சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.042   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவேட்களம் - திருக்குறுந்தொகை அருள்தரு நல்லநாயகியம்மை உடனுறை அருள்மிகு பாசுபதேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=XxDlzhksrI0   Add audio link Add Audio

நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்;
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்;
சென்று, நீர், திரு வேட்களத்துள்(ள்) உறை
துன்று பொன்சடையானைத் தொழுமினே!

1
திருவேட்களத்துள்ளுறைகின்ற நெருங்கிய பொலிவார்ந்த சடையுடைய ஈசனைத் தொழுவீர்களாக ; அங்ஙனம் தொழுதால் நாள்தொறும் நம்வினை பெரிதும் தொலையும் ; என்றும் இன்பம் தழைக்க இருந்து உய்யலாம் .

கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்;
பொருப்பு வெஞ்சிலையால் புரம் செற்றவன்;
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது
இருப்பன் ஆகில், எனக்கு இடர் இல்லையே.

2
கரும்பாகிய விருப்பத்தை விளைக்கும் வில்லை உடைய மன்மதனைக் காய்ந்தவனும் , மேருமலையாகிய வில்லினால் முப்புரங்களைச் செற்றவனும் , அடியார்களிடத்து விருப்பம் உடையவனும் ஆகிய பெருமான் உறையும் வேட்களத்தைக் கைதொழுது இருந்தேனாயின் , எனக்கு இடர்களே இல்லை .

வேட்களத்து உறை வேதியன், எம் இறை;
ஆக்கள் ஏறுவர்; ஆன் ஐஞ்சும் ஆடுவர்;
பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால்
காப்பர் நம்மை, கறைமிடற்று அண்ணலே.

3
வேட்களத்துறையும் வேதியனும் , எம் இறைவனும் , திருநீலத் திருமிடறு உடைய தலைவனும் ஆகிய பெருமான் விடையுகந்து ஏறுவர் ; பஞ்சகவ்வியம் ஆடுவர் ; பூக்களைக்கொண்டு திருவடி போற்றினால் நம்மைக் காப்பர் .

அல்லல் இல்லை; அருவினைதான் இல்லை-
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்,
செல்வனார், திரு வேட்களம் கைதொழ
வல்லர் ஆகில்; வழி அது காண்மினே!

4
நிறைந்த வெண்பிறையைச் சூடும் மணவாளராகிய திருவேட்களத்து அருட்செல்வரைக் கைகளால் தொழ வல்லவராகில் அதுவே வழியாகும் ; காண்பீர்களாக ; அவ்வழியே நின்றால் அல்லல்கள் இல்லை ; அரிய வினைத் துன்பங்களும் இல்லையாம் .

துன்பம் இல்லை; துயர் இல்லை; யாம், இனி
நம்பன் ஆகிய நல் மணிகண்டனார்,
என் பொனார், உறை வேட்கள நன்நகர்
இன்பன், சேவடி ஏத்தி இருப்பதே.

5
நம்மவராகிய திருநீலகண்டனும் , என் பொன் போன்றவனும் ஆகிய இறைவன் உறைகின்ற திருவேட்கள நன்னகரில் இன்பமே வடிவாகிய அவன் சேவடியை ஏத்தியிருப்பதனால் , இனித் துன்பமும் இல்லை ; துயரங்களும் இல்லை .
Go to top

கட்டப்பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல் உயிர் போவதன் முன்னம், நீர்,
சிட்டனார் திரு வேட்களம் கைதொழ
பட்ட வல்வினை ஆயின பாறுமே.

6
கவலைகளாற் கட்டப்பெற்று வீழ்ந்திடாது , விரைந்து உயிர்போவதற்கு முன்பே நீர் , உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள திருவேட்களம் கைதொழுவீர்களாக ; தொழுவீராயின் , பொருந்திய வல்வினைகள் அனைத்தும் கெடும் .

வட்ட மென் முலையாள் உமை பங்கனார்,
எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார்,
சிட்டர், சேர் திரு வேட்களம் கைதொழுது
இட்டம் ஆகி இரு, மட நெஞ்சமே!

7
அறியாமை உடைய நெஞ்சமே ! வட்ட வடிவாகிய மென்முலைகளை உடைய உமாதேவியை ஒருபங்கில் உடையவரும் , எட்டு மூர்த்தியானவரும் , ஒரு பரம்பொருளானவரும் , இரண்டு ( சிவம் , சத்தி ) ஆனவரும் , மும்மூர்த்தியானவரும் உறைகின்ற சிறப்புடையதும் , உயர்ந்தவர்கள் சேர்ந்ததுமான திருவேட்களம் கைதொழுது விருப்புற்று இருப்பாயாக .

நட்டம் ஆடிய நம்பனை, நாள்தொறும்
இட்டத்தால் இனிது ஆக நினைமினோ-
வட்டவார் முலையாள் உமை பங்கனார்,
சிட்டனார், திரு வேட்களம் தன்னையே!

8
வட்டவடிவமாகிய மென்முலைகளை உடைய உமாதேவியை ஒருபங்கில் உடையவரும் , உயர்ந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவேட்களத்தையும் , அங்கு நட்டமாடிய நம்பனையும் , நாள்தோறும் விருப்பத்துடன் இனிது நினைப்பீராக .

வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண்
சுட்ட கொள்கையர் ஆயினும், சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர்போல்-திரு வேட்களச் செல்வரே.

9
திருவேட்களத்து அருட்செல்வர் வட்டமாக வளைந்த மதில்கள் சூழ்ந்த திரிபுரங்கள் மூன்றையும் சுட்ட கொள்கையர் ஆயினும் , தம்மைச் சூழ்ந்தவர் வல்வினைகளைத் தீர்த்து அவர்களைக் குளிர்விக்கும் சிட்டராவர் .

சேடனார் உறையும் செழு மாமலை
ஓடி அங்கு எடுத்தான் முடிபத்து இற
வாட ஊன்றி, மலர் அடி வாங்கிய
வேடனார் உறை வேட்களம் சேர்மினே!

10
பெருமை உடையனாய பெருமான் உறையும் திருமாமலையாகிய திருக்கயிலாயத்தை ஓடி எடுத்தவனாகிய இராவணன் முடிகள் பத்தும் இறும்படியாக வாட ஊன்றி , மலரடியினை வளைத்த வேடனார் உறைகின்ற திருவேட்களம் சேர்வீராக .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவேட்களம்
1.039   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்
Tune - தக்கராகம்   (திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)
5.042   திருநாவுக்கரசர்   தேவாரம்   நன்று நாள்தொறும் நம் வினை
Tune - திருக்குறுந்தொகை   (திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000