சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.078   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவேதிகுடி - சாதாரி பவப்ரியா பந்துவராளி காஞ்சனாவதி ராகத்தில் திருமுறை அருள்தரு மங்கையர்க்கரசியம்மை உடனுறை அருள்மிகு வேதபுரீசுவரர் திருவடிகள் போற்றி

கணவன்‌ மனைவி ஒற்றுமையுடன்‌ வாழ ஓத வேண்டிய பதிகம்‌ ‌
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=QWAjJTbfqv0   Add audio link Add Audio

நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை பூண்பர்; இடபம்,
ஏறுவர்; யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர்; இருந்த இடம் ஆம்
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற, இணைவாளை மடுவில்
வேறு பிரியாது விளையாட, வளம் ஆரும் வயல் வேதிகுடியே.

1
திருநீற்றினையும் , வரிகளையுடைய ஆடும் பாம்பையும் , ஆமையோட்டையும் , அக்குமணியையும் , எலும்பு மாலையையும் சிவபெருமான் அணிந்துள்ளார் . அவர் இடப வாகனத்தில் ஏறுவார் . யாவரும் வணங்கத்தக்க முதல்வராகிய சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பாளைகள் விரிந்த பாக்குமரங்கள் நிறைந்த சோலைகளிலும் , பழங்கள் கனிந்த வாழைத் தோட்டங்களிலும் நறுமணம் வீச , மடுக்களில் ஆணும் , பெண்ணுமான வாளை மீன்கள் வேறு பிரியாமல் விளையாடும் , வயல்வளமிக்க திருவேதிகுடி ஆகும் .

சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர், தொல் ஆனை உரிவை
மல் புரி புயத்து இனிது மேவுவர், எந்நாளும் வளர் வானவர் தொழத்
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர், இயன்ற தொகு சீர்
வெற்பு அரையன் மங்கை ஒரு பங்கர், நகர் என்பர் திரு வேதிகுடியே.

2
சிவபெருமான் இசையும் , சொல்லின் மெய்ப்பொருளும் பிரிதல் இல்லாத வேதத்தைப்பாடி நடனம் ஆடுவார் . முதிர்ந்த யானையின் தோலை உரித்து மல்யுத்தம் புரிய வல்ல தோளில் இனிதாக அணிவார் . நாள்தோறும் தேவர்கள் வணங்க , உண்ணுதற்கரிய நஞ்சை அமுதமாக முற்காலத்தில் உண்டருளியவர் . பலவாற்றானும் புகழ்மிக்க மலையரையன் மகளாகிய உமாதேவியாரை ஒருபாகமாகக் கொண்டருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி என்பதாம் .

போழும் மதி, பூண் அரவு, கொன்றைமலர், துன்று சடை வென்றி புக மேல்
வாழும் நதி தாழும் அருளாளர்; இருள் ஆர் மிடறர்; மாதர் இமையோர்
சூழும் இரவாளர்; திருமார்பில் விரி நூலர்; வரிதோலர்; உடைமேல்
வேழ உரி போர்வையினர்; மேவு பதி என்பர் திரு வேதிகுடியே.

3
சிவபெருமான் வட்டத்தைப் பிளந்தாலனைய பிறைச்சந்திரனை அணிந்தவர் . பாம்பு , கொன்றைமலர் இவற்றைச் சடையிலணிந்து , அதில் தங்கிய கங்காநதியைப் பகீரதன் முயற்சிக்கு வெற்றி உண்டாக உலகிற் பாயச்செய்த அருளாளர் . விடம் உண்டதால் கருநிறம் வாய்ந்த கண்டத்தையுடையவர் . தேவலோகத்திலுள்ள மகளிரும் , ஆடவரும் தங்கள் குறைகளைக் கூறி அவை தீர அருளை வேண்டுபவர் . அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவர் . புலித் தோலாடை அணிந்தவர் . அதன் மேல் யானைத்தோலைப் போர்த்தவர் . அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி ஆகும் .

காடர், கரி காலர், கனல் கையர், அனல் மெய்யர், உடல் செய்யர், செவியில்-
தோடர், தெரி கீளர், சரி கோவணவர், ஆவணவர் தொல்லை நகர்தான்-
பாடல் உடையார்கள் அடியார்கள், மலரோடு புனல் கொண்டு பணிவார்
வேடம் ஒளி ஆன பொடி பூசி, இசை மேவு திரு வேதிகுடியே.

