சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.035
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பரவக் கெடும், வல்வினை பாரிடம் பண் - இந்தளம் (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=i_rCbmU4gRA |
5.063
திருநாவுக்கரசர்
தேவாரம்
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் பண் - திருக்குறுந்தொகை (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=HwPVfvSDzSI |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.035  
பரவக் கெடும், வல்வினை பாரிடம்
பண் - இந்தளம் (திருத்தலம் திருத்தென்குரங்காடுதுறை ; (திருத்தலம் அருள்தரு அழகுசடைமுடியம்மை உடனுறை அருள்மிகு குலைவணங்குநாதர் திருவடிகள் போற்றி )
பரவக் கெடும், வல்வினை பாரிடம் சூழ, இரவில் புறங்காட்டுஇடை நின்று எரிஆடி; அரவச் சடை அந்தணன்; மேய, அழகு ஆர் குரவப்பொழில் சூழ், குரங்காடுதுறையே. | [1] |
விண்டார் புரம்மூன்றும் எரித்த விமலன், இண்டு ஆர் புறங்காட்டுஇடை நின்று எரி ஆடி, வண்டு ஆர் கருமென்குழல் மங்கை ஒர்பாகம் கொண்டான், நகர்போல் குரங்காடுதுறையே. | [2] |
நிறைவு இல் புறங்காட்டுஇடை, நேரிழையோடும் இறைவு இல் எரியான், மழு ஏந்தி நின்று ஆடி; மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும் குறைவுஇல்லவன்; ஊர் குரங்காடுதுறையே. | [3] |
விழிக்கும் நுதல்மேல் ஒரு வெண்பிறை சூடி, தெழிக்கும் புறங்காட்டுஇடைச் சேர்ந்து எரிஆடி, பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன், ஊர் பொன் கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே. | [4] |
நீறு ஆர்தரு மேனியன், நெற்றி ஓர் கண்ணன், ஏறு ஆர் கொடி எம் இறை, ஈண்டு எரிஆடி, ஆறு ஆர் சடை அந்தணன், ஆயிழையாள் ஓர் கூறான், நகர்போல் குரங்காடுதுறையே. | [5] |
நளிரும் மலர்க்கொன்றையும் நாறு கரந்தைத் துளிரும் சுலவி, சுடுகாட்டு எரிஆடி, மிளிரும் அரவு ஆர்த்தவன் மேவிய கோயில் குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே. | [6] |
பழகும் வினை தீர்ப்பவன்; பார்ப்பதியோடும், முழவம் குழல் மொந்தை முழங்க, எரிஆடும் அழகன்; அயில்மூஇலைவேல் வலன் ஏந்தும் குழகன்; நகர்போல் குரங்காடுதுறையே. | [7] |
வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க, நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம் கரை ஆர்ந்து இழி காவிரிக் கோலக் கரைமேல், குரை ஆர் பொழில் சூழ், குரங்காடுதுறையே. | [8] |
நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணாப் படிஆகிய பண்டங்கன், நின்று எரிஆடி, செடி ஆர் தலை ஏந்திய செங்கண் வெள் ஏற்றின் கொடியான், நகர்போல் குரங்காடுதுறையே. | [9] |
துவர் ஆடையர், வேடம் அலாச் சமண்கையர், கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம் நவை ஆர் மணி, பொன், அகில், சந்தனம், உந்திக் குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே. | [10] |
நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன், கொல் ஏறு உடையான் குரங்காடுதுறைமேல் சொல் ஆர் தமிழ்மாலைபத்தும், தொழுது ஏத்த வல்லார் அவர், வானவரோடு உறைவாரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.063  
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருத்தென்குரங்காடுதுறை ; (திருத்தலம் அருள்தரு அழகுசடைமுடியம்மை உடனுறை அருள்மிகு குலைவணங்குநாதர் திருவடிகள் போற்றி )
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்- புரம் காவல்(ல்) அழியப் பொடி ஆக்கினான் தரங்கு ஆடும் தட நீர்ப் பொன்னித் தென்கரைக் குரங்காடூதுறைக் கோலக் கபாலியே. | [1] |
முத்தினை(ம்), மணியை, பவளத்து ஒளிர்- தொத்தினை, சுடர்சோதியை, சோலை சூழ் கொத்து அலர் குரங்காடுதுறை உறை அத்தன் என்ன அண்ணித்திட்டு இருந்ததே. | [2] |
குளிர்புனல் குரங்காடுதுறையனை தளிர்நிறத் தையல் பங்கனை, தண்மதி ஒளியனை(ந்), நினைந்தேனுக்கு என் உள்ளமும் தெளிவினைத் தெளியத் தெளிந்திட்டதே. | [3] |
மணவன் காண்; மலையாள் நெடு மங்கலக் கணவன் காண்; கலை ஞானிகள் காதல் எண்- குணவன் காண்; குரங்காடுதுறைதனில் அணவன் காண், அன்புசெய்யும் அடியர்க்கே. | [4] |
ஞாலத்தார் தொழுது ஏத்திய நன்மையன்; காலத்தான் உயிர் போக்கிய காலினன்; நீலத்து ஆர் மிடற்றான்; வெள்ளை நீறு அணி கோலத்தான் குரங்காடுதுறையனே. | [5] |
ஆட்டினான், முன் அமணரோடு என்தனை; பாட்டினான், தன பொன் அடிக்கு இன் இசை; வீட்டினான், வினை; மெய் அடியாரொடும் கூட்டினான் குரங்காடுதுறையனே. | [6] |
மாத்தன்தான், மறையார் முறையால்; மறை- ஓத்தன்; தாருகன் தன் உயிர் உண்ட பெண் போத்தன்தான்; அவள் பொங்கு சினம் தணி கூத்தன்தான் குரங்காடுதுறையனே. | [7] |
நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள்! ஆடுமின்(ன்)! அழுமின்! தொழுமின்(ன்)! அடி பாடுமின்! பரமன் பயிலும்(ம்) இடம், கூடுமின், குரங்காடுதுறையையே! | [8] |
தென்றல் நன்நெடுந்தேர் உடையான் உடல் பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்; அன்று அவ் அந்தகனை அயில்சூலத்தால் கொன்றவன் குரங்காடுதுறையனே. | [9] |
நல்-தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம் உற்ற நல்மொழியால் அருள்செய்த நல் கொற்றவன் குரங்காடுதுறை தொழ, பற்றும் தீவினை ஆயின பாறுமே. | [10] |
கடுத்த தேர் அரக்கன் கயிலை(ம்) மலை எடுத்த தோள்தலை இற்று அலற(வ்) விரல் அடுத்தலும்(ம்), அவன் இன் இசை கேட்டு அருள் கொடுத்தவன் குரங்காடுதுறையனே. | [11] |