பரசு பாணியர், பாடல் வீணையர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
அரசு பேணி நின்றார், இவர் தன்மை அறிவார் ஆர்?
|
1
|
சிவபெருமான் மழுப்படையைக் கையில் ஏந்தியவர் . வீணையில் பாட்டிசைப்பவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் ஆட்சி புரிந்து அருள்புரிபவர் . இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார் ? ஒருவரும் அறியார் . | |
பட்டம் நெற்றியர், நட்டம் ஆடுவர், பட்டினத்து உறை
பல்லவனீச்சுரத்து
இட்டம் ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
|
2
|
தலைமைப் பட்டத்திற்குரிய அடையாள அணிகலன் அணிந்த நெற்றியர் . திருநடனம் செய்பவர் . காவிரிப்பூம் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார் ? | |
பவளமேனியர், திகழும் நீற்றினர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
அழகராய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
|
3
|
சிவபெருமான் பவளம் போன்ற சிவந்த மேனியுடையவர் , ஒளிபொருந்திய திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அழகர் . இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார் ? | |
பண்ணில் யாழினர், பயிலும் மொந்தையர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
அண்ணலாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
|
4
|
இறைவன் பண்ணிசைக்கும் யாழினை உடையவர் . மொந்தை என்னும் வாத்தியத்தை வாசிப்பவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் தலைவர் . இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார் ? | |
பல் இல் ஓட்டினர், பலி கொண்டு உண்பவர், பட்டினத்து
பல்லவனீச்சுரத்து
எல்லி ஆட்டு உகந்தார், இவர் தன்மை அறிவார் ஆர்?
|
5
|
சிவபெருமான் பற்களே இல்லாத மண்டை யோட்டில் பிச்சையேற்று உண்பவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர் . இரவில் நடனம் ஆடுதலை விரும்புபவர் . இவர் தன்மை யார் அறிவார் ? | |
| Go to top |
பச்சை மேனியர், பிச்சை கொள்பவர், பட்டினத்து உறை
பல்லவனீச்சுரத்து
இச்சை ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
|
6
|
சிவபெருமான் பச்சைநிறம் கொண்ட திருமேனி உடையவர் . பிச்சையேற்று உண்பவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . இவர் தன்மை யார் அறிவார் ? | |
பைங்கண் ஏற்றினர், திங்கள் சூடுவர், பட்டினத்து உறை
பல்லவனீச்சுரத்து
எங்கும் ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
|
7
|
இறைவன் பசிய கண்களையுடைய எருதின்மேல் ஏறுபவர் . பிறைச்சந்திரனை சூடியுள்ளவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளினாலும் , எங்கும் வியாபித்துள்ளவர் . இவர் தன்மை யார் அறிவார் ? | |
பாதம் கைதொழ வேதம் ஓதுவர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
ஆதியாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
|
8
|
தம் திருவடிகளைக் கைகளால் தொழுது உலகத்தினர் நன்மையடையும் பொருட்டு வேதங்களைச் சிவ பெருமான் அருளிச்செய்தார் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியாய் இருப்பவர் . இவரது தன்மையை யார் அறிவார் ? | |
படி கொள் மேனியர், கடி கொள் கொன்றையர், பட்டினத்து
உறை பல்லவனீச்சுரத்து
அடிகளாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
|
9
|
இறைவன் உலகம் முழுவதையும் தம் திருமேனியாகக் கொண்டவர் . நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளவன் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன் . இவன் தன்மை யார் அறிவார் ? | |
பறை கொள் பாணியர், பிறை கொள் சென்னியர், பட்டினத்து
உறை பல்லவனீச்சுரத்து
இறைவராய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
|
10
|
இறைவன் பறை என்னும் இசைக்கருவியை உடையவன் . பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்துள்ளவன் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் யாவர்க்கும் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன் . இவர் தன்மை யார் அறிவார் ? | |
| Go to top |
வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர்
பல்லவனீச்சுரத்தானை
ஞானசம்பந்தன் நல்-தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே.
|
11
|
அழகிய காவிரிப்பூம்பட்டினப் பல்லவனீச்சரத்து இறைவனைப் போற்றி , ஞானசம்பந்தன் அருளிய இந்நற்றமிழ்த் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் நற்குணங்கள் வாய்க்கப் பெறுவர் . அவர்கள் மறுமையில் வானுலகை ஆள்வதற்குத் தடையொன்றுமில்லை . | |