4
சிவபெருமான் சுடுகாட்டில் இருப்பவர் . யானையின் தோலை உரித்து அதற்குக் காலனாக ஆனவர் . நெருப்பைக் கையில் ஏந்தியவர் . நெருப்புப் போன்ற சிவந்த மேனி உடையவர் . தூய உடம்பினர் . காதில் தோட்டை அணிந்தவர் . கிழிந்த ஆடை அணிந்தவர் . சரிந்த கோவணத்தை அணிந்தவர் . பசுவேறி வரும் கோலத்தை யுடையவர் . அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் பழமையான நகரானது , தோத்திரம் பாடும் அடியார்கள் புனிதநீரால் அபிடேகம் செய்து , மலரால் அர்ச்சித்து வணங்கி , சிவவேடத்தை நினைப்பூட்டும் திருவெண்ணீற்றினைப் பூசிக் கீர்த்தியுடன் விளங்குகின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .

சொக்கர்; துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து, தொழும் மூவர் மகிழத்
தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார்; இனிது தங்கும் நகர்தான்-
கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரிவண்டு இசை குலாம்,
மிக்க அமரர் மெச்சி இனிது, அச்சம் இடர் போக நல்கு, வேதிகுடியே.

5
சிவபெருமான் மிக்க அழகுடையவன் . கோபத்தால் சிரித்து மும்மதில்களும் வெந்தழியுமாறு செய்தபோது , அங்கிருந்த மூவர் தன்னை வணங்கிப் போற்ற அவர்கள் மகிழும்படியாகத் தன் பக்கத்திலே இருக்கும்படி அருள்புரிந்தவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் நகராவது , மாமரச் சோலைகளில் மகளிர் விளையாடும் ஆரவாரமும் , மகளிரின் மேனி ஒளியானது மாந்தளிர்களை வென்ற வெற்றி பற்றி வரிவண்டுகள் இசைபாடும் ஒலியும் , தேவர்கள் போற்றும் ஒலியும் கொண்டு , தன்னையடைந்து வழிபடுபவர்களின் அச்சமும் , துன்பமும் நீங்க நன்மையை அளிக்கும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .
Go to top

செய்ய திரு மேனிமிசை வெண்பொடி அணிந்து, கருமான் உரிவை போர்த்து
ஐயம் இடும்! என்று மடமங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம்
வையம் விலை மாறிடினும், ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார்
வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர், வேதிகுடியே.

6
சிவபெருமான் தம் சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றை அணிந்தவர் . கரிய யானையின் தோலைப் போர்த்தவர் . ` பிச்சையிடுங்கள் ` என்று இளமைவாய்ந்த உமாதேவி யாரோடு வீடுவீடாகத் திரிகின்றவர் , நம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இப்பூமியில் பஞ்சத்தால் பண்டங்களின் விலை ஏறினாலும் , மிகுந்த புகழும் , குறையாத பண்பாடும் உடையவர்களும் , இனிய புலவர்கட்குக் கொடையளிக்கும்போது வன்சொற்கள் சொல்லாத் தன்மையுடையவர்களும் ஆகிய மாந்தர்கள் வாழ்கின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .

உன்னி இருபோதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்க அருளித்
துன்னி ஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடம் ஆம்
கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி, அரு மங்கலம் மிக,
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே.

7
காலை , மாலை ஆகிய இருவேளைகளிலும் தியானித்துத் தன் திருவடிகளைப் போற்றும் அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி அருள்செய்பவன் சிவபெருமான் . தன்னை யடைந்த சனகர் , சனந்தனர் , சனாதனர் , சனற் குமாரர் என்ற நான்கு முனிவர்கட்கும் கல்லால மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி கோலம் கொண்டு அறம் உரைத்தவன் . அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாய் விளங்குபவன் . அவன் உறைவிடம் கன்னியர்களும் , ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் செய்து கொள்ளும் மங்கலநாளில் திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகளை மிகச் சிறப்புற நடத்துகின்ற மின்னலைப் போன்ற நுண்ணிடையுடைய மகளிர்கள் வாழும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .

