சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.048   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவெண்காடு - சீகாமரம் தீரசங்கராபரணம் நாதநாமக்கிரியை கஜகௌரி ராகத்தில் திருமுறை அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி

மக்கட் செல்வம் வாய்க்க, வாதத்திறமை, எழுத்தாற்றல், தத்துவஞானத் தெளிவைப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=BIiW3xaWvB0   Add audio link Add Audio

கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும்,
பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும்,
பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும்,
வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.

1
வெண்காட்டில் உறையும் பெருமான், நுதலிடைக் கண் கொண்டவன்: கையில் கனல் ஏந்தியவன்: உமையம்மையை ஒரு கூறாகக் கொண்ட திருமேனியன்: பிறையணிந்த சடைமுடியினன்: பண்ணில் இசைவடிவானவன்: பயிரை வளர்க்கும் மேகமானவன்: விடைஏந்திய கொடியை உடையவன்.

பேய் அடையா, பிரிவு எய்தும், பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா, ஒன்றும்;
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர்
தோய் வினையார் அவர்தம்மைத் தோயா ஆம், தீவினையே.

2
மூங்கில் போன்ற திரண்ட தோளினை உடைய உமையம்மை பங்கன் எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள முக்குளநீரில் மூழ்கி எழுந்து வழிபடுவாரைப் பேய்கள் சாரமாட்டா. பேய் பிடித்திருந்தாலும் விலகும். மகப்பேறு வாய்க்கும். மனவிருப்பங்கள் ஈடேறுவதை இறைவர்பால் அவர் பெறுவர். சிறிதும் சந்தேகம் வேண்டா.

மண்ணொடு, நீர், அனல், காலோடு, ஆகாயம், மதி, இரவி,
எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும்,
பெண்ணினொடு, ஆண், பெருமையொடு, சிறுமையும், ஆம் பேராளன்
விண்ணவர்கோள் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.

3
மண், நீர், அனல், காற்று, ஆகாயம், மதி, இரவி, எண்ணற்றனவாயுள்ள உயிர்கள் ஆகிய எட்டு மூர்த்தங்களுடன் இம்மை, மறுமை எண்திசை, பெண் ஆண் ஆகியனவாகவும் பெரியதில் பெருமை, சிறியதில் சிறுமை ஆகியனவாகவும் விளங்கும் புகழாளனாகிய சிவபிரான், இந்திரன் வழிபடத்திருவெண்காட்டைத் தனது இருப்பிடமாக்கிக் கொண்டு எழுந்தருளியுள்ளான்.

விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவில்,
மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று,
தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய,
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.

4
நஞ்சுண்ட கண்டனாகிய சிவபிரான் எழுந்தருளிய வெண்காட்டை அடுத்துள்ள தண்காட்டில் மடல்விரிந்த வளைந்த தாழைமலர் நிழலைக் குருகு என்றெண்ணி நீர்நிலையில் வாழும் கெண்டைமீன்கள் தாமரைப்பூவின் அடியில் மறைய அதனைக்கண்ட கடல்முத்துக்கள் நகைப்பது போல ஒளி விடும் காட்சியால் புலப்படுகிறது.

வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன்
மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன் தூதர்,
ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே.

5
கடல்நீர் நிரம்பிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த வெண்காட்டு இறைவன் திருவடிகளை மாலைகளாலும் நிறைந்த வளமையான சந்தனத்தாலும் வழிபட்ட மறையவராகிய சுவேதகேதுவின் உயிரைக் கவரவந்த இயமனை அச்சிவன் உதைத்து அழித்ததால் அந்த இயமனுடைய தூதர்கள் சிவபிரான் அடியவர் என்றால் அஞ்சி விலகுவர்.
Go to top

தண்மதியும் வெய்ய(அ)ரவும் தாங்கினான், சடையின் உடன்;
ஒண்மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான்; உறை கோயில்
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத, பசுங்கிள்ளை
வெண் முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே.

6
தனது சடைமுடியோடு தண்மதியையும் வெய்ய அரவையும் தாங்கியவனும் ஒளி பொருந்திய மதி போன்ற நுதலை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான், உறையும் கோயில், பசிய கிளிகள் இனிய குரலால் இறைவன் திருப்பெயர்களை ஓதிக்கொண்டு வெண்முகில் சேரும் உயரிய கரியபனை மீது வீற்றிருக்கும் வெண்காடாகும்.

