நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்; என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்; சென்று, நீர், திரு வேட்களத்துள்(ள்) உறை துன்று பொன்சடையானைத் தொழுமினே!
|
1
|
திருவேட்களத்துள்ளுறைகின்ற நெருங்கிய பொலிவார்ந்த சடையுடைய ஈசனைத் தொழுவீர்களாக ; அங்ஙனம் தொழுதால் நாள்தொறும் நம்வினை பெரிதும் தொலையும் ; என்றும் இன்பம் தழைக்க இருந்து உய்யலாம் . | |
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்; பொருப்பு வெஞ்சிலையால் புரம் செற்றவன்; விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது இருப்பன் ஆகில், எனக்கு இடர் இல்லையே.
|
2
|
கரும்பாகிய விருப்பத்தை விளைக்கும் வில்லை உடைய மன்மதனைக் காய்ந்தவனும் , மேருமலையாகிய வில்லினால் முப்புரங்களைச் செற்றவனும் , அடியார்களிடத்து விருப்பம் உடையவனும் ஆகிய பெருமான் உறையும் வேட்களத்தைக் கைதொழுது இருந்தேனாயின் , எனக்கு இடர்களே இல்லை . | |
வேட்களத்து உறை வேதியன், எம் இறை; ஆக்கள் ஏறுவர்; ஆன் ஐஞ்சும் ஆடுவர்; பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால் காப்பர் நம்மை, கறைமிடற்று அண்ணலே.
|
3
|
வேட்களத்துறையும் வேதியனும் , எம் இறைவனும் , திருநீலத் திருமிடறு உடைய தலைவனும் ஆகிய பெருமான் விடையுகந்து ஏறுவர் ; பஞ்சகவ்வியம் ஆடுவர் ; பூக்களைக்கொண்டு திருவடி போற்றினால் நம்மைக் காப்பர் . | |
அல்லல் இல்லை; அருவினைதான் இல்லை- மல்கு வெண்பிறை சூடும் மணாளனார், செல்வனார், திரு வேட்களம் கைதொழ வல்லர் ஆகில்; வழி அது காண்மினே!
|
4
|
நிறைந்த வெண்பிறையைச் சூடும் மணவாளராகிய திருவேட்களத்து அருட்செல்வரைக் கைகளால் தொழ வல்லவராகில் அதுவே வழியாகும் ; காண்பீர்களாக ; அவ்வழியே நின்றால் அல்லல்கள் இல்லை ; அரிய வினைத் துன்பங்களும் இல்லையாம் . | |
துன்பம் இல்லை; துயர் இல்லை; யாம், இனி நம்பன் ஆகிய நல் மணிகண்டனார், என் பொனார், உறை வேட்கள நன்நகர் இன்பன், சேவடி ஏத்தி இருப்பதே.
|
5
|
நம்மவராகிய திருநீலகண்டனும் , என் பொன் போன்றவனும் ஆகிய இறைவன் உறைகின்ற திருவேட்கள நன்னகரில் இன்பமே வடிவாகிய அவன் சேவடியை ஏத்தியிருப்பதனால் , இனித் துன்பமும் இல்லை ; துயரங்களும் இல்லை . | |
| Go to top |
கட்டப்பட்டுக் கவலையில் வீழாதே பொட்ட வல் உயிர் போவதன் முன்னம், நீர், சிட்டனார் திரு வேட்களம் கைதொழ பட்ட வல்வினை ஆயின பாறுமே.
|
6
|
கவலைகளாற் கட்டப்பெற்று வீழ்ந்திடாது , விரைந்து உயிர்போவதற்கு முன்பே நீர் , உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள திருவேட்களம் கைதொழுவீர்களாக ; தொழுவீராயின் , பொருந்திய வல்வினைகள் அனைத்தும் கெடும் . | |
வட்ட மென் முலையாள் உமை பங்கனார், எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார், சிட்டர், சேர் திரு வேட்களம் கைதொழுது இட்டம் ஆகி இரு, மட நெஞ்சமே!
|
7
|
அறியாமை உடைய நெஞ்சமே ! வட்ட வடிவாகிய மென்முலைகளை உடைய உமாதேவியை ஒருபங்கில் உடையவரும் , எட்டு மூர்த்தியானவரும் , ஒரு பரம்பொருளானவரும் , இரண்டு ( சிவம் , சத்தி ) ஆனவரும் , மும்மூர்த்தியானவரும் உறைகின்ற சிறப்புடையதும் , உயர்ந்தவர்கள் சேர்ந்ததுமான திருவேட்களம் கைதொழுது விருப்புற்று இருப்பாயாக . | |
நட்டம் ஆடிய நம்பனை, நாள்தொறும் இட்டத்தால் இனிது ஆக நினைமினோ- வட்டவார் முலையாள் உமை பங்கனார், சிட்டனார், திரு வேட்களம் தன்னையே!
|
8
|
வட்டவடிவமாகிய மென்முலைகளை உடைய உமாதேவியை ஒருபங்கில் உடையவரும் , உயர்ந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவேட்களத்தையும் , அங்கு நட்டமாடிய நம்பனையும் , நாள்தோறும் விருப்பத்துடன் இனிது நினைப்பீராக . | |
வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண் சுட்ட கொள்கையர் ஆயினும், சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும் சிட்டர்போல்-திரு வேட்களச் செல்வரே.
|
9
|
திருவேட்களத்து அருட்செல்வர் வட்டமாக வளைந்த மதில்கள் சூழ்ந்த திரிபுரங்கள் மூன்றையும் சுட்ட கொள்கையர் ஆயினும் , தம்மைச் சூழ்ந்தவர் வல்வினைகளைத் தீர்த்து அவர்களைக் குளிர்விக்கும் சிட்டராவர் . | |
சேடனார் உறையும் செழு மாமலை ஓடி அங்கு எடுத்தான் முடிபத்து இற வாட ஊன்றி, மலர் அடி வாங்கிய வேடனார் உறை வேட்களம் சேர்மினே!
|
10
|
பெருமை உடையனாய பெருமான் உறையும் திருமாமலையாகிய திருக்கயிலாயத்தை ஓடி எடுத்தவனாகிய இராவணன் முடிகள் பத்தும் இறும்படியாக வாட ஊன்றி , மலரடியினை வளைத்த வேடனார் உறைகின்ற திருவேட்களம் சேர்வீராக . | |
| Go to top |