உரக் கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடிதோள்
அரக்கனை அடர்த்தவன், இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன், இடம்
முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை
விரைக் குழல் மிகக் கமழ, விண் இசை உலாவு திரு வேதிகுடியே.

8
கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற அரக்கனான இராவணனின் தலைகளையும் , தோள்களையும் , நெஞ்சிலும் , கரத்திலும் நெருப்புப்போல் வருத்துமாறு மலையின்கீழ் அடர்த்து , பின் அவன் சாமகானம் இசைக்க அவனுக்கு ஒளி பொருந்திய வெற்றிவாளையும் , நீண்ட வாழ்நாளையும் அருளிய பெருங்கருணையாளனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , கல்யாண முருங்கைப்பூப் போன்ற உதடுகளையுடைய , இளங்கொடி போன்ற பெண்களும் , ஆடவர்களும் , நறுமணம் கமழும் கலவையைக் கூந்தலில் தடவ , அதன் மணமானது விண்ணுலகிலும் பரவ விளங்கும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .

பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட, எரி ஆய்,
தேவும் இவர் அல்லர், இனி யாவர்? என, நின்று திகழ்கின்றவர் இடம்
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம்,
மேவு அரிய செல்வம் நெடுமாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே.

9
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனுடன் , சக்கராயுதத்தை ஏந்திய அழகிய கையையுடைய திருமாலும் தேட , தீப்பிழம்பாகி , இப்பெருமானை அன்றி வேறு கடவுள் இல்லை என ஏத்தப்பெறும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , புலவர்கள் ஓசையினிமையுடைய இயற்றமிழ் நூற்பொருளை உரைக்க , கேள்விச் செல்வத்தினை நீங்காத கொடை வள்ளல்கள் செவிமடுக்குமாறு , செல்வம் மிகுந்த நெடிய மாடமாளிகைகளும் , வீதிகளும் திகழ்கின்ற திருவேதிகுடி என்பதாகும் .

வஞ்ச(அ)மணர், தேரர், மதிகேடர், தம் மனத்து அறிவு இலாதவர் மொழி
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம்
அஞ்சுபுலன் வென்று, அறுவகைப் பொருள் தெரிந்து, எழு இசைக் கிளவியால்,
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே.

10
வஞ்சனையுடைய சமணர்களும் , புத்தர்களும் கெட்ட மதியுடையவர்கள் . இறைவனை உணரும் அறிவில்லாத அவர்கள் கூறும் மொழிகள் பற்றுக்கோடாகத் தக்கன என்று எந்நாளும் நினையாத அடியார்கள் தியானிக்கின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது ஐம்புலன்களை வென்று , அறுவகைச் சமய நூற் பொருள்களை ஆராய்ந்து , ஏழுவகைச் சுரங்களால் இசைப்பாடல்களைப் பாடி , கோபத்தை ஒழித்த அருளாளர்கள் மேவி விளங்குகின்ற திருவேதிகுடி ஆகும் .
Go to top

கந்தம் மலி தண்பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்-
பந்தன் மலி செந்தமிழின் மாலைகொடு, வேதிகுடி ஆதி கழலே
சிந்தை செய வல்லவர்கள், நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி, இமையோர்
அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம்; ஆணை நமதே.

11
நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளும் , அழகிய மாடங்களும் நெருங்கிய சீகாழியில் அவதரித்த ஞான சம்பந்தன் பொருட்செறிவுடைய செந்தமிழில் அருளிய இப்பாமாலை கொண்டு திருவேதிகுடியில் வீற்றிருந்தருளும் முதல்வனான சிவ பெருமானின் திருவடிகளைச் சிந்தித்துப் போற்றுபவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வர் . மறுமையில் தேவலோகத்தை அடைந்து அரசாள்வர் . இது நமது ஆணை .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவேதிகுடி
3.078   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீறு, வரி ஆடு அரவொடு,
Tune - சாதாரி   (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)
4.090   திருநாவுக்கரசர்   தேவாரம்   கையது, கால் எரி நாகம்,
Tune - திருவிருத்தம்   (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)

This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org or in the WhatsApp