சக்கரம் மாற்கு ஈந்தானும்; சலந்தரனைப் பிளந்தானும்;
அக்கு அரைமேல் அசைத்தானும்; அடைந்து அயிராவதம் பணிய,
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும், வினை துரக்கும்
முக்குளம், நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே.

7
திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவனும், சலந்தராசுரனைப் பிளந்து அழித்தவனும், இடையில் எலும்புமாலை அணிந்துள்ளவனும், தன்னை அடைந்து ஐராவதம் பணிய அதற்கு மிகுதியான அருளைச் சுரப்பவனும், வினைகளைப் போக்கும் முக்குளங்களை உடையவனும் திருவெண்காட்டில் எழுந்தருளிய முக்கண்ணனாகிய இறையவனே ஆவான்.

பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள் செய்தான் உறை கோயில்
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட, கடல் முழங்க,
விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே.

8
பண்ணிசை போலும் இனிய மொழியினளாகிய பார்வதிதேவி அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த பித்தனாகிய இராவணனின் மார்பை நெரித்துப்பின் அருள் செய்த சிவபிரான் உறையும் கோயில், கண்கள் பொருந்திய தோகையைக் கொண்ட நீலமயில்கள் நடனமாடவும், கடல் முழங்கவும், வானளாவிய பொழிலில் வரிவண்டுகள் இசைபாடவும் விளங்கும் திருவெண்காடாகும்.

கள் ஆர் செங்கமலத்தான், கடல் கிடந்தான், என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும், உணர்வு அரியான்
வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள் ஆடி உருகாதார் உணர்வு, உடைமை, உணரோமே.

9
தேன் பொருந்திய செந்தாமரையில் எழுந்தருளிய நான்முகன் கடலிடைத் துயிலும் திருமால் ஆகியோர் தன்முனைப்பு நீங்கிச் சிறந்த அடியவர் ஆதற் பொருட்டு மிகஉயர்ந்தும் ஆழ்ந்தும் அவர்கள் உணர்தற்கு அரியவனாகிய சிவபிரான் வெள்ளானை தவஞ்செய்து வழிபடும் நிலையில் சிறந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ளான் என்று மனங்கசிந்து உருகாதவரின் ஞானத்தை மதியோம்.

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருள் என்னும்
பேதையர்கள் அவர்; பிறிமின்! அறிவு உடையீர்! இது கேண்மின்;
வேதியர்கள் விரும்பிய சீர் வியன்திரு வெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே!

10
போதிமரத்தின் அடியில் தவம் செய்யும் புத்தர்கள், அசோகமரநிழலில் தவம் செய்யும் சமணர்கள் கூறும் வன்புரைகளைப்பொருளாகக் கருதும் பேதையர்களைப் பிரிவீர்களாக. அறிவுடையவரே! இதனைக் கேளுங்கள். வேதியர்கள் விரும்பும் புகழுடைய பெரிய திருவெண்காட்டில் உறையும் ஈசன் பெயர்களை ஓதியவர் ஒரு தீங்கும் இலராவர் என்று உணருமின்.
Go to top

தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்,
மண் பொலிய வாழ்ந்தவர், போய் வான் பொலியப் புகுவாரே.

11
குளிர்ந்த பொழிலால் சூழப்பட்ட சண்பை நகர்த்தலைவனாகிய தமிழ்ஞானசம்பந்தன், விண்ணிற் பொலியும் பிறைமதி சேர்ந்த சென்னியினை உடைய விகிர்தன் உறையும் திருவெண்காட்டைப் பண்ணிசை பொலியப்பாடிய இச்செந்தமிழ் மாலைபத்தையும் வல்லவர், மண்பொலிய வாழ்வதோடு வான்பொலியவும் சென்று வாழ்வர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவெண்காடு
2.048   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கண் காட்டும் நுதலானும், கனல்
Tune - சீகாமரம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
2.061   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!
Tune - காந்தாரம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
3.015   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மந்திர மறையவர், வானவரொடும், இந்திரன், வழிபட
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
5.049   திருநாவுக்கரசர்   தேவாரம்   பண் காட்டிப் படிஆய தன்
Tune - திருக்குறுந்தொகை   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
6.035   திருநாவுக்கரசர்   தேவாரம்   தூண்டு சுடர் மேனித் தூநீறு
Tune - திருத்தாண்டகம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
7.006   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   படம் கொள் நாகம் சென்னி
Tune - இந்தளம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)

This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org or in the WhatsApp