் ஒரு வெண்பிறை சூடி,
தெழிக்கும் புறங்காட்டுஇடைச் சேர்ந்து எரிஆடி,
பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன், ஊர் பொன்
கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே.
|
4
|
விழியை உடைய நெற்றியின்மேல் தலையின் முன் பாகத்தில் பிறைசூடி, ஒலிக்கும் சுடுகாட்டை அடைந்து எரியாடி, எல்லோரும் பழித்துரைக்கப் பலியேற்றுத்திரியும் சிவபிரானது ஊர் பொன் கொழிக்கும் காவிரி நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறையாகும். | |
நீறு ஆர்தரு மேனியன், நெற்றி ஓர் கண்ணன்,
ஏறு ஆர் கொடி எம் இறை, ஈண்டு எரிஆடி,
ஆறு ஆர் சடை அந்தணன், ஆயிழையாள் ஓர்
கூறான், நகர்போல் குரங்காடுதுறையே.
|
5
|
நீறு பூசிய மேனியன். நெற்றிக்கண்ணன். விடைக் கொடியை உடைய எம் தலைவன் மிகுதியான தீயில் நின்று ஆடுபவன். கங்கை சூடிய சடையினை உடைய கருணையாளன். உமையொருபாகன். அவனது நகர் குரங்காடுதுறை. | |
| Go to top |
நளிரும் மலர்க்கொன்றையும் நாறு கரந்தைத்
துளிரும் சுலவி, சுடுகாட்டு எரிஆடி,
மிளிரும் அரவு ஆர்த்தவன் மேவிய கோயில்
குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே.
|
6
|
குளிர்ந்த கொன்றைமலர், மணம் வீசும் சிவகரந்தைத்தளிர் ஆகியவற்றைக் கலந்தணிந்து சுடுகாட்டில் எரியில் நின்றாடும் அழகனாய், விளங்கும் பாம்பை இடையில் கட்டியவன் ஆகிய சிவபிரான் மேவிய கோயிலைக் கொண்டது குளிர்ந்த நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறை. | |
பழகும் வினை தீர்ப்பவன்; பார்ப்பதியோடும்,
முழவம் குழல் மொந்தை முழங்க, எரிஆடும்
அழகன்; அயில்மூஇலைவேல் வலன் ஏந்தும்
குழகன்; நகர்போல் குரங்காடுதுறையே.
|
7
|
பிறவிதோறும் பழகிய வினைகளைத் தீர்ப்பவன். பார்வதிதேவியோடு முழவு, குழல், மொந்தை ஒலிக்க இடுகாட்டுள் முழங்கும் தீயில் நின்று எரியாடும் அழகன். கூரிய மூவிலைவேலை வெற்றிக்கு அடையாளமாக ஏந்தும் இளையோன் ஆகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை. | |
வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க,
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம்
கரை ஆர்ந்து இழி காவிரிக் கோலக் கரைமேல்,
குரை ஆர் பொழில் சூழ், குரங்காடுதுறையே.
|
8
|
கயிலைமலையை ஆரவாரித்துப் பெயர்த்த இராவணனின் வலிமை கெடுமாறு காலிலமைந்த விரலால் நெரித்தவனாகிய சிவபிரானது ஊர், கரையைப் பொருந்தி ஓடிவரும் காவிரியாற்றின் அழகிய கரைமேல் ஒலி பொருந்திய பொழில் சூழ்ந்திலங்கும் குரங்காடு துறையாகும். | |
நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணாப்
படிஆகிய பண்டங்கன், நின்று எரிஆடி,
செடி ஆர் தலை ஏந்திய செங்கண் வெள் ஏற்றின்
கொடியான், நகர்போல் குரங்காடுதுறையே.
|
9
|
திருமால், பிரமர்கள் நினையவும் ஒண்ணாத இயல்பினன். பாண்டரங்கக் கூத்தை ஆடியவன். எரியில் நின்று ஆடுபவன். முடை நாற்றம் வீசும் தலையோட்டை ஏந்தியவன். சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெள்விடையைக் கொடியாக உடையவன். அவனது நகர் குரங்காடுதுறை. | |
துவர் ஆடையர், வேடம் அலாச் சமண்கையர்,
கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம்
நவை ஆர் மணி, பொன், அகில், சந்தனம், உந்திக்
குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே.
|
10
|
துவராடை அணிந்த புத்தர்களும், வேடமல்லாத வேடம் பூண்ட சமணர்களாகிய கீழோரும் பேசும் ஐயஉரைகளை விரும்பாத சிவபிரானது ஊர், மலைகளிலிருந்து சிதைந்து வந்த மணிகள், பொன், அகில், சந்தனம் ஆகியவற்றை உந்திவந்து குவியலாகக்கரையில் சேர்க்கும் காவிரியின் கரையில் உள்ள குரங்காடுதுறையாம். | |
| Go to top |
நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன்,
கொல் ஏறு உடையான் குரங்காடுதுறைமேல்
சொல் ஆர் தமிழ்மாலைபத்தும், தொழுது ஏத்த
வல்லார் அவர், வானவரோடு உறைவாரே.
|
11
|
நல்லவர்கள் வாழும் காழியுள் தோன்றிய ஞானசம்பந்தன் கொல்லேற்றை ஊர்தியாக உடைய சிவபிரான் எழுந்தருளிய குரங்காடுதுறைமேல் பாடிய தமிழ்மாலை பத்தையும் பாடித்தொழ வல்லவர், வானவரோடு உறைவர். | |